Sunday, August 30, 2009

பாஞ்சி பாயுற பட்டம் இது பட்டய கிளப்புற பட்டம்

பள்ளி நாட்களில் சுவற்றில் 3 கோடு போட்டு எதிர் பக்க ஸ்டம்ப்புக்கு ஒரு செங்கல்லோ குச்சியோ நட்டு ரப்பர் பந்தை வைத்து விளையாடும் கிரிக்கெட் மட்டும்தான் நிரந்தர விளையாட்டு. பம்பரம், கோலி குண்டு (முட்டி தேய), கில்லிதாண்டு (கிட்டி புள்) போன்றவையெல்லாம் சீசனல் கேம்ஸ். அதே போல்தான் இந்த பட்டமும். எப்படித்தான் ஆரம்பிக்கும் என்றே தெரியாது. முதல் நாள் ஓரிரண்டு தான் தென்படும். அடுத்தடுத்த நாட்களில் வானமே நிறைந்து விடும்.அருகிலிருக்கும் சிறு கடைகளில் பட்டங்களும் நூல் கண்டுகளும் முன்பக்கத்தை ஆக்கிரமித்துக் கொள்ளும்.

என் குழுவில் எதையுமே சீரியஸ்ஸாக செய்யும் சிலர் உண்டு. கிரிக்கெட் என்றால் கரியோ செங்கல்லோ கொண்டு கோடு போடுவதுடன்,மரக்கட்டையையோ தென்னை மட்டையையோ பேட்டாக மாற்றுவார்கள். கில்லி என்றால் நல்ல கொம்பை தேர்ந்தெடுத்து மழு மழுவென்று கிட்டிப் புள் தயாரிப்பார்கள்.கோலி குண்டுக்கு இடம் தேர்ந்தெடுத்து குழிகள் தோண்டுவார்கள். இவர்களுடைய பம்பரங்களில் ஆணி மிகவும் கூர்மையாக இருக்கும்.இவர்களுடைய இத்தகைய தனித் திறன்களாலும் ஆடும் திறனாலும் குழுவுக்கு தலையாக இவர்களே இருப்பார்கள்.

காற்றாடிக்கு மட்டும் ஆயத்த வேலைகள் அதிகம்.முதல் வேலை, நூல் கண்டு வாங்கி மாஞ்சா போடுவது. தெருத்தெருவாக சுற்றி கண்ணாடி பாட்டில்கள் பொறுக்கி அதை நொறுக்க இடிததுக் கொள்ளவேண்டும்.பசை போன்று கஞ்சி காய்ச்சி அதில் நுணுக்கிய கண்ணாடித் துகள்களையும் இன்ன பிற சமாச்சரங்களையும் (குரங்கு மார்க் மஞ்சள் தூள் கூட கலந்ததாக ஞாபகம்)கலந்து அதை சர்வ ஜாக்கிரதையுடன் நூலில் தடவ வேண்டும். ஆபத்தான வேலைகளையெல்லாம் தலைகள் செய்ய, என் போன்ற அல்லக்கைகள் எல்லாம் பாட்டில் பொறுக்குவது, நூல் கண்டு உருளையை பிடித்துக் கொள்வது என்று அத்தியாவசிய உதவிகளை செய்வோம். இந்த ப்ரொஃபெஷனல்ஸ் எல்லாம் கடையில் விற்கும் பட்டங்களை வாங்க மாட்டார்கள். அவர்களே கலர் பேப்பர் வாங்கி, வெட்டி ஒட்டி சூத்திரம் (குறுக்கு நெடுக்காக குச்சிகளை வைத்து சரியான இடத்தில் நூலை கட்டுவது) போட்டு தயாரிப்பார்கள். விதம் விதமாக வாலும் உண்டு. பேப்பரிலேயே சங்கிலி போல் செய்யபபடும் வால்தான் மிகவும் பிரசித்தம்.

சாயந்திரம் ஐந்து மணி வாக்கில் பட்டங்கள் பறக்க ஆரம்பிக்கும். யாருடையது உயரம் என்பதில் போட்டி இருக்கும். ஆனால் வெறும் உயரப்போட்டிக்கு மாஞ்சா நூல் தேவையில்லையே! முக்கியமான விஷயமே "டீல்" போடுவதுதான். அடுத்தவர்களின் காற்றாடிக்கு அருகில் கொண்டு போய், நம் காற்றாடியின் நூலை சாமார்த்தியமாக ஒரு சுண்டு சுண்டினால் அது அவர்களுடைய நூலை சுற்றி வளைத்து அறுத்துவிடும். இதில் வெற்றியடைய மாஞ்சா நூலின் உறுதியும், சுண்டுபவரின் சாமார்த்தியமும் மிகவும் முக்கியம்.எதிரணி வலுவாக இருநதால் நம் பட்டம் அறுந்து விடவும் வாய்ப்பு உண்டு. யாருடையது அறுந்து விட்டாலும் அண்ணாந்து பார்த்துக் கொண்டே ஒரு பெரிய கூட்டம் அதன் பின் தெருத்தெருவாக ஓடும்.சமயத்தில் மரத்திலோ அல்லது கரண்ட் கம்பியிலோ சிக்கிக் கொண்டு இருக்கும் காற்றாடிகளை மீட்டெடுப்பது ஒரு தனி ப்ராஜெக்ட்.

இப்படிப்பட்ட பல சுவாரஸியமான விளையாட்டுகளை இந்தத் தலைமுறை இழந்துவிட்டதே என்ற வருத்தம் எனக்கு எப்போதுமே உண்டு.சென்ற வார இறுதியில் சிங்கபபூரில் "காற்றாடித் திருவிழா" நடப்பதாக செய்தி வரவும் பையனுக்கு பட்டங்களையாவது காட்டலாமே என்று கூட்டிச் சென்றேன்.

அவனுக்கு மட்டுமல்லாமல் எனக்குமே அற்புதமான அனுபவமாக இருந்தது. விதம் விதமான நூறறுக் கணக்கான காற்றாடிகள். பார்வையாளர்களுக்கும் முயற்சி செய்து பார்க்க இலவசக் காற்றாடிகள் வழங்கியதோடு, சிறுவர்களுக்கு பட்டங்கள் செய்யும் வழிமுறைகளை சொல்லித்தரும் பட்டறைகளும் நடத்தினார்கள்.

விழா கடற்கரையில் நடந்ததால் மணல் சிற்பங்கள் செய்து வைத்திருந்ததோடு, குழந்தைகளும் முயற்சி செய்து பார்க்க ஆவண செய்திருந்தார்கள். குழந்தைகளாக வாய்க்கால் மணலில் கோபுரங்கள் செய்து அதில் நான்கு பக்கங்களலிருந்து சுரங்கப்பாதை தோண்டியதும், சோழியை ஒளித்து வைத்து "கீச்சு கீச்சு தாம்பாளம்" என்று விளையாடியதும் நினைவுக்கு வந்தது.உங்களுக்காக சில படங்கள் கீழே.















மணல் சிற்பங்களும் குழந்தைகளும்








பட்டம் விட்ட சில சிங்கைப் பதிவர்கள்
மேலே பட்டம் விடும் பிரபல பதிவரை கண்டு பிடிப்பவர்களுக்கு தலா நாலு தமிழ்மணம் ஓட்டு

பட்டம் விட ஆயத்தமாகும் விஜய் ஆனந்தும் (பின்னூட்டப் புயல்) விஜய்யும் (பித்தன்)

விட்டா பறக்குமா பித்தன்?

11 comments:

கோவி.கண்ணன் said...

:)

Sanjai Gandhi said...

வாவ் சூப்பர்.. மலர்ந்த நினைவுகள் வெகு அருமை..

சுட்டி கொடுத்த கோவியாருக்கு நன்றிகள்.

அறிவிலி said...

@கோவி.கண்ணண்

நன்றி.
நன்றி.
நன்றி.

மூன்றும் வேறு வேறு விஷயங்களுக்கு.

அறிவிலி said...

@SanjaiGandhi

முதல் வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி.

ஜோசப் பால்ராஜ் said...

இங்க எல்லாம் யாராச்சும் டீல் போட்டாங்களா? மாஞ்சா மேட்டர் எல்லாம் இங்க பட்டத்துல உண்டா?

அப்பால பெரியவா ஏன் வெறும் நூல புடிச்சுட்டு நிக்கிறா?

அறிவிலி said...

@ஜோசப் பால்ராஜ்

அட ஏங்க... நைலான் நூல் வெச்சுககிட்டு பட்டம் விடறாய்ங்க டீலாவது மாஞ்சாவாவது..

அவரு நெஜம்மாவே பட்டம் வுட்டாருங்க.

Mahesh said...

சூப்பர்... நீங்க சொன்னபோது ஒரு ஒரமா, அடாடா.. மிஸ் பண்ணிட்டோமோன்னு நினைச்சேன்... படங்கள் போட்டு அசத்திட்டீங்க.

வெற்றி-[க்]-கதிரவன் said...

photo ellaam super

****


//விஜய்யும் (நான் பித்தன்) //

already vera oruthar naan pithan perula irukkaaru so please remove "நான்"

அறிவிலி said...

@Mahesh

நன்றி.

அறிவிலி said...

@[பி]-[த்]-[த]-[ன்]

எடுத்து விட்டேன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Anonymous said...

சின்ன வயசுல நண்பர்களோட பட்டம் விட்டது. குழந்தைப்பருவம் தாண்டினாலே இது மாதிரி விஷயங்கள் எல்லாம் இழக்க வேண்டி இருக்கு.

Post a Comment

எச்சரிக்கை - பின்னூட்டம் போடாமல் செல்பவர்களுக்கு என்னுடைய பதிவுகளின் தொகுப்பு அனுப்பி வைக்கப்படும்.

ஆபத்துகளை வருமுன் தடுப்பதே நல்லது.