Showing posts with label நகைச்சுவை ஒரு வேளை நீங்க சிரிச்சால். Show all posts
Showing posts with label நகைச்சுவை ஒரு வேளை நீங்க சிரிச்சால். Show all posts

Monday, March 8, 2010

"காமன் வுமேன்" - காமன் மேனின் பார்வையில்

ஆர்.கே.லக்ஷ்மண் அவர்களால் பிரபலமான காமன் மேன், சமீப காலத்தில் "உன்னைப்போல் ஒருவன்" படத்திற்கு பிறகு பரபரப்பாக பேசப்பட்டார்.முக்கியமாக தமிழ்ப் பதிவுலகில்... எனக்கு ஒரு மன வருத்தம்.அது என்ன இந்த காமன் வுமேனை மட்டும் யாரும் கண்டு கொள்ளவே இல்லையே என்று....

எனவே மகளிர் தினத்தை முன்னிட்டு... "காமன் வுமேனின் குணாதியசங்கள்" - ஒரு காமன் மேன் பார்வையில்.

1. ஆன்லைன் ஷாப்பிங், ஃபோன் ஷாப்பிங் என்று பல வசதிகள் இருந்தாலும் ஞாயிற்றுக்கிழமை காலையில் மறக்காமல் காபி பொடியோ, சர்க்கரையோ வாங்க கணவனை கடைக்கு அனுப்புபவர்கள்.

2. தன் குழந்தையின் அழகுக்கும் புத்திசாலிதனத்துக்கும் தன் பரம்பரையும், தவறுகளுக்கும் துர்குணங்களுக்கும் தன் கணவனின் ஜீன்களும் காரணம் என்று சர்வ நிச்ச்யமாக நம்புபவர்கள்.

3. நான்கு மணி நேரம் நாப்பது கடை ஏறி இறங்கி துணிகள் வாங்கிய பிறகு எதிரில் வரும் பெண்ணின் உடையோ அல்லது நாப்பத்தி ஒண்ணாவது கடை பொம்மையின் சேலையோ அழகாக இருப்பதாக சொல்பவர்கள்.

4. மும்பை வெடிகுண்டு சம்பவ செய்தியை படிக்கும் பெண்ணின் தோடு டிசைன் நன்றாக இருப்பதாக ரசிப்பவர்கள்.

5. ஒரு கிலோவுக்கு 200 கிராம் எடையில் அடிக்கும் காய்கறிக்காரனிடம் கொசுறாக கிடைக்கும் கறிவேப்பிலை கொத்தமல்லிக்காக சந்தோஷப்படுபவர்கள்.

6. உலகச் செய்திகளை விட லோக்கல் (அக்கம் பக்கத்து வீட்டு) செய்திகளில் அதிக நாட்டம் கொண்டவர்கள்.

7. சொந்த சோகங்களை தொலைக்காட்சித் தொடர் சோகங்களில் மூழ்கி மறப்பவர்கள்.

8. மருமகளாக இருக்கும் போது தானே சிறந்த மருமகள் என்றும் மாமியாராக இருக்கும் போது தானே சிறந்த மாமியார் என்றும் நினைத்துக் கொள்பவர்கள்.

9. சமையல் செய்ததில் எது மீதமானாலும் மறக்காமல் ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு ஒரு வாரம் கழித்து First in First Out (FIFO) அடிப்படையில் குப்பைத் தொட்டியில் கொட்டுபவர்கள்.

10. தமிழின் மிகச் சிறந்த நாவல்களை எழுதியவர் லஷ்மி என்று கற்பூரம் அணைத்து சத்தியம் செய்பவர்கள்.

11. "எங்கியோ பாத்தா மாதிரி இருக்கே", என்று ஏதாவது பெண்ணை விகல்பமில்லாமல் பார்க்கும் கணவன்மார்களை முறைப்பவர்கள்.

12. ஒழுங்காக பாத்திரம் தேய்க்காத வீடு பெருக்காத வேலைக்காரப் பெண் ஒரு நாள் வேலைக்கு வராவிட்டாலும் புலம்புபவர்கள்.

13. கடினமாக உழைத்து நல்ல பெயரும் பதவி உயர்வும் வாங்கும் கணவனை சரியாக ஐந்து மணிக்கு வீட்டுக்கு வந்துவிடும் பக்கத்து வீட்டுகாரனின் சாமார்த்தியம் வராது என்று இடித்துரைப்பவர்கள்.

20. ப்ளக்கை சொருகி லைட்டை போடும் மகனை வருங்கால எடிசனாகவும், கிளியை நினைத்து காகம் வரையும் போது பின்னாள் பிகாஸோவாகவும், ரெண்டக்க ரெண்டக்க பாட்டுக்கு இடுப்பில் கை வத்துக் கொண்டு தலையை ஆட்டும் பெண்ணை "பத்மா சுப்ரமணியத்துகிட்ட சேத்து விட்டா நல்லா வருவா" என்றும், "பாலும் தெளி தேனும்" சொல்லும்போது எஸ்.பி.பி யாகவோ, எம்.எஸ்.சுப்புலஷ்மியாகவோ நினைத்து புளகாங்கிதமடைவார்கள்.

பி.கு: 20 எழுதிரலாம்னு ஒரு வேகத்துல ஆரம்பிச்சேன். 6 மிஸ்ஸிங். பின்னாடி ஏதாவது தோணினாலோ, பின்னூட்டங்களில் வந்தாலோ இடையில் சேர்க்கப்படலாம்.

பிற்சேர்க்கை:
14.உலகத்திலேயே தனக்கு மட்டும் தான் மோசமான கணவன் வாய்த்ததாக புலம்புவார்கள்.(உபயம்: கோவி.கண்ணண்)

Friday, July 10, 2009

எனக்கு ஏன் வாசகர் கடிதமே வருவதில்லை????????

டிஸ்கி: நான் டைட்டிலை போட்டுவிட்டு "SAVE NOW" பட்டனுக்கு பதிலாக "PUBLISH POST" பட்டனை அமுத்தி விட்டேன். திரும்பி வந்து சரி செய்வதற்குள் இரண்டு பின்னூட்டங்கள் வந்துவிட்டன. எனவே இந்த இடுகையில் டிஸ்கி மட்டும்தான். மீதியை பின்னூட்டத்தில் பார்த்துக்கொள்ளுங்கள்.

Thursday, February 19, 2009

பரிசல் போட்ட பதிவுக்கு எசப்பதிவு

(தாமிராவுக்கும்,ரமேஷ் வைத்யாவுக்கும் அப்றமா...)

என் பையன் கிட்ட ஒரே ஒரு வார்த்தை தான் கேட்டேன், கொட்டி தீத்துட்டான். ஹ்ம்ம்... பிஞ்சு மனசுல இவ்வளவு வேதனையா?

1.நான் கார்ட்டூன் பார்த்தா மட்டும் கண்ணு கெட்ரும்னு சொல்றீங்க. நீங்க மட்டும் கிரிக்கெட் மேட்ச் 10 மணி நேரம் தொடர்ந்து பாக்கறீங்க?

2. எப்பவுமே பொய் சொல்லக் கூடாதுன்னு சொல்றீங்க, ஆனா உங்க பாஸ் கால் பண்ணா, "அப்பா செல் போன மறந்துட்டு ஃப்ரெண்ட் வீட்டுக்கு போயிருக்கார்னு" சொல்ல சொல்றீங்க?

3. அன்றைய வேலையை அன்றைக்கே செய்யணும்னு சொல்றீங்க. ஆனா அம்மா பாத்ரூம் லைட் எரியலேன்னு சொன்னா, சண்டே பார்த்துக்கலாம்னு சொல்றிங்களே?

4. நான் ரப்பர், பென்சில் தேடினா எதையும் ஒழுங்கா இடத்துல வைக்கறதில்லன்னு திட்டற நீங்க, அப்பப்போ சாவி, பர்ஸ் எல்லாம் தேடறீங்களே?

5. நான்லாம் உன் வயசில எவ்ளோ கஷ்டப்பட்டேன்னு சொல்றீங்களே, உங்கப்பா அதே வயசுல இன்னும் எவ்ளோ அதிகமா கஷ்டப்பட்டார்னு சொல்வீங்களா?

6. பெரியவங்களுக்கு மரியாதை குடுக்கணும்னு சொல்ற நீங்க மட்டும், டிவில வர்ற ஒரு வயசான கறுப்பு கண்ணாடி தாத்தாவ பார்க்கறப்பல்லாம் கன்னா பின்னான்னு திட்டறீங்களே?

7. என் க்ளாஸ்ல ஃப்ர்ஸ்ட் ரேங்க் வாங்கற பையன, அவன் எவ்ளோ நல்லா படிக்கறான்னு சொல்றீங்க. ஆனா, உங்க ஆபிஸ்ல மேனேஜர் ப்ரமோஷன் வாங்கின ராமு அங்கிள, காக்கா புடிச்சே வாங்கிட்டான்னு சொல்றது கரெக்ட்டா?

8. கரெண்ட் வேஸ்டாவுது லைட்ட அணை, ஃபேனை அணைன்னு சொல்ற நீங்க மட்டும் ராத்திரி ரெண்டு மணி வரைக்கும் உக்காந்து மொக்க பதிவெல்லாம் படிக்கறீங்களே?

9. நான் தப்பா கணக்கு போட்டா அவ்வளவு திட்டற நீங்க, அம்மா பண்ற சாம்பார் நல்லா இல்லன்னா சத்தம் போடாம சாப்டுட்டு போறது ஏன்?

10. எக்ஸர்சைஸ் பண்ணனும், ஒடியாடி வெளையாடணும்னு சொல்ற உங்களுக்கு மட்டும் தொப்பை பெரிசாயிட்டே போவுதே?

இன்னும் நெறைய சொன்னான், ஆனா அதெல்லாம் போட்டா என் இமேஜ் ஸ்பாயிலாயிடும்னு
எடிட் பண்ணிட்டேன்.

பரிசல், தாமிரா மற்றும் ரமேஷ் வைத்யா பதிவுகளின் தொடர்ச்சி.

Thursday, January 29, 2009

"தன்யவாத்"


இன்று காலை எனக்கு ஒரு போன். இந்தியா நம்பர், அதுவும் டெல்லி கோட். எனக்கு யார்ரா டெல்லிலேர்ந்து கால் பண்றாங்க, ராங்க் நம்பராத்தான் இருக்கும்னு நெனச்சு பட்டன அமுத்தினா, "க்யா மே அறிவிலி ஜி சே பாத் கர் ரஹா ஹூன்?" அப்படின்னுது ஒரு கரகர குரல். நானும் எனக்கு தெரிஞ்ச "கோன் பனேகா க்ரோர்பதி" ஹிந்தில "ஹாங்க் ஜி" அப்படின்னேன்.

இதுக்கு மேல நமக்கு "கம்ப்யூட்டர் ஜி தாலா லகாவ்" மட்டும்தான் தெரியும் அப்படிங்கற்தால "Can you please speak in English, I am not that fluent in Hindhi" அப்படின்னு அவசர அவசரமா சொன்னேன்.

இதுக்கு மேல ஒரே ஒரு வாக்கியம் மட்டுந்தான் என் காதுல விழுந்துது.

நாந்தான் அதுக்கப்புறம் மயக்கம் போட்டு விழுந்துட்டனே.

அந்த வாக்கியம் " “You have been conferred with Padmashree award for your valuable contribution in tamil blogs”

ஒன்றறை மணி நேரம் கழித்து மயக்கம் தெளிஞ்சு, என்னடா இது ஒரே ஒரு Blog தான். அதிலயும் மூணே மூணு போஸ்ட் தான் போட்றுக்கோம். பின்னூட்டம் கூட நாலஞ்சு தான் எழுதிருக்கோம். அதுக்குள்ள் நம்ம திறமைக்கு இவ்வள்வு மரியாதையா?. அப்படின்னு ஒரு மாதிரி (ஒரு ஜக் பீரை ஒரே கல்ப்ல அடிச்சாப்புல) ஜிவ்வுன்னு இருந்துது.

எனக்கு வந்த நம்பருக்கு திரும்ப கால் பண்ணா, யாரோ செகரெட்டரி தான் ராஷ்டிரபாஷால பேசறா. ஒன்னும் புரியல.

இப்ப அவசரமா டிவி நியூஸ் பாக்க போய்ட்டிருக்கேன். மீதியெல்லாம் மீடியால பார்த்து தெரிஞ்சுக்கோங்க.

பின் குறிப்பு 1 – உங்கள் வாழ்த்துக்கள் எல்லாவற்றையும் மின்னஞ்சலில் மட்டும் அனுப்பவும். தொலைபேசி, அரசு அதிகாரிகள் எந்த நேரமும் கூப்பிடலாம் என்பதால் ஃப்ரீயாக வைத்திருக்க வேண்டும்.

பின் குறிப்பு 2 – என் ஊர் ஜம்மு காஷ்மீரோ பெயர் ஹஷ்மத் உல்லா கானோ கிடையாது.

பின் குறிப்பு 3 - இந்த Blog க்கு ஏன் இந்த டைட்டில் அப்படிங்கறீங்களா. எனக்கு தெரிஞ்ச இன்னொரு ஹிந்தி வார்த்தைய கூட சொல்லாம மயக்கம் போட்டுட்டனா, அதான் டைட்டில்லயாவுது சொல்லலாம்னு வெச்சேன்.