Showing posts with label இந்தியா ஒளிர்கிறது. Show all posts
Showing posts with label இந்தியா ஒளிர்கிறது. Show all posts

Sunday, August 2, 2009

புதிய வானம்... புதிய பூமி... எங்கும் பனி மழை பொழிகிறது-"இந்தியா ஒளிர்கிறது-எ"

தொடர்புடைய முந்தைய இடுகைகளுக்கு "இந்தியா ஒளிர்கிறது"

சிம்லாவை விட்டு வெளியில் வந்து மனாலி செல்லும் சாலையை தொட்டதிலிருந்து நம் கூடவே பயணிக்கிறது ப்யாஸ் நதியும். மிகவும் அற்புதமான சலிப்பே தட்டாத இயற்கை காட்சிகள் முழுநீளத்திற்கும் மனாலி வரை தொடர்கிறது. கிட்டத்தட்ட 13 மணி நேர பயணமாக இருந்தாலும் அலுப்பு தட்டுவதில்லை.

கூடவே பயணிக்கும் ப்யாஸ் நதி

மனாலியில் விடியற்காலையில் எழுந்து வெளியில் வந்த உடனேயே பளீரென்ற பனி போர்த்திய மலை உச்சிகள் கண்ணில் பட்டு அன்று நமக்கு கிடைக்கப்போகும் புதிய அனுபவத்திற்கு கட்டியம் கூறின. இதமான மெல்லிய குளிர்தான் இருந்ததே தவிர பெரிதாக ஒன்றும் விரைக்கும் குளிர் நடுக்கவில்லை.

காலையில் ஹோட்டலுக்கு வெளியில் வந்ததும் வரவேற்ற பனி மூடிய மலைகள்

மஹாபாரதத்தில் பீமனை காதலித்து திருமணம் செய்து கடோத்கஜன் என்ற பெரும் வீரனை பெற்றெடுத்த ஹிடும்பா தேவிக்கு ஒரு கோவில் மனாலியில் இருக்கிறது. பீமன் ஹிடும்பா தேவியுடன் ஒரு வருடம் குடும்பம் நடத்தி பின் தன் சகோதரர்களுடன் இணைந்ததாக கதை. இந்த பிரதேசத்தை கடோத்கஜன் வளரும் வரை ஹிடும்பா தேவி ஆட்சி புரிந்திருக்கிறார்.

ஹிடும்பாதேவி கோவில்

அடுத்து நாங்கள் சென்றது வஷிஷ்ட் சுடு நீர் ஊற்றுகள். இயற்கையிலேயே 110-123 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பத்தில் வரும் இந்த வெந்நீர் ஊற்றுகள் மருத்துவ குணங்கள் கொண்டதாய் கருதப்படுகிறது. இயற்கை வெந்நீர் ஊற்று என்றவுடன் தரையிலிருந்து கொதிக்க கொதிக்க நீர் பீறிட்டு கொண்டு வரும் அதில் நாமெல்லாம் குளிக்கலாம் என்று ஆவலுடன் சென்ற எனக்கு பெரிய ஏமாற்றமே. இரண்டு பெரிய தொட்டிகள் கட்டி அதில் நம்ம ஊரில் குட்டைகளில் எருமைகள் ஊறுமே அது போல் ஏகப்பட்ட பேர் ஊறிக் கொண்டிருந்தார்கள்.

வெந்நீர்க் குட்டையில் ஊறிக் கொண்டு

தண்ணீர் எங்கிருந்து வருகிறது என்பதே தெரியவில்லை. இதைத்தவிர இரண்டு குழாய்களில் சுடு தண்ணீர் கொட்டி கொண்டிருந்தது. ரெண்டு சொட்டு கையில் பிடித்து தலையில் தெளித்துக் கொண்டு கிளாம்பி விட்டோம்.

குழாயில் வரும் வெந்நீர் ஊற்று

அங்கிருந்து இந்த பேருலாவின் உச்ச்கட்டமான ரோஹ்தங் பாஸ் நோக்கி பயணித்தோம். மனாலியிலிருந்து ரோஹ்தங் பாஸ் செல்ல தனியார் பேருந்துகளுக்கு அனுமதி இல்லை. ஆறு ஆறு பேராக சுமோ போன்ற ஒரு ஜீப்பில் புறப்பட்டோம். மனாலியிலிருந்து 3 மணி நேர பயணம். வழியெங்கும் பனிப்பிரதேசங்களில் அணியும் உடைகளை வாடகைக்கு விடும் கடைகள் எக்கச்சக்கம். இந்த ஜீப் ஓட்டுபவர்களுக்கே சொந்தமாக கடையும் உண்டு போலும். எங்கள் டிரைவர் அவருடைய கடையில் கொண்டு போய் நிறுத்தினார். நாங்கள் எல்லோரும் எங்களுக்கு சுமாராக பொருந்தும் பனி ஆயத்த உடைகளையும் ரப்பர் பூட்களையும் அணிந்து கொண்டு(வாடகை ஒருவருக்கு 200ரூ) மீண்டும் ஜீப்பில் பயணத்தை தொடர்ந்தோம்.

மிகவும் குறுகலான கச்சா சாலைகளும் ஒரு பக்கத்தில் அதல பாதாள சரிவுகளுமாக பாதையே பயங்கரமாக இருக்கிறது. இதில் எக்கச்சக்கமான ட்ராபிக் வேறு. நம்ம ஓட்டுநர் சந்து சந்தாக ஆட்டோ ஓட்டி பயிற்சி எடுத்திருப்பார் போலும். வளைத்து வளைத்து கிடைக்கிற கேப்பிலெல்லாம் புகுந்து சாலை ஓர பாதாளங்களை எல்லாம் அடிக்கடி க்ளோசப்பில் காண்பித்து பயமுறுத்திக் கொண்டிருந்தார்.

"ஹாங் ஜி, ஆகயா ரோஹ்தங் பாஸ்" என்று நிறுத்தி எங்களை இறக்கி விட்ட இடத்திலிருந்து பார்த்தால் ஒரு பெரிய கோல்ஃப் மைதானம் போல தெரிந்தது. என்ன, பச்சை நிற புல் வெளிக்கு பதிலாக வெண் பனி மைதானம். சிறிது தூரத்தில் ஒரு பனி போர்த்திய குன்று, அதற்கு பின்னால் இன்னொரு குன்று, குன்று, குன்று........

காலையில் சாப்பிட்டிருந்த இரண்டு உளுந்து வடையும், பொங்கலும் பயணக் குலுக்கலில் ஜீரணமாகி விட்டிருந்ததால் முதலில் ஒரு கடையில் சுட சுட மேகி நூடுல்ஸ் சாப்பிட்டோம். இந்த இடத்தில் பனி வெள்ளையாக இல்லாமல் கொஞ்சம் ப்ரவுன் கலரில் அழுக்காக இருந்தது. ஜீப் ட்ரைவரும் சுற்றி நிற்கும் குதிரைக்காரர்களும் ஜீரோ பாய்ண்ட் என்ற இடத்திற்கு போனால் பனி வெள்ளை வெளேரென்று சுத்தமாக இருக்கும் என்று சத்தியம் செய்தார்கள். அங்கே நடந்து போவது கடினம் என்றும் குதிரையில் கூட்டி செல்வதாகவும் கூறினார்கள். தலைக்கு 200 ரூபாய் பேசி குதிரையில் ஏறி, சரி ஒரு மணி நேரத்துக்கு ஜாலியா குதிரைல கூட்டிட்டு போவாங்கன்னு பாத்தா, ஒரே ஒரு வளைவு தாண்டி அஞ்சே நிமிஷத்துல இறக்கி விட்டுட்டாங்க. அதற்கு மேல் குதிரை போகாதாம். இருக்கையுடன் கூடிய ஒரு மரக்கட்டை வண்டியில் உட்கார வைத்து வேகமாக தள்ளிக் கொண்டு போவார்களாம். அதுக்கு தனியா 200 ரூபாயாம். இல்லாவிட்டால் பனியில் சீறிக் கொண்டு செல்லும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் போகலாம். அதற்ககு ஒரு ரவுண்டுக்கு 400 ரூபாய். இதற்குள்
ஜீப்--> குதிரைக்காரர்--> தள்ளு வண்டி காரர் --> எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்று நெட்வொர்க் தொடர்வது புரிந்துவிட்டதால், மேலும் ஏமாற நாங்கள் தயாராக இல்லை. உண்மையில் அங்கிருந்து ஒரு நாற்பதடி சரிவில் மேலே ஏறி விட்டால் அதுதான் ஜீரோ பாய்ண்ட். பனிச்சரிவில் மேலே ஏறும் போது மூச்சிரைத்து சிரமமாகவே இருக்கிறது. இந்த உயரத்தில் ஆக்ஸிஜன் அளவும் கம்மியாக இருப்பதால் இரைப்பு கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்.ஒன்றாக போன நாங்கள் ஆறு பேரும் ஒருவருக்கொருவர் கை கோர்த்துக் கொண்டு மெதுவாக ஏறிவிட்டோம்.

ஜீரோ பாய்ண்டை நோக்கி, குதிரையில்..

பனிக்கட்டிகளை ஒருவர் மேல் ஒருவர் தூக்கியெறிந்து விளையாடிக் கொண்டே டூயட் பாடும் காட்சிகளை சினிமாவில் மட்டுமே பார்த்திருக்கும் எங்களுக்கு இது நல்ல அனுபவமாக இருந்தது. பனிக்கட்டியை துருவி (நம்ம ஊர்ல ஸ்கூல் வாசல்ல துருவி கலர் கலரா இனிப்பு சாயம் ஊத்தி தருவாங்களே) பரத்தி வைத்தது போல் எங்கும் பூ பூவாய் பனி. பனியில் உட்கார்ந்து, பனியில் படுத்து, பனியில் உருண்டு, பனியில் விளையாடி என்று கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் போனதே தெரியவில்லை. நடு நடுவே பனி மழையும் பெய்து சூழ்நிலையே அற்புதமாக கிளம்புவதற்கு மனதே வரவில்லை.

பனியில் உட்கார்ந்து, பனியில் படுத்து, பனியில் உருண்டு



பின்னனியில் பனிச் சிகரங்கள்.. முன்னனியில்...



"என் விரல்லாம் பிஞ்சு பிஞ்சு வரப்போவுது"

அதீதமாக விளையாடி உருண்டு கொண்டிருந்ததில் கொஞ்சம் பனித்துகள்கள் என் பையனின் ரப்பர் ஷூவுக்குள் புகுந்து விட்டதோ என்னவோ, அவன் கால் விரல்கள் மரத்துப் போய்விட்டது போலும். திடீரென்று அழுக ஆரம்பித்து விட்டான். என்னடாவென்று கேட்டால் எவெரெஸ்ட் சிகரம் ஏறுபவர்களெல்லாம் தக்க ஏற்பாடுகளுடன் செல்லாவிட்டால் குளிரில் விரைத்து விரலெல்லாம் பிய்ந்து போய்விடும் என்று அவனுடைய ஆசிரியை (ஜெயே புவா) கூறியிருக்கிறார்களாம். அவனுக்கும் அந்த ஞாபகம் வந்து "கீழ போய் ஷூவ அவுத்தா என் வெரல்லாம் பிஞ்சு வரப் போவுது" என்று சொல்லி ஓவென்று அழுக ஆரம்பித்து விட்டான்.என்ன சொல்லியும் சமாதானமாகாததால் கீழே இறங்க முடிவு செய்தோம். இப்போது அந்த நாற்பதடி சரிவை உருண்டே கடந்து விட்டோம். மீண்டும் 5 நிமிட குதிரை சவாரி செய்து ஜீப்புக்கு திரும்பிவிட்டோம். ஜீப்பில் உட்கார்ந்து ஷூவை அவிழ்த்து கால் விரல்களை முழு உருவத்தில் பார்த்ததும்தான் சமாதானம் அடைந்தான்.உயிரை கையில் பிடித்துக் கொண்டு 3 மணி நேரம் ஜீப் பயணத்திற்கு பிறகு ஹோட்டல் வந்தடையும் போது மாலை மணி ஐந்து.

மறுநாள் மனாலியில் "ஃப்ரீ அண்ட் ஈஸி டே" என்று சொல்லி விட்டார்கள். சுற்றுலாவில் கூட வந்த எல்லோரும் காலையில் சிற்றுண்டி முடித்த கையோடு கடைத்தெருவை வாங்க மால் ரோடுக்கு கிளம்பிவிட்டார்கள். நாங்கள் மூவரும் கையில் கொஞ்சம் ஸ்நாக்ஸுடன் ப்யாஸ் நதிக்கரையில் எங்காவது ஒரு அமைதியான இடத்தை தேடி உட்காரலாம் என்று புறப்பட்டோம். ஒரு அரை கிலோ மீட்டர் நடந்தவுடன் நாங்கள் எதிர்பார்த்தது போலவே மனதுக்கு இதமான ஒரு இடம் கிடைத்து விட்டது. பெரிய பெரிய கூழாங்கல் பாறைகளுக்கு நடுவில் ஓடைகளாக ஆறு ஒடிக் கொண்டிருக்க, சுற்றிலும் பச்சை பசேல் மரங்களும் தொலைவில் பனி மலைச் சிகரங்களும் என பூலோக சொர்க்கமாக இருந்தது. கிட்டத்தட்ட மூன்று மணி நேர மணி நேரத்திற்கு பிறகு வயிற்றிலிருந்து குரல் எழும்ப ஆரம்பிக்கவும் சாப்பிடுவதற்காக ஹோட்டலுக்கு திரும்பிவிட்டோம்.


"அடடா.. லேப்டாப்பும் வை ஃபையும் இருந்தா அப்படியே ப்ளாக்ல ஒரு கவிதை ட்ரை பணணிருக்கலாமே - ப்யாஸ் நதிக்கரையில்..

மாலை நான்கு மணிக்கு மேல் எல்லோரும் போகிறார்களே என்று மால் ரோடுக்கு போனோம். அங்கு ஒரு புத்தர் கோவில் இருக்கிறது. சிங்கப்பூரில் பெரிய்ய்ய.. புத்தர் கோவில்களை எல்லாம் பார்த்ததனாலோ என்னவோ கவரவில்லை. மால் ரோடும் வழக்கமான துணிமணி, அலங்கார பொருட்கள் என்று எல்லா ஊரிலும் இருப்பது போலத்தான். மால் ரோட்டில் எங்களை மிகவும் கவர்ந்தது கழைக்கூத்து நடத்திக் கொண்டிருந்த ஒரு குடும்பம். இதையெல்லாம் பார்க்க இதுவரை சந்தர்ப்பம் கிடைத்திராத என் பையனுக்கு தெருவில் ஒரு சிறுமி செய்த ஜிம்னாஸ்டிக் சாகசங்கள் பெரிய ஆச்சரியத்தை கொடுத்தது. "ஏம்ப்பா.. இவங்கள்ளாம் ஒலிம்பிக்ஸ்ல பார்ட்டிசிபேட் பண்ண மாட்டாங்களா" என்று கேட்டான்.


இவங்கல்லாம் ஒலிம்பிக்ஸ்ல கலந்துக்க மாட்டாங்களா?

தொடரும்... வரும் இடுகைகளில் சண்டிகர், ஆக்ரா மற்றும் மீண்டும் தில்லி...

Friday, July 24, 2009

"சிம்லா ஸ்பெஷல்: ஆப்பிள் கிடைக்குமா?" - இந்தியா ஒளிர்கிறது (ஊ)

தொடர்புடைய முந்தைய இடுகைகளுக்கு "இந்தியா ஒளிர்கிறது"

பேருந்து கிளம்பி தில்லியை விட்டு வெளியில் வரும்போதுதான் புரிந்தது, நகரம் எவ்வளவு பெரியதாக ஆகிவிட்டது. புறநகர்களில் ரிஸார்ட் தொழில் கொடி கட்டி பறக்கிறது.பத்தடிக்கு ஒரு ரிசார்ட். வழிகாட்டியிடம் விசாரித்தபோது சொன்னார் இப்போதெல்லாம் திருமணங்கள், ரிசப்ஷன், அலுவலக பார்ட்டிகள் போன்ற விஷயங்களெல்லாம் இத்தகைய ரிஸார்ட்களில்தான் நடைபெறுகின்றனவாம்.

மதியம் ஒரு மணிக்கு வழியில் ஒரு உணவகத்தில் நிறுத்தினார்கள். சதர்ன் ட்ராவல்ஸ் நிறுவனம் ஆந்திரர்களால் ஆந்திரர்களுக்காக நடத்தப்படுவது.இதை நான் இந்த உணவகத்தில்தான் புரிந்து கொண்டேன். உணவகம் உள்ளூர் காரர்களால் நடத்தப்படுவதாக இருந்தாலும் சாம்பார், ரசம், கூட்டு, பொரியல் எல்லாம் ஆந்திர ஸ்டைலில் செய்வதற்கு பயிற்சி கொடுத்திருப்பார்கள் போலும்.அத்தனை காரம். எங்கள் மூவருக்கும் மூக்கு, வாயிலிருந்து தண்ணீர் கொட்ட, காது உள்ளிட்ட அனைத்து துவாரங்களிலும் கிட்டத்தட்ட புகையே வந்துவிட்டது. தந்தூரி ரொட்டியும் தயிரும் இருக்கவே உயிர் பிழைத்தோம்.

புகைப்படத்த உத்து பாருங்க, டாக்டர் எதுல ஸ்பெஷலிஸ்ட்னு தெரியும்.(வழியில் கிடைத்த வித்தியாசமான புகைப்படம்)

நான்கு மணி சுமாருக்கு முதல் சுற்றுலா தலமாக பிஞ்ஜூர் கார்டனில் நிறுத்தினார்கள்.இந்த பூங்காவில் பஞ்ச பாண்டவர்கள் இளைப்பாறியதாக ஒரு நம்பிக்கையும் உண்டு.பிஞ்ஜூரில் மற்றொரு பிரபலமான விஷயம் ஹெச்.எம்.டி நிறுவனம். இப்போது இநத நிறுவனமும் சரி பூங்காவும் சரி சுஸ்தாக இல்லை. வெயிலின் கொடுமையோடு காய்ந்துபோய் ஒன்றுமே இல்லாத பூங்காவை பார்த்து எரிச்சலடைந்ததுதான் மிச்சம். நீருற்றுகள் எல்லாவற்றையும் நிறுத்தி வத்திருந்தார்கள். ஆனால் ஒரு பக்கத்தில் தேவையே இல்லாமல் தண்ணீர், பம்பு செட்டை போல் கொட்டிக் கொண்டிருந்தது. இதற்கு நுழைவு சீட்டு வேறு. பத்து வருடங்களுக்கு முன் ஒரு மாலைப் பொழுதில் நான் பார்த்தபொழுது நீருற்றுகளும், வண்ண விளக்குகளுமாக நன்றாக இருந்தது. கிட்டத்தட்ட தினமுமே தில்லி- சிம்லா செல்லும் நூற்றுக் கணக்கான சுற்றுலா பயணிகள் வரும் இடத்தை நன்றாக வைத்துக் கொள்ளலாம் அல்லது இழுத்தாவது மூடி விடலாம். ஒரு காவி உடை சாமியார் ஏக பந்தாவாக குடை பிடிக்கவும், தண்ணீர் பாட்டில் சுமக்கவும் அல்லக்கைகளுடன் சுற்றிக் கொண்டிருந்தார். எங்கேயோ பார்த்த ஞாபகம் இருந்தாலும் யாரென்று சரியாக சொல்ல முடியவில்லை. உங்களுககு தெரிந்தால் சொல்லுங்கள். முன்னும் பின்னும் காவலர் ஜீப்களுடன் இவருடைய கார் சிம்லா வரை கூடவே வந்தது.

இவர் யார்? சரியாக சொன்னால் உங்கள் அடுத்த 10 இடுகைகளுக்கு தலா 10 பின்னூட்டங்கள்



பம்பு செட் ????


பிஞ்ஜூர் பூங்காவிலிருந்து கிளம்பிய ஒரு மணி நேரத்தில் மலைப்பாதை ஆரம்பித்து விடுகிறது. "ஹிமாச்சல் மாநிலம் முழுவதுமே மலைகளில்தான். அடுத்த ஆறு நாட்களுக்கு தினமும் நாம் பயணம் செய்யப்போவது இத்தகைய பாதைகளில்தான்" என்றதும் "வாவ், சூப்பர்" என்றான் பையன்.




இயற்கைக் காட்சிகளையும் வித்தியாசமான கட்டிட அமைப்புகளையும் ரசித்துக் கொண்டே மாலை ஏழு மணி வரை பொழுது போனதே தெரியவில்லை. பல வீடுகள் மற்றும் கட்டிடங்களில் சாலையிலிருந்து உள்ளே நுழைந்தால் ஐந்தாவது மாடியும் மற்ற தளங்களுக்கு
கீழே இறங்கியும் செல்லவேண்டும்.

ஏழு மணிக்கு மேல் பசியும், பயணக் களைப்புமாக அனைவரும் பொறுமை இழக்க ஆரம்பித்துவிட்டோம். இரவுத் தங்கல் சிம்லாவில் என்று சொல்லியிருந்தார்கள். சிம்லாவை கடந்து ஒரு மணி நேரமாகியும் ஓட்டுநர் நிறுத்தும் அறிகுறியே தெரியவில்லை. சிம்லா நகருக்குள் தனியார் பேருந்துகளுக்கு அனுமதி இல்லாத்தால் ஊருக்கு வெளியே குஃப்ரி செல்லும் வழியில் இருந்த ஹோட்டலுக்கு போய் சேரும்போது இரவுமணி 10.

மறு நாள் காலை நாங்கள் சென்றது குஃப்ரி என்ற இடத்துக்கு. சாலையில் ஓரிடத்தில் நிறுத்திவிட்டு அங்கிருந்து குதிரை சவாரியில் செல்ல வேண்டும் என்று சொல்லி விட்டார்கள். சுற்றிவிட்டு திரும்பி வர 3 மணி நேரம் கொடுததார்கள்."குதிரையெல்லாம் ஏற முடியாது, நடந்தே போயிரலாம்" என்று மனைவி கூறினார். சரியென்று பாதையைப் பார்த்தால் கால் வைக்கவே லாயக்கற்று இருந்தது.சேறும் சகதியும், குதிரைச் சாணமுமாக ஒன்றரை அடி உயரத்துக்கு.வேறு வழியில்லாமல் குதிரை ஏறினோம். கிட்டத்தடட 20 நிமிட குதிரை சவாரி, குறுகிய பாதையில் பக்கங்களிலும் எதிரிலும் ஏனைய குதிரைகளோடு, பக்கவாட்டில் சரேல் பள்ளங்களுமாக அடிக்கடி "வீல்" அலறல்களுடன் ரசிக்கத் தக்கதாகவே இருந்தது.


"என்னாது? இந்த போட்டோவுக்கு ஏன் கமெண்ட் போடலியா? வேளா வேளைக்கு சோறு தண்ணி கிடைக்கறது புடிக்கலியா?"



"சிரிடா.. சிரி.. அடுத்த போட்டோல உனக்கு வெச்சிருக்கேன் ஆப்பு"




"வகிறு சரியில்லை மன்னா"



"பண்டிட் குயின் - பூலான் தேவிகிட்ட ட்ரெயினிங்லாம் எடுக்கலைங்க""


அங்கு இருந்தவை

தூரத்தில் இருக்கும் பனி படர்ந்த இமய மலையை அருகில் காட்டும் தொலை நோக்கி (அடப் பாவிகளா... அதை நேரில் பாக்கத்தானே இவ்வளவு தூரம் வந்தோம்)

ஒரு கோவில்

சில காட்டெருமைகள். அதன் மேல் சவாரியோ அல்லது கௌபாய் ஸ்டைலில் தொப்பியும் துப்பாக்கியுமாக புகைப்படமோ எடுத்துக்கொள்ளலாம்.

"கோ கார்ட்டிங்" உள்ளிட்ட சில விளாயாட்டுகளுடன் கூடிய ஒரு மினி தீம் பார்க்.

சுட.. சுட டீயும் மேகி நூடுல்ஸும் செய்து கொடுக்கும் சில கடைகளும்.

மறுபடியும் குதிரை, 20 நிமிடம், வீல்...

அடுத்து மதியத்துக்கு மேல் புறப்பட்டது சிம்லாவில் இருக்கும் மால் ரோட். பையனுக்கு "வகிறு சரியில்லை மன்னா" என்ற வசனத்திற்கு ஏற்ப மேலும் கீழுமாக இரு வழி போக்குவரத்து நடந்து கொண்டிருந்தது. சரி,என்று மால் ரோடு போய் ஒரு வைத்தியரை பார்த்தோம். இந்த மாதிரி வயிற்றுப் போக்கு வாந்திக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் சரியாகிவிடும் என்பது சொந்த அனுபவம். சிம்லா முழுவதும் பல இடங்களில் தேடியும் ஆப்பிளை காணவில்லை. இரண்டு மணி நேர தேடலுக்கும், ஊடே இரண்டாயிரம் ரூபாய் ஷாப்பிங்குக்கும் பிறகு ஒரு பழக் கடையில் ஆப்பிள் கிடைத்தது. ஒரு ஆப்பிளின் விலை அறுபது ரூபாய்.

இரவு உணவு (ஸ்..ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்) மற்றும் தூக்கத்திற்கு பிறகு மறுநாள் காலையில் மனாலிக்கு புறப்பட்டோம்.

தொடரும்... வரும் இடுகைகளில் மனாலி, சண்டிகர், ஆக்ரா மற்றும் மீண்டும் தில்லி...

Thursday, July 23, 2009

"அப்பா, இதுவும் டெல்லி தானா?" -இந்தியா ஒளிர்கிறது (உ)

தொடர்புடைய முந்தைய இடுகைகளுக்கு "இந்தியா ஒளிர்கிறது"
இடுகையில்தான் இத்தனை இடைவெளியே தவிர, தில்லியில் இறங்கியதிலிருந்தே பரபரப்புதான்.

விமான நிலையத்திலிருந்து கரோல்பாகில் இருந்த ஹோட்டலுக்கு ப்ரீ பெய்ட் டாக்ஸியில் செல்லலாம் என்று கவுண்டரில் பணத்தை கட்டிவிட்டு வெளியில் வந்தால் ஆதவன் (பதிவர் இல்லீங்க) ஃபுல் பார்மில் அடித்து ஆடிக்கொண்டிருந்தார். ஆர்.வி. உதயகுமார் போன்ற இயக்குனர்கள் வந்தால் வெட்டவெளியில் நடிகைகளின் தொப்பையில் முட்டையை உடைத்து ஊற்றி, அது அப்படியே ஆஃப் பாயிலாக மாறுவதை காட்டியிருப்பார்கள், அத்தனை சூடு.

டாக்ஸி ட்ரைவர் முகம் முழுவதையும் மறைத்து பெரிய பெட்ஷீட் சைஸுக்கு துணியை சுற்றிக்கொண்டு இருந்தார்.வெளிநாட்டு பயணிகளிடமிருந்து தொற்றக்கூடிய பன்றி காய்ச்சலிடமிருந்து தப்பிக்கத்தான் இப்படி இருக்கிறாரோ என்று பார்த்தால் தெருவில் ஸ்கூட்டர், மோடடார் சைக்கிள் ஒட்டுபவர்களெல்லாம் கூட இதேபோல்தான் இருந்தார்கள்.



தெருக்களில் முகமூடிகளுடன்

எங்கள் கம்பெனியில் ஆயிரம் டிகிரிக்கு இரும்புக் குழம்பை காய்ச்சும் ஃபர்னஸுக்கு பக்கத்தில் நிற்கும் போது எப்படி இருக்குமோ அப்படி ஒரு உஷ்ணக் காற்று, ஓடிக் கொண்டிருக்கும் டாக்ஸியின் ஜன்னல் வழியாக அடிக்கவும்தான் இந்த முகமூடிகளுக்கான விளக்கம் கிடைத்தது.

ஹோட்டலுக்கு போய்ச் சேர்ந்து சிறிது இளைப்பாறலுக்குப் பின் "தில்லி பை நைட்" டூருக்கு கிளம்பி விட்டோம்.முதலில் சென்றது ஒரு வெட்டவெளி சிவன் கோயிலுக்கு. பிரமிக்கவைக்கும் பெரிய பெரிய சிலைகள். பெரிய்ய்ய சிவன் சிலையை தவிர பிள்ளையார் மற்றும் ராதா கிருஷ்ணண் சிலைகளும் உண்டு. அழகான பூங்காவும் சிலைகளுமாக ரம்மியமாக இருந்தது.



அங்கிருந்து எல்லா நாட்டு தூதரகங்களும் இருக்கும் சாணக்யபுரி வழியாக ராஷ்டிரபதிபவனுக்கு வெளியே கொண்டு போய் இறக்கி விட்டார்கள்.என் மனைவியும் மகனும் தொலைக்காட்சியிலும் சினிமாவிலும் (மௌன ராகம்) மட்டுமே பார்த்திருந்த ராஷ்டிரபதிபவன், சௌத் ப்ளாக், நார்த் பிளாக் மற்றும் ராஜ் பத் சாலை, தூரத்தில் இந்தியா கேட் போன்றவற்றை நேரில் கண்டதும் அவர்கள் முகத்தில் மகிழ்ச்சியும் பெருமிதமும் மின்னியதை நான் ரசித்துக் கொண்டிருந்தேன்.






குடியரசுதின அணிவகுப்பு நடககும் ராஜ் பத் சாலையில் பீடு நடைபோட்டு நடந்து கொண்டே இந்தியா கேட்டை அடைநது விடடோம்.

இதன் பிறகு நாங்கள் சென்றது, செங்கோட்டையில் நடக்கும் ஒலி ஓளி காட்சிக்கு. ஒலி ஒளி காட்சியில் முகலாய சாமராஜ்ய வரலாற்றையும் செங்கோட்டையில் ராணிகள் எங்கே குளித்தார்கள், எங்கே தூங்கினார்கள், எத்தனை பிள்ளை பெற்றார்கள் என்பதையெல்லாம் கர.. கர.. குரலில் தட.. தட.. சத்தங்களுக்கு நடுவில் சொன்னார்கள். செங்கோட்டை போய் வரும் வழியில் பழைய தில்லி பகுதியை பார்த்துவிட்டு என் பையன் கேட்ட கேள்விதான் இந்த இடுகையின் தலைப்பு.

மறுநாள் காலை ஏழு மணிக்கெல்லாம் மனாலியை நோக்கி பேருந்தில் கிளம்பி விட்டோம்.


உள்ளே ஒளிந்திருக்கும் "பிரபலம்" இல்லாத பதிவரை கண்டுபிடியுங்கள்

வரும் இடுககைகளில் சிம்லா, மனாலி,சண்டிகர், ஆக்ரா, மதுரா மற்றும் திரும்பவும் தில்லி.- தொடரும்.

Saturday, July 11, 2009

"பங்காரு நகலு, பர்ஸுலு, டப்புலு" -இந்தியா ஒளிர்கிறது (ஈ)

தொடர்புடையய முந்தைய பதிவுகள்
முட்டை தொழிலும், முட்டைக்கு எதிரான தொழிலும் - இந்தியா ஒளிர்கிறது (இ)
மெக் டொனால்ட்ஸும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ்ஸும் - இந்தியா ஒளிர்கிறது (ஆ)
இந்தியா ஒளிர்கிறது - (அ)

அடுத்து நாங்கள் புறப்பட்டது திருப்பதி, சென்னை வழியாக தில்லி நோக்கி. திருச்சியிலிருந்து ஆந்திரப்பிரதேச மாநில சாலை போக்குவரத்து கழகத்தின் (APSRTC) பேருந்தில் திருப்பதி கூட்டி செல்கிறார்கள். இரவு 7 மணிக்கு கிளம்பும் பேருந்து மறுநாள் காலை 5 மணிக்கு திருப்பதி போய் சேர்ந்து விடுகிறது. பெருமாள் தரிசனத்திற்கு போவதாலோ என்னவோ பேருந்தில் தசாவதாரம் படம் போட்டார்கள்.அதற்கு முன் காண்பித்த ஆந்திரப்பிரதேச மாநில சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் விளம்பர படம் நன்றாகவே இருந்தது.முக்கியமாக அடுத்த முறை வரும்போது விசாகப்பட்டினத்துக்கு நிச்சயம் போய் வரவேண்டும் என்ற முடிவை எடுக்குமளவுக்கு இருந்தது.

காலை 5 மணிக்கு திருப்பதி போய் சேர்ந்ததும் ஒரு அறை கொடுத்து காலை கடன்களை முடிக்க 1 மணி நேரம் கொடுக்கிறார்கள்.காலை உணவுக்கு பிறகு "சாப்பிங்க்காம்லக்ஸ்"க்கு கூட்டி செல்கிறார் வழிகாட்டி.


தினம் வரும் லட்சகணக்கான தமிழர்களில் ஒருவரிடம் கேட்டு எழுதியிருக்கலாம்

அங்கு ஒரு கடையில் நம்மிடம் இருக்கும் செல்ஃபோன், கேமரா எல்லாவற்றையும் டெபாசிட் செய்ய சொல்லிவிடுகிறார். தேவஸ்தான பாதுகாப்பு பெட்டக அறையில் வைக்கலாம். ஆனால் அங்கு க்யூ இருக்கும் என்பதால் இங்கேயே வைக்க சொல்கிறாராம்.ஒவ்வொரு பொருளுக்கும் 10 ரூபாயாம் ஒரு பஸ்ஸுக்கு 500 ரூபாய் வரை எளிதான சம்பாத்தியம். இதில் கைடுக்கான பங்கு எவ்வளவோ?

பிறகு கூட்டிக்கொண்டு போய் "Cellar Entry" வழியாக க்யூவில் சேர்த்துவிடுகிறார்கள்.ஐந்து நிமிடத்துக்கு ஒருமுறை "பங்காரு நகலு, பர்ஸுலு, டப்புலு" எல்லாவற்றையும் பத்திரமாக வைத்துக்கொள்ளும்படி மைக்கில் அறிவித்துக்கொண்டே இருக்கிறார்கள். கோவில் பிரகாரத்துக்குள் நுழைவதற்கு சற்றுமுன் தடுப்பு வேலி இல்லாத இடத்தில் கூட்டம் திடீரென்று முண்டியடிக்கிறது. இந்த இடத்தில் மட்டும் வேலியும் இல்லை, மற்ற இடங்களில் "ஜரிகண்டி" சொல்லி முரட்டுத்தனமாக தள்ளிவிடும் காவலர்(லி)களும் இல்லை. தடாரென்று ஒருவன் தேவையில்லாமல் தள்ளிவிட்டு டென்ஷனை உருவாக்க, மொட்டையடித்து நெத்தி நிறைய நாமத்துடன் ஒருவன் என் மனைவியின் கையில் இருக்கும் வளையலை உருவப் பார்த்தான். "பங்காரு நகலு" அறிவிப்புக்கான காரணாம் இப்போதுதான் புரிந்தது.

முன்பெல்லாம் ஏழுமலையானை ஓரளவுக்காவது பக்கத்தில் நின்று திவ்யமாக தரிசிக்கலாம். ஆனால் இப்போதெல்லாம் மிகவும் தொலைவிலேயே நிறுத்திவிடுகிறார்கள். தூரதரிசனமாக இருந்தாலும் நிறைவாகவே இருந்தது. இரண்டே மணிநேரத்தில் தரிசனம் முடிந்து வெளிவந்து விட்டோம்.வெளியில் வரும்போது தொன்னையில் சுடச்சுட கொடுத்த புளியோதரையும், பொங்கலும் தேவாம்ருதம்.நினைவு தெரிந்த நாளிலிருந்து சுவையும் மணமும் மாறாமல் இருக்கும் ஒரு விஷயம் திருப்பதி லட்டு.

பேருந்து மற்ற பயணிகளுடன் காளஹஸ்தி புறப்பட நாங்கள் மட்டும் திருப்பதி ரெயில்வே ஸ்டேஷனுக்கு சென்னை வண்டியைப் பிடிக்க சென்றோம்.


இவுங்களுக்கு மட்டும் கேமரா அனுமதி உண்டாம்




நல்ல வேளையா இந்த ஃபோட்டோவுக்கெல்லாம் தடை கிடையாது




கோபுர தரிசனம்

திருப்பதி ரெயில் நிலையத்தில் இருக்கும் உயர் வகுப்பு பயணிகள் அறை ஏ.சி. வசதியுடன் அருமையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. முக்கியமாக செல்ஃபோன் மற்றும் மடிக்கணிணிகளை சார்ஜ் செய்து கொள்ளும் வசதியை ஓய்வறைகளிலும் ரெயில் பெட்டிகளுக்குள்ளும் அளித்திருக்கும் ரெயில்வே நிர்வாகத்தை நிச்சயமாக பாராட்டவேண்டும். ஆனால் இந்த சப்தகிரி எக்ஸ்ப்ரஸ்ஸும் சரி, பின்னர் பயணம் செய்ய நேர்ந்த வைகை எக்ஸ்ப்ரஸ்ஸும் சரி 1977 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியபோது இருந்த ரெயில்பெட்டிகளையே இன்னமும் உபயோகித்துக் கொண்டிருக்கிறார்கள் போலும். மேலே சொன்ன சார்ஜர் வசதியை தவிர மற்றவையெல்லாம் அரதப்பழசாக அழுக்கடைந்து இருக்கின்றன. முன்னால இருக்கும் சாப்பாட்டு ட்ரே 5 நிமிடத்துக்கு ஒரு முறை விழுந்து நம் முட்டியை பதம் பார்க்கிறது.


ரெயில் பெட்டியில் சார்ஜர் வசதி

சென்னையில் இரவு தங்கல் மட்டுமே. மறுநாள் காலை ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் தில்லிக்கு பறந்துவிட்டோம். பட்ஜெட் ஏர்லைன்ஸாக இருந்தாலும் டைகர் ஏர்வேஸுடன் ஒப்பிடுமபோது ஸ்பைஸ் ஜெட் எவ்வளவோ மேல். விமானமும் சர்வீசும் நன்றாக இருக்கிறது. முக்கியமாக குடிக்க தண்ணீரும் குழந்தைகளுக்கு பொழுதுபோக்க ஒரு ட்ராயிங் கிட்டும் கொடுக்கிறார்கள்.


இதுவும் ஒரு வசதி, பக்கத்தில் நின்று புகைப்படம் எடுத்து கொள்ளலாம்.

ஒரு வழியாக பதிவு தில்லியை அடைந்துவிட்டது.... மேலும் தொடரும்

Monday, July 6, 2009

முட்டை தொழிலும், முட்டைக்கு எதிரான தொழிலும் - இந்தியா ஒளிர்கிறது (இ)

தொடர்புடைய முந்தைய இடுகைகள்
மெக் டொனால்ட்ஸும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ்ஸும் - இந்தியா ஒளிர்கிறது (ஆ)
இந்தியா ஒளிர்கிறது - (அ)

"சார், ஆட்டோ வேணுமா சார்?"

"ஆமாப்பா, ஆனா ஒரு ஆட்டோ போதாது, லக்கேஜ் நெறய இருக்கே. இன்னோரு ஆட்டோவும் கூப்புடுங்க"

"வேணாம் சார்,அட்ஜஸ்ட் பண்ணி போயிரலாம். லக்கேஜ்லாம் நான் உள்ற வைக்கிறேன்"

திருச்சி கே.கே. நகர் போவதற்கு டி.வி.எஸ் டோல்ககேட்டில் இறங்குவதற்கு பதிலாக, பால்பண்ணையிலேயே தவறாக இறங்கியபின், எங்களை வரவேற்ற ஆட்டோகாரருக்கும் எனக்கும் நடந்த சம்பாஷனைதான் மேலே.

லக்கேஜையெல்லம் நன்றாக வைத்துவிட்டு, எங்களையெல்லாம் நடுவில் திணித்து ஒரு வழியாக கூட்டிக்கொண்டு போய் சேர்த்துவிட்டார்.





மறுநாள், சேலத்தில் உறவினர் திருமணத்திற்கு போக வேண்டியிருந்தது. நாலில் மூணு பெட்டி முழுக்க மனைவியின் துணிமணிகள் இருந்தாலும், கீழ் வரும் வசனத்தால் முதல் நாளே ஷாப்பிங் கிளம்பி விட்டோம்.

"ஏங்க கல்யாணத்துக்கு போட நல்ல ட்ரெஸ்ஸே இல்லீங்க, முதல்ல போய் ரெண்டு செட் வாங்கணும்"

திருச்சியில் துணி வாங்கும் சீசன் இல்லை போலும். சென்னை சில்க்ஸ், ஆனந்தா போன்ற பெரிய கடைகளில் கூட ஈ ஓட்டிக்கொண்டு ஒரு வாடிக்கையாளருக்கு நான்கு விற்பனை பிரதிநிதிகள் வீதம் துரத்தி கொண்டிருந்தார்கள்.

வெரைட்டிகளும் அதிகம் இல்லை. ஆனால் விலை மட்டும் அசுர விலையாக இருந்தது. அஞ்சு லிட்டர் தண்ணீரும், 2 லிட்டர் ஜூஸும் குடித்து பத்து கடைகள் ஏறி இறங்கிய பின் நகோடா மற்றும் சிவத்தில் பர்சேஸை முடித்து வீடு திரும்பினோம்.

அண்ணன் மற்றும் அக்கா குடும்பத்தினருடன் மறுநாள் சேலம் பயணம். நீண்ட நாட்களாக விட்டுப்போன குடும்ப விஷயங்களயெல்லாம் கேட்ச் அப் செய்வதற்கு இந்த 4 மணிநேர பயணம் உதவியது.

சென்னை திருச்சியை போலவே திருச்சி சேலம் சாலைகளும் மிக நன்றாகவே போட்டு விட்டார்கள். இங்கும் பால வேலைகள் மட்டுமே பெண்டிங்.

முன்பெல்லாம் நாமக்கல், ராசிபுரம் பகுதிகளில் எக்கச்சக்கமாக கோழிப்பண்ணைகள்தான் வரும். இப்போது கோழிப்பண்ணைகளுடன் கூடவே ஏராளமாக பள்ளிகளும் தென்படுகின்றன.இந்த மாவட்டததின் முக்கிய தொழிலாக முட்டைகளுடன் கல்வியும் சேர்ந்துவிட்டது. என்ன ஒரு வித்தியாசம் பண்ணைகளில் முட்டைக்காக உழைக்கிறார்கள்.
பள்ளிகளில் முட்டை வாங்காமல் இருக்க உழைக்கிறார்கள். இந்த பள்ளிகளில் இருந்து பல மாணவர்களும் மாநில அளவில் ரேங்க் வாங்குவதால் அட்மிஷனுக்கு கூட்டம் அலைமோதுகிறது.

திருமணத்தில் பலப்பல வருடங்களாக பார்க்காத சொந்தங்களையெல்லாம் காணும் பாக்கியம் கிடைத்தது. பழுத்த பழங்களாக இருக்கும் முந்தைய தலைமுறையினரையும், தோளுக்கு மேல் வளர்ந்து நிற்கும் அடுத்த தலைமுறையினரையும் சந்தித்தது மனதுக்கு நிறைவாக இருந்தது.

திருச்சியில் தென்னூர் மற்றும் பாலக்கரை மேம்பாலங்கள் போக்குவரத்து நெரிசலை பெரிதும் குறைக்க உதவியிருக்கிறது. மத்திய பேருந்து நிலையத்தையும் நன்றாக விரிவுபடுத்தியிருக்கிறார்கள்.மாறாமல் இருப்பது பேருந்து நிலையத்தில் நுழைந்ததும் வரவேற்கும் சிறுநீர் மணம் மட்டும்தான்.

அடுத்த 3 நாட்களும் 4 வேளை சாப்பாடும் தூக்கமுமாக சுகமாக கழிந்தது. வரப்போகும் நீண்ட சுற்றுலாவுக்கு இந்த ஒய்வு எவ்வளவு உதவியது என்பது பின்னர்தான் புரிந்தது.

Thursday, July 2, 2009

மெக் டொனால்ட்ஸும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ்ஸும் - இந்தியா ஒளிர்கிறது (ஆ)

தொடர்புடைய முந்தைய இடுகை "இந்தியா ஒளிர்கிறது (அ)"

சிங்கை --> சென்னை

பாதிக்கு பாதி விலைக்கு டிக்கட் தருகிறார்கள் புலி மார்க் விமானத்தில் என்று 3 மாதம் முன்பே வாங்கியாகிவிட்டது. ஆனால் தவிச்ச வாய்க்கு தண்ணி தர மாட்டார்கள், லக்கேஜும் ஒருவருக்கு பதினைந்து கிலோதான்.

எத்தனையோ முறை வீட்டிலேயே எடை போட்டு பார்த்து சென்றாலும் செக் இன் சமயத்தில் சப்பை மூக்கு காரிகள் பார்க்கும்போது அரை கிலோ ஒரு கிலோ அதிமாகவே காட்டுகிறது.

பெண்களுக்கு ஒரு கைப்பை இலவசமாக எடுத்து செல்லலாம்.அதிகப்படி லக்கேஜையெல்லாம் ஒரு மத்தள சைஸ் பையில் போட்டு தன் தோளில் மாட்டிக் கொண்டு "ம்ம்... இப்ப எடை போடுங்க.. பார்க்கலாம்" என்றாள் என் மனைவி. சப்பை மூக்கி மேலும் கீழுமாக "பட்ஜெட் ஏர்லைன்ஸுக்கு ஏத்த ஆளுதான்" என்பது போல் ஒரு பார்வை பார்த்துவிட்டு போர்டிங் பாஸை போட்டு கொடுத்து விட்டாள்.

இரவு 8 மணிக்கு கிளம்ப வேண்டிய விமானம் 8:15 ஆகியும் கிளம்பும் அறிகுறியே காணவில்லை. புதிதாக யாரும் ஏறுகிற மாதிரியும் தெரியவில்லை. 08:30 க்கு பைலட்டிடமிருந்து ஒரு அறிவிப்பு. "செக் இன் செய்த பயணிகள் சிலர் இன்னமும் விமானத்திற்கு வந்து சேரவில்லை,எனவே தாமதத்திற்கு மன்னிக்கவும்" என்று.

9 மணி சுமாருக்கு 5 பேர் கொண்ட ஒரு குடும்பம் கை நிறைய மெக்-டொனால்ட்ஸ் பைகளுடன் வந்து சேர்ந்தனர். "ஒம்பது மணிக்கி ப்ளைட்டின்னு நெனச்சி சாப்பாட்டு கடையில ஒக்காந்திட்டம்" என்று பல் குத்திக்கொண்டே விளக்கம் வேறு.

09.30 மணிக்கு போய் சேர்ந்துவிட்டால், ஓண்ணரை மணி நேர இடை வெளியில் மலைக்கோட்டை எக்ஸ்ப்ரெஸ்ஸை தாம்பரத்தில் பிடித்துவிடலாம் என்று முன்பதிவு செய்து வைத்திருந்த என் திட்டம் பனால்!!! என்று சிம்பாலிக்காக சிக்கன் ஏப்பம் விட்டு காண்பித்தார் மெக்-டொனால்ட் குடும்ப பெரிசு ஒருத்தர்.

சென்னையில் இறங்கி வெளியே வந்தால் முகமூடி அணிந்து கொண்டு ஏகப்பட்ட பேர் நிற்கவும், "போச்சுறா, இப்பல்லாம் விமான நிலையத்தையே ஹைஜாக் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க போல" எனறு பயத்துடன் சொன்னேன். பையன்தான் " இல்லப்பா, ஸ்வைன் ஃப்ளூவுக்காக செக் பண்றாங்க" என்று தைரியமூட்டினான். இந்த பார்மாலிட்டியெல்லாம் முடித்து வெளியில் வர பதினோரு மணியே ஆகிவிட்டது.

ஏற்கெனவே சொல்லி வைத்திருந்த டாக்ஸி ட்ரைவர் காத்து கொண்டிருந்ததார்.

"தாம்பரத்துல ஆம்னி பஸ்லாம் நி்க்கற எடத்துக்கு போங்க, ஏதாவது பஸ்ஸ புடிச்சு போயிர்றோம்" என்றேன்.

போகிற வழியில் RR travels - A/C Volvo வை ஒவர் டேக்கி நிறுத்தி, ட்ரைவர் போய் இடம் இருக்கிறதா என்று கேட்டு ஓடி வந்து "சீட்டு இருக்கு சார், வாங்க" என்றார்.

"சின்ன லக்கேஜையெல்லாமும் பின்னாடியே போட்ருங்க சார், பஸ்ல ஒக்காற மட்டும்தான் எடம் இருக்கு" என்று பஸ் ட்ரைவர் சொல்லவும் சந்தேகம் வந்து விசாரித்தபோதுதான் தெரிந்தது ட்ரைவர் கேபினில்தான் உட்கார்ந்து வர வேண்டும் என்பது. (அதுக்கும் ஆளுக்கு 400 ரூபாயாம் - எப்படியெல்லாம் ஏமாத்துறாய்ங்கப்பா..)

திரும்பவும் அத்தனை லக்கேஜையும் கீழிறக்கி,வேறு பஸ்ஸை பிடித்து வந்தது ஒரு பெரிய கதை.

சென்ற முறை திண்டிவனம் வரை மட்டுமே இருந்த 4 வழி சாலை இப்போது திருச்சி வரையிலும் போட்டாகிவிட்டது. நல்ல தரத்துடன் அற்புதமாகவே இருக்கிறது. இடை இடையே பாலங்களுக்கான வேலை நடைபெறுவதால் தடங்கல்கள் இருந்தாலும், பயணம் சுகமாகவே இருக்கிறது. பாலங்களும் முடிந்து விட்டால் உலகத்தரமான சாலைகளாக இருக்கும் என்பது திண்ணம்.




அந்த ஐந்து பேரால் எனக்கு 2000 ரூபாய், 5 மணி நேரம் மற்றும் ஒரு நாள் தூக்கமும் வீண். மற்ற 150 பயணிகளும் என்னவெல்லாம் கஷ்டப்பட்டார்களோ பாவம்.

பி.கு:- பயணத்தின்போதே எழுத வண்டும் என்று நினத்தேன். மடிக்கணிணி மக்கர் செய்துவிட முடியாமல் போய்விட்டது. சிங்கப்பூர் திரும்பி 4 நாட்கள் ஆகிவிட்டது. ஆனால் அலுவலகத்தில் சுவர் முழுக்க ஆணி அடித்து வைத்திருந்தார்கள். பிடுங்கி போட்டுவிட்டு மூச்சு விட இப்பொழுதுதான் நேரம் கிடைத்தது. தில்லி, ஆக்ரா, சிம்லா, மனாலி பயண அனுபவங்களும், புகைப்படங்களும் வரும் இடுகைகளில் தொடரக்கூடும்.

Saturday, June 6, 2009

இந்தியா ஒளிர்கிறது - (அ)

ஜூன் மாதம் இந்தியா வர வேண்டும் என்பது நான்கைந்து மாதங்கள் முன்பே முடிவு செய்யப்பட்ட ஒன்று.

2 வருடங்கள் முன்பு ஒரு முறை வந்திருந்தாலும் வெளியில் அதிகம் நடமாட முடியாமல் உடல் நலக் குறைவு ஏற்பட்டு வீட்டு சிறையில் அடைபட்டே கிடந்ததால் இந்த விஜயம் 4 வருடங்களுக்கு பிறகு வருவதாகத்தான் கணக்கு.

இந்த 4 வருடங்களில் ஏற்பட்டுள்ள கவனிக்க தக்க மாற்றங்களையும், மாற விரும்பும் விஷயங்களையும் பதிவு செய்ய விருப்பம்.

புறப்படுவதற்கு முன்பே பிரமித்த விஷயம், இ- காமெர்ஸில் (மின் வணிகம்) ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள்.

இந்தியாவின் எந்த மூலைக்கும் IRCTC வெப் சைட்டின் மூலமாக டிரெயின்களுக்கு முன்பதிவு செய்ய முடிகிறது. 4 வருடங்கள் முன்பே IRCTC இந்த சேவை அளித்து வந்தாலும், உள்ளூர் முகவரிக்கு டிக்கட்டை கொரியர் செய்து வந்தார்கள். பயணம் செய்யும் போது இந்த டிக்கட் நிச்சயம் கையில் இருக்க வேண்டும். ஆனால் இப்போதோ இ-டிக்கட் வசதி உள்ளது. உலகின் எந்த மூலையில் இருந்தாலும் உங்கள் வீட்டிலேயே பிரிண்ட் எடுத்து கொள்ளலாம்.

K.P.N போன்ற ஆம்னி பஸ்களும் இப்போது ஆன்லைன் ரிஸர்வேஷன் வசதி அளிக்கின்றன.

தில்லி, சிம்லா, குல்லு, மனாலி மற்றும் ஆக்ரா செல்லவும் திட்டம்.தில்லியில் ஹோட்டல் அறை,விமான நிலையத்திலிருந்து ஹோட்டல் செல்ல டாக்ஸி மற்றும் அங்கிருந்து சுற்றுலா செல்ல பேக்கேஜ் டூர்கள் (பணிக்கர் அல்லது சதர்ன் டிராவல்ஸ்) போன்ற எல்லா விஷயங்களையும் ஆன்லைனிலேயே முன்பதிவு செய்ய முடிகிறது.திட்டமிடுதல் மிகவும் எளிதாகி விட்டது.

அடுத்து வியந்த விஷயம், உள்நாட்டு விமான போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள். சென்னை-தில்லி பயணத்திற்கு ஸ்பைஸ் ஜெட் போன்ற விமானங்கள், கிட்டத்தட்ட ரெயில் கட்டணத்திற்கே டிக்கட் கொடுக்கிறார்கள். கொஞ்சமே கொஞ்சம் அதிகம் செலவானாலும் கிட்டத்தட்ட 3 நாட்களும் உடல் அயற்சியும் மிச்சமாகிறது. ஆளுக்கு எட்டாயிரம் ரூபாய் செலவில் சென்னை-தில்லிக்கு போய் வர முடிகிறது.

திருப்பதி போய் பெருமாளையும் தரிசித்து வர விருப்பம்.திருப்பதி தேவஸ்தான இணைய தளத்தில் எல்லா வசதிகளும் இருந்தாலும், எல்லா கட்டங்களும் பல மாதங்கள் முன்பே சிவப்புக்கு மாறிவிடுகிறது. அறை வசதி, சேவைகள் போன்ற எல்லாமே 90 நாள் முன்பு வெளியிட்ட அன்றே தீர்ந்து போய்விடுவது அந்த வெங்கடேசனுக்குத்தான் வெளிச்சம். தரிசனம், உணவு மற்றும் பயணம் எல்லாவற்றையும் சேர்த்து பேக்கேஜ் டூராக திருச்சியிலிருந்தே அழைத்து செல்கிறார்கள்.இதற்கு மட்டும் உறவினர் மூலமாக நேரிலேயே பதிவு செய்தாகி விட்டது.

திட்டமெல்லாம் சரிதான். எல்லாம் நல்லபடி முடிந்து, சுவாரசியமான அனுபவங்களை பகிரவும் ஆசை. ம்...ம்... பார்ப்போம்.

டிஸ்கி :இடுகைகளுக்கு இடையேயான இடைவெளியால் கவலை கொண்டிருந்த ஆயிரமாயிரம் (அவ்வ்வ்....) வாசகர்களுக்கும், என் பின்னூட்டங்கள் வராததால் நிம்மதியாக இருந்த பிரபல பதிவர்களுக்கும்...சொல்லிக் கொள்வது...

அவ்வளவு எளிதில் விடுவதாக இல்லை..இணைய தொடர்பு கிடைக்கும் போதெல்லாம் வருவேன்..வருவேன்..வருவேன்.. என்ற எச்சரிக்கையையும் விடுக்கிறேன்