Sunday, August 2, 2009

புதிய வானம்... புதிய பூமி... எங்கும் பனி மழை பொழிகிறது-"இந்தியா ஒளிர்கிறது-எ"

தொடர்புடைய முந்தைய இடுகைகளுக்கு "இந்தியா ஒளிர்கிறது"

சிம்லாவை விட்டு வெளியில் வந்து மனாலி செல்லும் சாலையை தொட்டதிலிருந்து நம் கூடவே பயணிக்கிறது ப்யாஸ் நதியும். மிகவும் அற்புதமான சலிப்பே தட்டாத இயற்கை காட்சிகள் முழுநீளத்திற்கும் மனாலி வரை தொடர்கிறது. கிட்டத்தட்ட 13 மணி நேர பயணமாக இருந்தாலும் அலுப்பு தட்டுவதில்லை.

கூடவே பயணிக்கும் ப்யாஸ் நதி

மனாலியில் விடியற்காலையில் எழுந்து வெளியில் வந்த உடனேயே பளீரென்ற பனி போர்த்திய மலை உச்சிகள் கண்ணில் பட்டு அன்று நமக்கு கிடைக்கப்போகும் புதிய அனுபவத்திற்கு கட்டியம் கூறின. இதமான மெல்லிய குளிர்தான் இருந்ததே தவிர பெரிதாக ஒன்றும் விரைக்கும் குளிர் நடுக்கவில்லை.

காலையில் ஹோட்டலுக்கு வெளியில் வந்ததும் வரவேற்ற பனி மூடிய மலைகள்

மஹாபாரதத்தில் பீமனை காதலித்து திருமணம் செய்து கடோத்கஜன் என்ற பெரும் வீரனை பெற்றெடுத்த ஹிடும்பா தேவிக்கு ஒரு கோவில் மனாலியில் இருக்கிறது. பீமன் ஹிடும்பா தேவியுடன் ஒரு வருடம் குடும்பம் நடத்தி பின் தன் சகோதரர்களுடன் இணைந்ததாக கதை. இந்த பிரதேசத்தை கடோத்கஜன் வளரும் வரை ஹிடும்பா தேவி ஆட்சி புரிந்திருக்கிறார்.

ஹிடும்பாதேவி கோவில்

அடுத்து நாங்கள் சென்றது வஷிஷ்ட் சுடு நீர் ஊற்றுகள். இயற்கையிலேயே 110-123 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பத்தில் வரும் இந்த வெந்நீர் ஊற்றுகள் மருத்துவ குணங்கள் கொண்டதாய் கருதப்படுகிறது. இயற்கை வெந்நீர் ஊற்று என்றவுடன் தரையிலிருந்து கொதிக்க கொதிக்க நீர் பீறிட்டு கொண்டு வரும் அதில் நாமெல்லாம் குளிக்கலாம் என்று ஆவலுடன் சென்ற எனக்கு பெரிய ஏமாற்றமே. இரண்டு பெரிய தொட்டிகள் கட்டி அதில் நம்ம ஊரில் குட்டைகளில் எருமைகள் ஊறுமே அது போல் ஏகப்பட்ட பேர் ஊறிக் கொண்டிருந்தார்கள்.

வெந்நீர்க் குட்டையில் ஊறிக் கொண்டு

தண்ணீர் எங்கிருந்து வருகிறது என்பதே தெரியவில்லை. இதைத்தவிர இரண்டு குழாய்களில் சுடு தண்ணீர் கொட்டி கொண்டிருந்தது. ரெண்டு சொட்டு கையில் பிடித்து தலையில் தெளித்துக் கொண்டு கிளாம்பி விட்டோம்.

குழாயில் வரும் வெந்நீர் ஊற்று

அங்கிருந்து இந்த பேருலாவின் உச்ச்கட்டமான ரோஹ்தங் பாஸ் நோக்கி பயணித்தோம். மனாலியிலிருந்து ரோஹ்தங் பாஸ் செல்ல தனியார் பேருந்துகளுக்கு அனுமதி இல்லை. ஆறு ஆறு பேராக சுமோ போன்ற ஒரு ஜீப்பில் புறப்பட்டோம். மனாலியிலிருந்து 3 மணி நேர பயணம். வழியெங்கும் பனிப்பிரதேசங்களில் அணியும் உடைகளை வாடகைக்கு விடும் கடைகள் எக்கச்சக்கம். இந்த ஜீப் ஓட்டுபவர்களுக்கே சொந்தமாக கடையும் உண்டு போலும். எங்கள் டிரைவர் அவருடைய கடையில் கொண்டு போய் நிறுத்தினார். நாங்கள் எல்லோரும் எங்களுக்கு சுமாராக பொருந்தும் பனி ஆயத்த உடைகளையும் ரப்பர் பூட்களையும் அணிந்து கொண்டு(வாடகை ஒருவருக்கு 200ரூ) மீண்டும் ஜீப்பில் பயணத்தை தொடர்ந்தோம்.

மிகவும் குறுகலான கச்சா சாலைகளும் ஒரு பக்கத்தில் அதல பாதாள சரிவுகளுமாக பாதையே பயங்கரமாக இருக்கிறது. இதில் எக்கச்சக்கமான ட்ராபிக் வேறு. நம்ம ஓட்டுநர் சந்து சந்தாக ஆட்டோ ஓட்டி பயிற்சி எடுத்திருப்பார் போலும். வளைத்து வளைத்து கிடைக்கிற கேப்பிலெல்லாம் புகுந்து சாலை ஓர பாதாளங்களை எல்லாம் அடிக்கடி க்ளோசப்பில் காண்பித்து பயமுறுத்திக் கொண்டிருந்தார்.

"ஹாங் ஜி, ஆகயா ரோஹ்தங் பாஸ்" என்று நிறுத்தி எங்களை இறக்கி விட்ட இடத்திலிருந்து பார்த்தால் ஒரு பெரிய கோல்ஃப் மைதானம் போல தெரிந்தது. என்ன, பச்சை நிற புல் வெளிக்கு பதிலாக வெண் பனி மைதானம். சிறிது தூரத்தில் ஒரு பனி போர்த்திய குன்று, அதற்கு பின்னால் இன்னொரு குன்று, குன்று, குன்று........

காலையில் சாப்பிட்டிருந்த இரண்டு உளுந்து வடையும், பொங்கலும் பயணக் குலுக்கலில் ஜீரணமாகி விட்டிருந்ததால் முதலில் ஒரு கடையில் சுட சுட மேகி நூடுல்ஸ் சாப்பிட்டோம். இந்த இடத்தில் பனி வெள்ளையாக இல்லாமல் கொஞ்சம் ப்ரவுன் கலரில் அழுக்காக இருந்தது. ஜீப் ட்ரைவரும் சுற்றி நிற்கும் குதிரைக்காரர்களும் ஜீரோ பாய்ண்ட் என்ற இடத்திற்கு போனால் பனி வெள்ளை வெளேரென்று சுத்தமாக இருக்கும் என்று சத்தியம் செய்தார்கள். அங்கே நடந்து போவது கடினம் என்றும் குதிரையில் கூட்டி செல்வதாகவும் கூறினார்கள். தலைக்கு 200 ரூபாய் பேசி குதிரையில் ஏறி, சரி ஒரு மணி நேரத்துக்கு ஜாலியா குதிரைல கூட்டிட்டு போவாங்கன்னு பாத்தா, ஒரே ஒரு வளைவு தாண்டி அஞ்சே நிமிஷத்துல இறக்கி விட்டுட்டாங்க. அதற்கு மேல் குதிரை போகாதாம். இருக்கையுடன் கூடிய ஒரு மரக்கட்டை வண்டியில் உட்கார வைத்து வேகமாக தள்ளிக் கொண்டு போவார்களாம். அதுக்கு தனியா 200 ரூபாயாம். இல்லாவிட்டால் பனியில் சீறிக் கொண்டு செல்லும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் போகலாம். அதற்ககு ஒரு ரவுண்டுக்கு 400 ரூபாய். இதற்குள்
ஜீப்--> குதிரைக்காரர்--> தள்ளு வண்டி காரர் --> எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்று நெட்வொர்க் தொடர்வது புரிந்துவிட்டதால், மேலும் ஏமாற நாங்கள் தயாராக இல்லை. உண்மையில் அங்கிருந்து ஒரு நாற்பதடி சரிவில் மேலே ஏறி விட்டால் அதுதான் ஜீரோ பாய்ண்ட். பனிச்சரிவில் மேலே ஏறும் போது மூச்சிரைத்து சிரமமாகவே இருக்கிறது. இந்த உயரத்தில் ஆக்ஸிஜன் அளவும் கம்மியாக இருப்பதால் இரைப்பு கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்.ஒன்றாக போன நாங்கள் ஆறு பேரும் ஒருவருக்கொருவர் கை கோர்த்துக் கொண்டு மெதுவாக ஏறிவிட்டோம்.

ஜீரோ பாய்ண்டை நோக்கி, குதிரையில்..

பனிக்கட்டிகளை ஒருவர் மேல் ஒருவர் தூக்கியெறிந்து விளையாடிக் கொண்டே டூயட் பாடும் காட்சிகளை சினிமாவில் மட்டுமே பார்த்திருக்கும் எங்களுக்கு இது நல்ல அனுபவமாக இருந்தது. பனிக்கட்டியை துருவி (நம்ம ஊர்ல ஸ்கூல் வாசல்ல துருவி கலர் கலரா இனிப்பு சாயம் ஊத்தி தருவாங்களே) பரத்தி வைத்தது போல் எங்கும் பூ பூவாய் பனி. பனியில் உட்கார்ந்து, பனியில் படுத்து, பனியில் உருண்டு, பனியில் விளையாடி என்று கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் போனதே தெரியவில்லை. நடு நடுவே பனி மழையும் பெய்து சூழ்நிலையே அற்புதமாக கிளம்புவதற்கு மனதே வரவில்லை.

பனியில் உட்கார்ந்து, பனியில் படுத்து, பனியில் உருண்டு



பின்னனியில் பனிச் சிகரங்கள்.. முன்னனியில்...



"என் விரல்லாம் பிஞ்சு பிஞ்சு வரப்போவுது"

அதீதமாக விளையாடி உருண்டு கொண்டிருந்ததில் கொஞ்சம் பனித்துகள்கள் என் பையனின் ரப்பர் ஷூவுக்குள் புகுந்து விட்டதோ என்னவோ, அவன் கால் விரல்கள் மரத்துப் போய்விட்டது போலும். திடீரென்று அழுக ஆரம்பித்து விட்டான். என்னடாவென்று கேட்டால் எவெரெஸ்ட் சிகரம் ஏறுபவர்களெல்லாம் தக்க ஏற்பாடுகளுடன் செல்லாவிட்டால் குளிரில் விரைத்து விரலெல்லாம் பிய்ந்து போய்விடும் என்று அவனுடைய ஆசிரியை (ஜெயே புவா) கூறியிருக்கிறார்களாம். அவனுக்கும் அந்த ஞாபகம் வந்து "கீழ போய் ஷூவ அவுத்தா என் வெரல்லாம் பிஞ்சு வரப் போவுது" என்று சொல்லி ஓவென்று அழுக ஆரம்பித்து விட்டான்.என்ன சொல்லியும் சமாதானமாகாததால் கீழே இறங்க முடிவு செய்தோம். இப்போது அந்த நாற்பதடி சரிவை உருண்டே கடந்து விட்டோம். மீண்டும் 5 நிமிட குதிரை சவாரி செய்து ஜீப்புக்கு திரும்பிவிட்டோம். ஜீப்பில் உட்கார்ந்து ஷூவை அவிழ்த்து கால் விரல்களை முழு உருவத்தில் பார்த்ததும்தான் சமாதானம் அடைந்தான்.உயிரை கையில் பிடித்துக் கொண்டு 3 மணி நேரம் ஜீப் பயணத்திற்கு பிறகு ஹோட்டல் வந்தடையும் போது மாலை மணி ஐந்து.

மறுநாள் மனாலியில் "ஃப்ரீ அண்ட் ஈஸி டே" என்று சொல்லி விட்டார்கள். சுற்றுலாவில் கூட வந்த எல்லோரும் காலையில் சிற்றுண்டி முடித்த கையோடு கடைத்தெருவை வாங்க மால் ரோடுக்கு கிளம்பிவிட்டார்கள். நாங்கள் மூவரும் கையில் கொஞ்சம் ஸ்நாக்ஸுடன் ப்யாஸ் நதிக்கரையில் எங்காவது ஒரு அமைதியான இடத்தை தேடி உட்காரலாம் என்று புறப்பட்டோம். ஒரு அரை கிலோ மீட்டர் நடந்தவுடன் நாங்கள் எதிர்பார்த்தது போலவே மனதுக்கு இதமான ஒரு இடம் கிடைத்து விட்டது. பெரிய பெரிய கூழாங்கல் பாறைகளுக்கு நடுவில் ஓடைகளாக ஆறு ஒடிக் கொண்டிருக்க, சுற்றிலும் பச்சை பசேல் மரங்களும் தொலைவில் பனி மலைச் சிகரங்களும் என பூலோக சொர்க்கமாக இருந்தது. கிட்டத்தட்ட மூன்று மணி நேர மணி நேரத்திற்கு பிறகு வயிற்றிலிருந்து குரல் எழும்ப ஆரம்பிக்கவும் சாப்பிடுவதற்காக ஹோட்டலுக்கு திரும்பிவிட்டோம்.


"அடடா.. லேப்டாப்பும் வை ஃபையும் இருந்தா அப்படியே ப்ளாக்ல ஒரு கவிதை ட்ரை பணணிருக்கலாமே - ப்யாஸ் நதிக்கரையில்..

மாலை நான்கு மணிக்கு மேல் எல்லோரும் போகிறார்களே என்று மால் ரோடுக்கு போனோம். அங்கு ஒரு புத்தர் கோவில் இருக்கிறது. சிங்கப்பூரில் பெரிய்ய்ய.. புத்தர் கோவில்களை எல்லாம் பார்த்ததனாலோ என்னவோ கவரவில்லை. மால் ரோடும் வழக்கமான துணிமணி, அலங்கார பொருட்கள் என்று எல்லா ஊரிலும் இருப்பது போலத்தான். மால் ரோட்டில் எங்களை மிகவும் கவர்ந்தது கழைக்கூத்து நடத்திக் கொண்டிருந்த ஒரு குடும்பம். இதையெல்லாம் பார்க்க இதுவரை சந்தர்ப்பம் கிடைத்திராத என் பையனுக்கு தெருவில் ஒரு சிறுமி செய்த ஜிம்னாஸ்டிக் சாகசங்கள் பெரிய ஆச்சரியத்தை கொடுத்தது. "ஏம்ப்பா.. இவங்கள்ளாம் ஒலிம்பிக்ஸ்ல பார்ட்டிசிபேட் பண்ண மாட்டாங்களா" என்று கேட்டான்.


இவங்கல்லாம் ஒலிம்பிக்ஸ்ல கலந்துக்க மாட்டாங்களா?

தொடரும்... வரும் இடுகைகளில் சண்டிகர், ஆக்ரா மற்றும் மீண்டும் தில்லி...

8 comments:

அப்பாவி முரு said...

அண்ணே பயணக்கட்டுரை சூப்பர்.

பிறவிப்பயன் அடைந்தீர்!!!

கட்டுரைத் தொடர் முடிந்ததும் புகைப்படத்தொகுப்பை காட்டுவீங்களா?

Mahesh said...

நல்ல ஃப்ளோ..... (ப்யாஸ் நதில தண்ணியச் சொன்னேன் :)))))))))

//"அடடா.. லேப்டாப்பும் வை ஃபையும் இருந்தா அப்படியே ப்ளாக்ல ஒரு கவிதை ட்ரை பணணிருக்கலாமே"//

ஆத்தாடி.... பொழச்சோம் !!

அறிவிலி said...

@ அப்பாவி - நன்றி... புகைப்படத்தொகுப்பா... நோ... என்னோட ஒவ்வொரு இடுகையையும் படிச்சு கூடவே வர போட்டோவையும் தான் பாத்துக்கணும். (வர்ர பத்து பேரையும் இப்படி மிரட்டிதான் காப்பாத்திக்க வேண்டியிருக்கிறது :))))

அறிவிலி said...

@மகேஷ் - ஹ்..ர்ர்ர்ர்ர்ர்... மனசுல வெச்சுக்கறேன்.

ரெண்டு வாரம் என்ன? இன்னும் 4 வாரம் கழிச்சு நீங்க அடுத்த போஸ்ட் போட்டாலும் மறக்க மாட்டேன்.

வெற்றி-[க்]-கதிரவன் said...

கருப்பு கலர் டி.ஷர்ட் கருப்பு கலர் கண்ணாடி போட்டுக்கிட்டு இருக்காரே அவரு யாரு ?

Cable சங்கர் said...

நல்ல புகைப்படத் தொகுப்பு அறிவிலி.

அறிவிலி said...

//[பி]-[த்]-[த]-[ன்] said...
கருப்பு கலர் டி.ஷர்ட் கருப்பு கலர் கண்ணாடி போட்டுக்கிட்டு இருக்காரே அவரு யாரு ?//

சிங்கைல ரொம்ப பிரபலம்னு சொன்னாரு, நீங்க பாத்திருக்கீங்களா???

அறிவிலி said...

//Cable Sankar said...
நல்ல புகைப்படத் தொகுப்பு அறிவிலி.//

நன்றி கேபிள் சங்கர்

Post a Comment

எச்சரிக்கை - பின்னூட்டம் போடாமல் செல்பவர்களுக்கு என்னுடைய பதிவுகளின் தொகுப்பு அனுப்பி வைக்கப்படும்.

ஆபத்துகளை வருமுன் தடுப்பதே நல்லது.