Wednesday, April 21, 2010

சாலட் 22-ஏப்ரல்-2010


எலுமிச்சை:அங்காடித் தெரு படம் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.ஒரு சில இடங்களில் மிகைப்படுத்தி காண்பித்திருப்பது போன்ற எண்ணம் தோன்றினாலும் வித்தியாசமான கதைக் களனை தேர்ந்தெடுத்தற்காகவே பாராட்டலாம்.

இந்த படத்தின் பாதிப்பினாலோ என்னவோ ஆதியும் ரங்கநாதன் தெரு : ஒரு எச்சரிக்கை என்று ரங்கனாதன் தெரு கூட்ட நெரிசலும் அதனால் ஏற்படக்கூடிய ஆபத்துகளையும் பற்றி பதிவிட்டிருந்தார்.

அதே நேரத்தில் சிங்கப்பூரிலும் ஒரு பரபரப்பான விஷயம் நடந்து கொண்டிருந்தது. அனைவருக்கும் தெரிந்த சிங்கப்பூரின் மிகப் பிரபலமும் பெரியதுமான முஸ்தபா செண்டரின் முதல் தளத்தை 40 மணிநேரத்திற்கு மூடி வைக்க சிங்கப்பூர் குடியுரிமை பாதுகாப்பு படை SCDF) உத்தரவு பிறப்பித்தது.

கூட்ட நெரிசலும் அதனால் விளையக்கூடிய ஆபத்துகளையும் காரணம் கூறி இந்த நீதிமன்ற உத்தரவு செயலாக்கப்ப்பட்டது. கிட்டத்தட்ட 75000 சதுர அடி கொண்ட முதல் தளத்தில் ஒரே நேரத்தில் 431 பேருக்கு மேல் இருந்தால் அது கூட்ட நெரிசலாக கருதப்படுகிறது.

இந்த அளவுக்குப் போகாவிட்டாலும் ரங்கனாதன் தெரு மற்றும் அங்குள்ள கடைகளில் போதுமான Fire Exit போன்ற அடிப்படை பாதுகாப்பு வசதிகளை எந்த அரசுத்துறையாவது கவனிக்கிறதா?ஆபத்துக் காலங்களில் தீயணைப்பு வண்டிகள் இந்த தெருவுக்குள் நுழையவாவது முடியுமா???

*************************************************************************************
திராட்சை:சிங்கப்பூர் தமிழர்களால் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் வெளிவந்துள்ளது. அரசு வரிவிலக்கு இல்லாத காரண்த்தாலோ என்னவோ "Kurushetram - 24 Hours of Anger" என்று ஆங்கிலத்தில் பெயரிடப்பட்ட இந்தப் படம் இந்த மாதம் 8 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளிவந்து வெற்றி!!!கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.


சிங்கையில் பிரபலமான விஷ்ணு, மதியழகன், குணாளன் போன்ற சின்னத்திரை நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இந்தப் படத்தை இந்த வாரக் கடைசியில் (அது வரை ஓடிக் கொண்டிருந்தால்) திரையரங்கில் பார்த்துவிட்டு விமர்சனம் எழுதப் பார்க்கிறேன்.படத்தைப் பற்றிய மேல் விவரங்களும் ட்ரெயிலரும் இங்கே
(மற்ற சிங்கைப் பதிவர்கள் ஆரும் ஒரு வாரத்துக்கு இந்த படத்த பாக்க கூடாது, விமர்சனம் எழுதக் கூடாதுன்னு உத்தரவு போடறேன்.)

*************************************************************************************
அன்னாசி:சன் டிவியில் "சன் குடும்ப விருதுகள்" என்று ஒன்றை ஆரம்பித்து பாடாய் படுத்துகிறார்கள். தொலைக்காட்சித் தொடர்களில் நடிப்பவர்களுக்கு போட்டியாம்!!! இதில் சிறந்த மாமியார், சிறந்த மருமகள், சிற்ந்த மாப்பிள்ளை என்று கேட்டகரிகள் வேறு. என்ன காரணத்தினாலோ ராதிகாவை இந்த குடும்பத்திலிருந்து விலக்கி வைத்திருக்கிறார்கள். (அ)நியாயமாக பார்த்தால் மனைவி, வைப்பாட்டி,மகள், அம்மா, மருமகள், மாமியார்,பாட்டி, பேத்தி,சித்தி, பெரியம்மா, அக்கா, தங்கை, ஓரகத்தியோட ஷட்டகரோட நாத்தனார் என்று எல்லா கேட்டகரியிலும் அவர் வந்திருக்க வேண்டும்.விஜய் டிவியில் ஜோடி நம்பர்-1 நிகழ்ச்சிக்கு ராதிகா நடுவராக வருவதற்கும் இதற்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா? தெரியவில்லை.

(மே-9-2010 பிற்சேர்க்கை: ஆரம்ப நிகழ்ச்சிகளில் ராதிகா இல்லாததால் மேலே இருப்பது போல் எழுதினேன். பின்னர் இறுதியில் விருது நிகழ்ச்சியில் அவருக்கு "வாழ்நாள் சாதனையாளர்" விருது வழங்கி என் முகத்தில் கரி பூசி விட்டார்கள்.)


*************************************************************************************
ஒரு சிறிய விளம்பர இடைவேளைக்குப் பின் சாலட் தொடரும்.




மிகவும் ரசித்த வானொலிக்கான விளாம்பரம்
*************************************************************************************
மாம்பழம்:சிங்கப்பூருக்கு வந்த புதிதில் சில இளைஞ, இளைஞிகள் வழிய வழிய போட்டுக் கொண்டிருக்கும் கால் சட்டைகளை பார்த்து பரிதாப்பட்டதுண்டு. "அய்யோ பாவம். என்ன கஷ்டமோ? புள்ளைங்க பேண்ட் வாங்கக் கூட காசில்லாம அப்பா, தாத்தாவோட பேண்டையெல்லாம் போட்டுட்டு திரியுதுங்க என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அப்புறம்தான் தெரிந்தது அது ஒரு பேஷனாம்.

"Sagging Pants" என்ற இந்த கண்றாவி பேஷனை தடை செய்ததுதான் இப்போது அமெரிக்காவில் பரபரப்பான செய்தி.இந்த தடையைப் பற்றிய விவாதங்களும் விதண்டாவாதங்களும் வழக்கம் போல் இணையம் முழுக்க பரவிக் கிடக்கிறது.

இருந்தாலும் இந்த தடையை அறிவிக்கும் முன் அதில் இருக்கும் சில அனுகூலங்களையும்
கன்ஸிடர் பண்ணியிருக்கலாம்.

ரொம்ப அவசரமா சௌச்சால்யம் போகணும்னா... பெல்ட், ஜிப்புன்னு அவுத்து டயத்த வேஸ்ட் பண்ணாம "அப்படியே" போகலாம்.

ஜாக்கி, ஹில் ஃபிகர்னு காஸ்ட்லியா அண்டர்வேர் வாங்கிட்டு அத பேண்டால மூடி வெச்சு என்ன பிரயோசனம்?
*************************************************************************************
வாழை:அலுவலக ஆணிகளுக்கு இடையே அவ்வப்போது வீட்டுக்கு வரும்போது பையனுடன் சேர்ந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டிய கடமைதான் பதிவுகள் பக்கம் அடிக்கடி வரமுடியாததற்கு ஒரு காரண்மாக சொல்லிக் கொள்ளலாம்."கற்றுக் கொள்ள" என்ற பிரயோகத்திற்கு காரணம் கீழிருப்பது போன்ற சில உரையாடல்கள்தான்.

ஹரீஷ்: அப்பா, எனக்கு ஒரு சந்தேகம்.

நான்: என்னடா?

ஹரீஷ்: "Ramu bought a Pair of Pants for $10" அப்படின்னா ஒரு பேண்ட் வாங்கினானா, இல்ல ரெண்டு பேண்ட் வாங்கினானா?

நான்: சாதரணமாவே பேண்ட் பற்றி சொல்லும்போது இங்கிலீஷ்ல "Pair of pants" னு Pluralல தாண்டா சொல்ற வழக்கம்.

ஹரீஷ்: ஏன் அப்படி சொல்லணும்?

நான்: தெரியலியே, ஒரு வேளை ரெண்டு கால் இருக்கறதுனாலயோ?

ஹரீஷ்: அப்போ, ரெண்டு கை இருக்கற சட்டைக்கு ஏன் "Pair of Shirts" னு சொல்றதில்ல?

நான்: தெரியலியே... கொஞ்சம் பொறுமையா இரு, கத்துண்டு சொல்றேன். என் ப்ளாக் படிக்கறவங்க, ஃபாலோயர்ஸ் எல்லாம் பயங்கர ஜீனியஸ். நிச்சயமா பதில் சொல்லிருவாங்க பாரேன்.

Friday, April 2, 2010

"கார்பல் டனல் சிண்ட்ரோம்"

இந்த பதிவை எழுதிக்கொண்டிருக்கும் நான், படித்துக் கொண்டிருக்கும் நீங்கள் உட்பட நாமெல்லோரும் ஒரு நாளைக்கு சில(பல) மணிநேரங்களை கணிணியுடன் கழிக்கவேண்டியது காலத்தின் கட்டாயமாகிவிட்டது.டாம் கூட ஜெர்ரியை துரத்தி துரத்தி அலுத்திருக்கும், நாம் ஒரு நாளில் மௌஸை துரத்துமளவுக்கு துரத்தியிருந்தால்.

கூப்பிடுபவர்கள் கூடவெல்லாம் கேண்டின் போக கம்பெனி கொடுப்பது, கஷ்டப்பட்டு கொட்டாவியை அடக்கிக்கொண்டு மீட்டிங்குகளில் உட்கார்ந்திருப்பது, அம்மணிகளை தேடிப் போய் கடலை போடுவது என்றெல்லாம் ஓடாய் உழைத்தாலும் சில மணி நேரங்களாவது கணிணித் திரைக்கு முன் சீரியஸாய் முகத்தை வைததுக்கொண்டு பதிவுகளையாவது படித்துக்
கொண்டிருக்காவிட்டால் "இவனுக்கெல்லாம் வாங்கற சம்பளம் எப்படித்தான் செரிக்குதோ?" என்று உலகம் நம்மை ஏசும்.

வீட்டிற்கு வந்தாலும் இதையே தொடர்கிறோம்.அலுவலகத்தில் "நான் ரொம்ப பிஸி" என்று காட்டிக் கொள்வதற்காகவது வீட்டிலும் சில மணிநேரங்கள் அலுவலக வேலை செய்வது போல் நடித்துக்கொண்டே பதிவுகளை மேய்வது, ஆளே இல்லாத கடையில் டீ ஆத்துவது போல் பதிவு எழுதுவது, பின்னூட்டம் வந்திருக்கிறதா என்று செக் பண்ணுவது, ட்விட்டர், ஆர்குட், ஜி-டாக், ஃபேஸ் புக், ஃப்ளிக்கர், பிக்காஸோ என்று ஒரு கண்றாவியையும் விடாது ஓப்பன் பண்ணி பல மணிநேரங்களை தொடைக் கணிணியும் கையுமாக கழிக்கிறோம்.

இப்படி கணிணிகளுடன் நீண்ட நேரம் செலவிடுவதால் நமக்கு நேரக் கூடிய உடல் உபாதைகள் என்னவென்று நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

நடு இரவில் திடீரென்று எழுந்து கையை உதற வேண்டும் போல் தோன்றுகிறதா? உள்ளங்கையில் அரிப்பு, வலி, மரத்துப் போதல போன்றவை அறிகுறிகள் இருந்தால் நீங்கள் "கார்பல் டனல் சிண்ட்ரோம்" (Carpal Tunnel Syndrome) என்ற உபாதையின் ஆரம்ப நிலையில் இருப்பதாக அர்த்தம்.

ரெண்டு நாள் முன்னாடி வீட்டுக்காரம்மா தோசை வார்க்க சொன்னதோ, மனைவியுடன் ஷாப்பிங் போய் வருகையில் 20 கிலோ பையை பணிவுடன் தூக்கிக் கொண்டு வந்ததோதான் இதற்கு காரணம். ரெண்டு நாள்ல சரியா போயிரும்னு மனதை சமாதானப்படுத்திக் கொள்பவர்களுக்கு அடுத்த சில நாட்களில் மேலே சொன்ன அறிகுறிகள் பகலிலும் வர ஆரம்பிக்கும். மேலும் பேனா, பென்சில் போன்றவற்றை சரியாக பிடித்துக்கொள்ள முடியாமல் போகலாம். அடுத்த கட்டத்தில் சூடு, குளிர்ச்சி போன்றவற்றை உணர முடியாமல் போகக் கூடும்.


இந்த கார்ப்பல் டனல் என்பது நம் கைகளில் இருக்கும் மணிக்கட்டு பகுதியில் உள்ள எலும்புகள் மற்றும் சதைகளுக்கு இடையிலிருக்கும் ஒரு மிகச்சிறிய குகை. நம் கை விரல்களுக்கான கட்டளைகளை மூளையிலிருந்து கொண்டு செல்லும் நரம்பு இந்த குகை வழியாகத்தான் செல்கிறது.பல மணி நேரங்களுக்கு கீ போர்ட் மற்றும் மௌஸை இயக்குவது, வீடியோ கேம் விளையாடுவது போன்ற ஒரே மாதிரியான இயக்கங்களை திரும்ப திருமப செய்துகொண்டே இருப்பவர்களுக்கு இந்த குகைப்பகுதியில் இருக்கும் சதை மற்றும் சதைகளை எலும்புகளுடன் இணைக்கும் டெண்டன்களில்(Tendons) வீக்கம் ஏற்படக் கூடும்.

ஏற்கெனவே மிகச்சிறிய அளவில் இருக்கும் குகை, இத்தகைய வீக்கங்களால் மேலும் குறுகி, ஊடே செல்லும் நரம்பில் அழுத்தத்தை ஏற்படுத்திவிடும்.இந்த அழுத்தமே மேலே சொன்ன உபாதைகளுக்கான காரணம்.

தொழிற்சாலைகளில் அசெம்ப்ளி போன்ற துறைகளில் தொடர்ந்து தினமும் ஒரே மாதிரியான வேலைகளை செய்பவர்களுக்கும் இந்த பிரச்னை வருவதற்கான சாத்தியம் அதிகம்.

"அடடே... ஏற்கெனவே எனக்கு அப்பப்போ இந்த மாதிரி அறிகுறிகள் இருக்கே" என்பவர்கள் உடனடியாக தேவன் மாயம், ப்ரூனோ (ருத்ரன் இதுக்கு தோது பட மாட்டார்) போன்ற நல்ல மருத்துவர்களை அணுகுவது உசிதம்.அவர்களோ அல்லது அவர்கள் பரிந்துரைக்கும் சிறப்பு மருத்துவர்களோ மருந்து, மாத்திரை அல்லது அறுவை சிகிச்சை மூலம் குண்ப்படுத்தி விடுவார்கள்.

ஆண்களைவிட பெண்களுக்கே எளிதில் இந்த பிரச்னை வருவதற்கான வாய்ப்பு அதிகம். காரணம் அவர்களுக்கு இயற்கையிலயே இந்த கார்ப்பல் டனல் குகையின் சைஸ் சிறியது. ஆகவே சிறிய அளவு வீக்கத்திற்கு கூட பாதிப்பு அதிகம் வரக் கூடும்.

"ஹையா.. எனக்கெல்லாம் இந்த பிரச்னை இல்லையே" என்பவர்கள் வருமுன் காக்கும் நடவடிக்கைகளாக பின்பற்ற வேண்டியவை...

மடிக் கணிணி என்பது அடிக்கடி பயணிப்பவர்களுக்கு அத்தியாவசிய தேவைக்காக உருவாக்கப்பட்டது. தொடர்ந்து பல மணி நேரங்கள் உபயோகிப்பதாக இருந்தால் எக்ஸ்டெர்னல் மானிட்டர், கீ போர்ட் மற்றும் மௌஸ் உபயோகிப்பது நல்லது.

மணிக்கட்டு பகுதியை முடிந்த அளவு நேராகவே வைத்திருக்க் வேண்டும். மேல் நோக்கியோ அல்லது பக்கவாட்டிலோ வளைக்காமல் இருத்தல் நலம்.

கீ போர்டும் மௌஸும் பக்கம் பக்கமாக ஒரே தளத்தில் இருக்க வேண்டும்.

மேலே படத்தில் குறிப்பிட்டுள்ளபடி கைகளை நேச்சுரல் ஆங்கிளில் வைத்திருக்க வேண்டும்.

தொடர்ந்து ஓரே மாதிரியான வேலையை செய்யாமல் ஷெட்யூல் செய்து கொள்ள வேண்டும். மணிக்கு ஒரு தடவை சின்ன ப்ரேக் அல்லது வேறு வேலைகளை செய்ய வேண்டும்.நம்மில் பலரும் காலையில் நுழைந்தவுடனேயே மேஜையை க்ளீன் செய்வது, இருக்கும் காகிதங்களையெல்லாம் பைல் பண்ணுவது என்று எல்லாவற்றையும் முடித்துவிட்டுதான் ஒரேயடியாக தொடர்ந்து வேலையில் உட்காருவோம். அதற்கு பதிலாக இத்தகைய சிறு வேலைகளை மணிக்கொன்றாக செய்ய வேண்டும்.

தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் சுழற்சி முறையில் ஒருவருக்கொருவர் வேலைகளை மாற்றிக் கொள்ள வேண்டும்.

மேலே சொன்னவற்றையெல்லாம் பின்பற்றுவதன் மூலம் வாயில் நுழைவதற்கே கஷ்டமான பெயர் கொண்ட "கார்ப்பெல் டனல் சிண்ட்ரோம்" உடலுக்குள் நுழையாமல் காத்துக் கொள்ளலாம்.


டிஸ்கி: சமீப காலத்தில் அலுவலகத்தில் தேவையான பயிற்சிகளை அளித்தபின் கூடுதல் பணியாக "Office Ergonomics" ட்ரெயினர் மற்றும் ஆடிட்டராக நியமித்திருக்கிறார்கள். எனவே இது தொடர்பான மேலும் சில இடுகைகள் எதிர்காலத்தில் வரக் கூடும் என எச்சரிக்கிறேன்..