Showing posts with label அறியாத பருவம். Show all posts
Showing posts with label அறியாத பருவம். Show all posts

Sunday, August 30, 2009

பாஞ்சி பாயுற பட்டம் இது பட்டய கிளப்புற பட்டம்

பள்ளி நாட்களில் சுவற்றில் 3 கோடு போட்டு எதிர் பக்க ஸ்டம்ப்புக்கு ஒரு செங்கல்லோ குச்சியோ நட்டு ரப்பர் பந்தை வைத்து விளையாடும் கிரிக்கெட் மட்டும்தான் நிரந்தர விளையாட்டு. பம்பரம், கோலி குண்டு (முட்டி தேய), கில்லிதாண்டு (கிட்டி புள்) போன்றவையெல்லாம் சீசனல் கேம்ஸ். அதே போல்தான் இந்த பட்டமும். எப்படித்தான் ஆரம்பிக்கும் என்றே தெரியாது. முதல் நாள் ஓரிரண்டு தான் தென்படும். அடுத்தடுத்த நாட்களில் வானமே நிறைந்து விடும்.அருகிலிருக்கும் சிறு கடைகளில் பட்டங்களும் நூல் கண்டுகளும் முன்பக்கத்தை ஆக்கிரமித்துக் கொள்ளும்.

என் குழுவில் எதையுமே சீரியஸ்ஸாக செய்யும் சிலர் உண்டு. கிரிக்கெட் என்றால் கரியோ செங்கல்லோ கொண்டு கோடு போடுவதுடன்,மரக்கட்டையையோ தென்னை மட்டையையோ பேட்டாக மாற்றுவார்கள். கில்லி என்றால் நல்ல கொம்பை தேர்ந்தெடுத்து மழு மழுவென்று கிட்டிப் புள் தயாரிப்பார்கள்.கோலி குண்டுக்கு இடம் தேர்ந்தெடுத்து குழிகள் தோண்டுவார்கள். இவர்களுடைய பம்பரங்களில் ஆணி மிகவும் கூர்மையாக இருக்கும்.இவர்களுடைய இத்தகைய தனித் திறன்களாலும் ஆடும் திறனாலும் குழுவுக்கு தலையாக இவர்களே இருப்பார்கள்.

காற்றாடிக்கு மட்டும் ஆயத்த வேலைகள் அதிகம்.முதல் வேலை, நூல் கண்டு வாங்கி மாஞ்சா போடுவது. தெருத்தெருவாக சுற்றி கண்ணாடி பாட்டில்கள் பொறுக்கி அதை நொறுக்க இடிததுக் கொள்ளவேண்டும்.பசை போன்று கஞ்சி காய்ச்சி அதில் நுணுக்கிய கண்ணாடித் துகள்களையும் இன்ன பிற சமாச்சரங்களையும் (குரங்கு மார்க் மஞ்சள் தூள் கூட கலந்ததாக ஞாபகம்)கலந்து அதை சர்வ ஜாக்கிரதையுடன் நூலில் தடவ வேண்டும். ஆபத்தான வேலைகளையெல்லாம் தலைகள் செய்ய, என் போன்ற அல்லக்கைகள் எல்லாம் பாட்டில் பொறுக்குவது, நூல் கண்டு உருளையை பிடித்துக் கொள்வது என்று அத்தியாவசிய உதவிகளை செய்வோம். இந்த ப்ரொஃபெஷனல்ஸ் எல்லாம் கடையில் விற்கும் பட்டங்களை வாங்க மாட்டார்கள். அவர்களே கலர் பேப்பர் வாங்கி, வெட்டி ஒட்டி சூத்திரம் (குறுக்கு நெடுக்காக குச்சிகளை வைத்து சரியான இடத்தில் நூலை கட்டுவது) போட்டு தயாரிப்பார்கள். விதம் விதமாக வாலும் உண்டு. பேப்பரிலேயே சங்கிலி போல் செய்யபபடும் வால்தான் மிகவும் பிரசித்தம்.

சாயந்திரம் ஐந்து மணி வாக்கில் பட்டங்கள் பறக்க ஆரம்பிக்கும். யாருடையது உயரம் என்பதில் போட்டி இருக்கும். ஆனால் வெறும் உயரப்போட்டிக்கு மாஞ்சா நூல் தேவையில்லையே! முக்கியமான விஷயமே "டீல்" போடுவதுதான். அடுத்தவர்களின் காற்றாடிக்கு அருகில் கொண்டு போய், நம் காற்றாடியின் நூலை சாமார்த்தியமாக ஒரு சுண்டு சுண்டினால் அது அவர்களுடைய நூலை சுற்றி வளைத்து அறுத்துவிடும். இதில் வெற்றியடைய மாஞ்சா நூலின் உறுதியும், சுண்டுபவரின் சாமார்த்தியமும் மிகவும் முக்கியம்.எதிரணி வலுவாக இருநதால் நம் பட்டம் அறுந்து விடவும் வாய்ப்பு உண்டு. யாருடையது அறுந்து விட்டாலும் அண்ணாந்து பார்த்துக் கொண்டே ஒரு பெரிய கூட்டம் அதன் பின் தெருத்தெருவாக ஓடும்.சமயத்தில் மரத்திலோ அல்லது கரண்ட் கம்பியிலோ சிக்கிக் கொண்டு இருக்கும் காற்றாடிகளை மீட்டெடுப்பது ஒரு தனி ப்ராஜெக்ட்.

இப்படிப்பட்ட பல சுவாரஸியமான விளையாட்டுகளை இந்தத் தலைமுறை இழந்துவிட்டதே என்ற வருத்தம் எனக்கு எப்போதுமே உண்டு.சென்ற வார இறுதியில் சிங்கபபூரில் "காற்றாடித் திருவிழா" நடப்பதாக செய்தி வரவும் பையனுக்கு பட்டங்களையாவது காட்டலாமே என்று கூட்டிச் சென்றேன்.

அவனுக்கு மட்டுமல்லாமல் எனக்குமே அற்புதமான அனுபவமாக இருந்தது. விதம் விதமான நூறறுக் கணக்கான காற்றாடிகள். பார்வையாளர்களுக்கும் முயற்சி செய்து பார்க்க இலவசக் காற்றாடிகள் வழங்கியதோடு, சிறுவர்களுக்கு பட்டங்கள் செய்யும் வழிமுறைகளை சொல்லித்தரும் பட்டறைகளும் நடத்தினார்கள்.

விழா கடற்கரையில் நடந்ததால் மணல் சிற்பங்கள் செய்து வைத்திருந்ததோடு, குழந்தைகளும் முயற்சி செய்து பார்க்க ஆவண செய்திருந்தார்கள். குழந்தைகளாக வாய்க்கால் மணலில் கோபுரங்கள் செய்து அதில் நான்கு பக்கங்களலிருந்து சுரங்கப்பாதை தோண்டியதும், சோழியை ஒளித்து வைத்து "கீச்சு கீச்சு தாம்பாளம்" என்று விளையாடியதும் நினைவுக்கு வந்தது.உங்களுக்காக சில படங்கள் கீழே.















மணல் சிற்பங்களும் குழந்தைகளும்








பட்டம் விட்ட சில சிங்கைப் பதிவர்கள்
மேலே பட்டம் விடும் பிரபல பதிவரை கண்டு பிடிப்பவர்களுக்கு தலா நாலு தமிழ்மணம் ஓட்டு

பட்டம் விட ஆயத்தமாகும் விஜய் ஆனந்தும் (பின்னூட்டப் புயல்) விஜய்யும் (பித்தன்)

விட்டா பறக்குமா பித்தன்?

Tuesday, May 26, 2009

தூர்தர்ஷன் - என் வாழ்க்கையின் திருப்புமுனை

நான் இரண்டாம் வகுப்பு படிக்கும் போது எனக்கு குட்ட வாத்தியார்தான் க்ளாஸ் டீச்சர்.
அவரோட பேரு செல்வராஜ். ஆனாலும் சுமாரா ஒரு நாலுலேர்ந்து நாலரை அடிக்குள்ள இருந்ததுனால அவுர எல்லாரும் குட்ட வாத்தியாருன்னுதான் கூப்புடுவோம்.

என்னமோ தெரில நான் படிச்ச கான்வென்ட்ல (பரமசிவபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, லால்குடி) எல்லா வாத்தியார்களும் வேட்டி சட்டைதான் போடுவாங்க.அந்த உயரத்துக்கு வேட்டியுடன் அவர் நடந்து வருவதை தூரத்திலிருந்தே கண்டுபிடித்துவிடலாம்.

குட்ட வாத்தியார் ஆனா குட்றதுல பெரிய ஆளு. பெரும்பாலும் பக்கத்துல ஒக்காந்துருக்கற பயல உட்டு குட்ட சொல்லுவாரு. அவனும் எங்க ரெண்டு பேருக்குள்ள இருக்குற எலந்தப்பழம், காக்கா கடி மிட்டாய் போன்ற பழைய விஷயங்களையெல்லாம் கொசுவத்தி சுத்தி பாத்துட்டு, முட்டிய மடக்கி, ரெண்டு வாட்டி எச்சி துப்பி ஓங்கி குட்டுவான்.சமயத்துல நெருப்பெட்டி லேபிள் விஷயத்துல ஏதாவது ஒப்பந்தம் நடைமுறையில இருந்தா, கைய வேகமா ஓங்கிட்டு மெதுவா குட்டுவான்.

அதுதான் வெனையே. வாத்தியார் இத கவனிச்சிட்டாருன்னா, பக்கத்துல வர சொல்லி நங்குன்னு ஒண்ணு வெப்பாரு. இவுரு மட்டும் எப்புடி எச்சி துப்பாமயே இப்புடி வலுவா கொட்றாருங்கற சந்தேகம் ரொம்ப நாள் எனக்கு இருந்துது.

அப்பல்லாம் படிப்புல நான் சூரப்புலின்னு எங்க அக்கா அடிக்கடி சொல்வாங்க.அதே ஸ்கூல்ல நாலாம் க்ளாஸ்ல படிச்சுகிட்டிருந்த எங்க அக்கா அவங்க பரிட்சைய சீக்கிரமா முடிச்சுட்டு என் க்ளாஸ்ல வந்து பின்னாடி நின்னு பாப்பாங்களாம். நான் எழுதியிருக்கறதெல்லாம் பாத்துட்டு அய்யோ.. அய்யோன்னு அடிச்சுகிட்டு குசு குசுன்னு ஆன்சர் சொல்வாங்களாம். ஆனாலும் அதக் கூட புரிஞ்சுகிட்டு எழுத தெரியாத அளவுக்கு வெள்ளந்தியா இருந்ததா இப்பயும் சொல்வாங்க.

சிலேட்டுலதான் பரிட்சை எழுதணும். கையோட திருத்தி மார்க்க ஒரு பெரிய ரவுண்டுக்குள்ள பின்னமா எழுதி குடுப்பாரு. அதை பைக்குள்ள வெச்சா மார்க் அழிஞ்சு போயிரும்னுட்டு கையிலியே புடிச்சுகிட்டு 5 தெரு தாண்டி போவணும். மார்க்கு அதிகம், கம்மி மானம், அவமானம் இதெல்லாம் ஒண்ணுமே புரியாது அப்பல்லாம். பத்துக்கு மூணோ நாலோ வாங்கினாலும் கவலப்படாம ஊர்வலம் போவேன்.

எப்படியோ தங்கு தடையின்றி வில்லியம் சார், பாக்கிரிசாமி (ஹெட் மாஸ்டர்) எல்லாரிடமும் கொட்டு வாங்கி, முட்டி போட்டு ஐந்து வகுப்புகளை தாண்டி திருச்சி செயிண்ட் ஜோஸஃப் ஹை ஸ்கூலில் ஆறாவது சேர்ந்துவிட்டேன். அங்கியும் ஒம்போதாவது படிக்கிற வரைக்கும் ஒண்ணும் சொல்லிக்கிறா மாதிரி படிக்கல.

என்னை பாலிடெக்னிக்கில் எலெக்ட்ரானிக்ஸ் டிப்ளமோ படிக்க வைக்க வேண்டும் என்பது என் தந்தையின் வாழ்க்கை லட்சியம்.ஒன்பதாம் வகுப்பு முழுப்பரிட்சை (இப்பயும் கால் பரிட்சை, அரை பரிட்சை, முழு பரிட்சை இப்படியெல்லாம் சொல்றாங்களா?) முடிஞ்சு லீவுல எங்கப்பா என்னய மெட்ராஸுக்கு சித்தப்பா வீட்டுக்கு கூட்டிட்டு போனாரு.



அங்க டிவியில வர்ர வெள்ளிக்கிழமை ஒலியும் ஒளியும் நிகழ்ச்சியும், ஞாயித்துக்கிழமை சினிமாவும் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. வெறும் தூர்தர்ஷன் மட்டும்தான் அப்போதெல்லாம்.ரேடியோவில் பாட்டு,நாடகம்(ஞாயிறு மதியம் 3 மணி), நியூஸ் (சரோஜ் நாராயணசாமி), மணிமலர்,ஒலிச்சித்திரம் போன்றவற்றை மட்டுமே கேட்டுக்கொண்டு, வருடத்துக்கு ஒன்றோ இரண்டோ சினிமாக்கள் மட்டுமே பார்த்து வந்த எனக்கு தொலைக்காட்சி மேல் காதலே வந்துவிட்டது. சென்னை ஒரு சொர்க்கலோகமாகவே தெரிந்தது. இத்தனைக்கும் அப்போது என் சித்தப்பா வீட்டில் டிவி கிடையாது. பக்கத்து வீட்டில் போய்த்தான் பார்ப்போம்.

ஆவடியில் என் சித்தப்பா வீட்டுக்கு பக்கத்திலேயே முருகப்பா பாலிடெக்னிக் இருந்தது. அந்த வழியே போகும்போது என் அப்பா "நல்லா படிச்சு நானூறு மார்க்குக்கு மேல வாங்கினா இங்க சீட்டு கிடைக்கும், எலெக்ட்ரானிக்ஸும் இருக்கு,சித்தப்பா வீட்லயே இருந்து படிச்சுக்கலாம் என்றார்."



இந்த வார்த்தைகள்தான் என் வாழ்க்கையை புரட்டி போட்ட வார்த்தைகள். ஆஹா, சொர்க்கத்துக்கு ஷிஃப்ட் ஆவறதுக்கு இங்க ஒரு வழி இருக்கேன்னு என் மனசுல பொறி தட்டிருச்சு. ஒலியும் ஒளியும், வருடத்துக்கு 52 சினிமா இதெல்லாம் என் கண்ணு முன்னாடி வந்துட்டே இருந்துது.

அன்னைலேருந்து அன்பே சிவம் 910 மாதிரி 400 என் வாழ்க்கையோட லட்சிய நம்பரா மாறிருச்சு. எப்படியோ திட்டம் போட்டு என் தெறமைக்கு என்னென்ன சப்ஜெக்ட்ல என்னென்ன மார்க்கு வரும்னு திட்டம் போட்டு அதுக்கேத்த மாதிரி நானூறை குறி வெச்சு படிக்க ஆரம்பிச்சுட்டேன். அனாவசியமா ஓவரா கஷ்டப்பட்டு ரொம்ப அதிகமாவும் வாங்கிடக் கூடாதுங்கறதுலயும் ரொம்ப ஜாக்கிரதையாவே இருந்தேன்.

அவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு திட்டம் போட்டு படிச்சு SSLC பரிட்சை எழுதியும், யாரோ புண்ணியவானுங்க தப்பா திருத்தி 12 மார்க் அதிகமா வந்துருச்சு. எங்கப்பாவுக்கு ஓரே சந்தோஷம், 412 க்கு நிச்சயம் சீட்டு கெடைச்சிரும் என்று அப்போது எலெக்ட்ரானிக்ஸ் கோர்ஸ் இருந்த அறந்தாங்கி, கிருஷ்ணகிரி மற்றும் ஆவடி முருகப்பா பாலிடெக்னிக்களுக்கு அப்ளிகேஷன் அனுப்பினார். அப்போது இந்த மூன்றில் மட்டும்தான் எலெக்ட்ரானிக்ஸ் டிப்ளமோ உண்டு.

முதலில் கிருஷ்ணகிரியிலிருந்து மட்டும்தான் அட்மிஷன் கிடைத்து சேர்ந்தாலும், ஒரு வாரத்துக்குள் ஆவடி முருகப்பாவிலிருந்து முதல் வெயிட்டிங் லிஸ்ட்டில் க்ளியராகி சீட் கிடைத்துவிட்டது.

பின்னர் படிப்பை முடித்து சென்னை, தில்லி, திருச்சி என்று வேலை பார்த்தாகிவிட்டது. வாய்ப்பு கிடைத்து பகுதி நேரமாக டிகிரியும் முடித்து சிங்கப்பூர் வரை வந்தாகி விட்டது.

இன்று அண்ணன் மகன் (கைலாஷ்) திருச்சியில் SSLC-CBSE யில் 448/500 வாங்கியிருப்பதாக போன் வரவும் எனக்கு இதெல்லாம் ஞாபகம் வந்து, எழுதலாமே என்று தோன்றியது.

வாழ்க்கையில் அடுத்த முக்கியமான கட்டத்தில் காலெடுத்து வைக்கும் கைலாஷை போன்ற மாணவர்களுக்கு நான் சொல்ல வருவது இதுதான்.படிப்பு மட்டுமில்லாமல் உங்களுக்கு ரொம்ப பிடித்த விஷயத்தை மதிப்பெண்களுடன் தொடர்புபடுத்தி கொள்ளுங்கள். படிப்பில் தானாகவே உங்களுக்கு வெறி வந்து விடும். அது தினம் ஒரு விமான பயணமாகவோ, நியூயார்க்கில் 112 ஆவது மாடியில் சுதந்திரதேவி சிலை கண்ணில் படும்படி ஒரு ஃப்ளாட்டில் குடியிருப்பதாகவோ, சிவப்பு விளக்கு சுழலும் காரில் டவாலி சகிதமாக வந்து இறங்கும் கலெக்டருக்கு கிடைக்கும் மரியாதையாகவோ - எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இது போன்ற கனவுகள் நனவாக மற்ற எல்லா வழிகளையும் விட திட்டமிட்ட படிப்பும் மதிபெண்களும் நிச்சயம் உதவும்.

உங்களுடைய மதிப்பெண் இலக்கை முடிவு செய்து கொள்ளுங்கள்.பள்ளியில் முதல் மதிப்பெண், மாநிலத்தில் முதலாவதாக வருவது போன்ற இலக்குகள் வேண்டாம். அது உங்கள் கையில் மட்டும் இல்லை.மதிப்பெண் இலக்கை அடைய நிறை குறைகளை ஆராய்ந்து துல்லியமாக திட்டமிடுங்கள்.

திட்டங்களை செயலாக்கி மேன்மேலும் வெற்றிகளை குவியுங்கள். வாழ்த்துகள்.

Wednesday, February 25, 2009

அந்த(சா.மி.சா.) பார்வை

கோவணத்துணியிலிருந்து கோமேதக, வைர அட்டிகை வரை எதுவாக இருந்தாலும் திருச்சியில் வாங்குவதாக இருந்தால் இங்குதான் வரவேண்டும்.மிகப்பெரிய கடைகள் எல்லாம் இருக்கும் இதற்கு "சின்ன" கடை வீதி என்று பெயர்.

நகரத்தின் மிக முக்கிய வியாபார மையம்.சமீப வருடங்களில்தான் இந்த வீதியையும் தாண்டி திருச்சி வளர்ந்து கொண்டிருக்கிறது. பல பெரிய வணிக வளாகங்களும் கடைகளும் வந்துள்ளன.

இப்படிப்பட்ட ஒரு தெருவின் முழு நீளத்தையும் தினம் இரண்டு முறை கடக்க வேண்டிய அவசியம் எனக்கு 5 வருடங்களுக்கு இருந்தது. திருச்சி டவுன் ரெயில்வே ஸ்டேஷனில் பாசஞ்சர் ட்ரெயினில் வந்து இறங்கி செயின்ட் ஜோசஃப் பள்ளிக்கு நடைப்பயணம் 5 கிமீ. அந்த ஐந்து வருடங்களும் விதம் விதமான அனுபவங்கள்.

நம்ப ஊர்லதான் எல்லா பய புள்ளைகளுக்கும் பொறப்புல இருந்தே கிரிக்கெட் பயித்தியமாச்சே.
இபபல்லாம் டிவி கடை வாசல்ல கூடி நின்னு பாக்கறாங்க. 30 வருஷம் முன்னாடி ஏது டிவி?
ரேடியோ கமெண்டரிதான்.சாயங்காலம் நாலு மணிக்கு மேலே ஸ்கூல் விடற நேரத்துல தான் பெரும்பாலும் மேட்ச் விறுவிறுப்பான கட்டத்துல இருக்கும்.மேல சொன்ன தெருவுல இந்த நேரத்துல ஜனக்கூட்டம் எப்படி இருக்கும் என்பது உ.கை நெல்லிக்கனி.

எப்படி தினம் 1000 ஹிட்டுகளும், நூறு பின்னூட்டங்களும் இருக்குற பதிவுகளுக்கு நடுவுல நம்மளும் பதிவு வெச்சுருக்கோம்னு பேரு பண்ணிக்கிட்டு தனியா ஈ ஓட்டறோமோ, அதே மாதிரி இவ்வளவு பிஸியான தெருவுலயும் ரெண்டு மூணு கடையில கூட்டமே இல்லாம, யாராவது உள்ள நுழைஞ்சா,"இவன் ஏன் இங்கல்லாம் வரான்னு" சந்தேகப் பார்வையுடன் ஒருத்தர் உட்கார்ந்திருப்பார். இவர்களில் பலரும் (என் அதிர்ஷ்டத்துக்கு) கிரிக்கெட் பிரியர்கள். மேட்ச் நாள்ள நிச்சயமா கமெண்டரி கேட்டுகிட்டு இருப்பாங்க. பாவம் அவங்களும் வேற என்னதான் பண்ணுவாங்க(நம்மளாவது இன்னோரு ஜன்னல திறந்து வெச்சு வேற நல்ல பதிவா படிச்சுக்கிட்டு இருக்கலாம்). ஒவ்வொரு ரெண்டு பர்லாங்குக்கும் இந்த மாதிரி (ஈ) ஒரு கடைய பார்த்து வெச்சிருப்பேன். ட்ரெயின பிடிக்க போற வழியில இந்த கடைகளுக்குள்ள நொழைஞ்சு ஸ்கோரை அப்டேட் செஞ்சுகிட்டே போவேன். அவங்களும் நம்ம கடைக்கு இப்படியாவது ஆள் வருதேன்னு (அனானியா இருந்தாலும் பின்னூட்டம் வந்தா சரின்னு நாம இருக்கறதில்லையா, அந்த மாதிரி) ஒன்னும் சொல்ல மாட்டாங்க.

ஆறாம்ப்பு படிக்கும்போது, இப்பிடித்தான் ஒரு நாளு, மேட்சுல கபில்தேவ் விளையாடிக் கொண்டிருந்தார். ஒரு மணி நேரம் கழித்து கிளம்பற அடுத்த வண்டில போயிக்கலாம்னு ஒரு கடையில செட்டிலாயிட்டேன். என் கெட்ட நேரம் 15 நிமிஷத்துல அவரு அவுட்டாயி கிர்மானி வந்து மட்டைய போட ஆரம்பிச்சுட்டார். எப்படியும் ரயிலுக்கு நேரம் இருக்கேன்னு அதையும் கேட்டுகிட்டு இருந்தேன். போரடிக்கும்போதெல்லாம் சுத்தி கடையில இருக்கிற பொருளையெல்லாம் நோட்டம் விட்டுகிட்டு இருந்தேன்.

கிரிக்கெட்டுக்கு அடுத்தபடியா, எனக்கு ரொம்ப இஷ்டமானது, ஓசி பொருள். எதுக்கு எது இலவசம்கறதெல்லாம்(பினாகாவுக்கு பொம்மை, போர்ன்விடாவுக்கு பம்பரம்) தரோவா தெரிஞ்சு வெச்சுகிட்டு அம்மாவ தொந்தரவு பண்ணிகிட்டு இருப்பேன்.

ரெண்டு பாராவுக்கு முந்தி சொன்ன மாதிரி,கடைய நோட்டம் வுட்டுகிட்டு இருக்கும்போது ஒரு வெள்ளை கலர் பாக்கெட்ல "Free Belt inside"ன்னு போட்டிருந்தது.

ஆஹா!! ரெண்டு, மூணு வருஷத்துக்கு வரணுமேன்னு லூசா தெச்ச டவுசர தூக்கி தூக்கி உட்டுகிட்டே அலையுறோமே, நமக்கும் ஒரு பெல்ட் இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்னு நெனச்சுகிட்டே அது என்ன பாக்கெட்னு உத்து பார்த்தேன்.ரெண்டு மூணு பூவெல்லாம் வரைஞ்சு "Care Free" ன்னு ஸ்டைலா எழுதி இருந்துச்சு.கடைக்காரர்கிட்ட, "ஃப்ரீ பெல்ட் அப்படின்னு போட்ருக்கே, இடுப்புல கட்ற பெல்டான்னு என் இடுப்ப காமிச்சு கேட்டேன்".

அவரு சாணிய மிதிச்ச சாஸ்திரிகள் மாதிரி மூஞ்சிய வெச்சுகிட்டு என்னை மேலயும் கீழயும் ரெண்டு தடவ பார்த்துட்டு, "போ.. போ ட்ரெயினுக்கு நேரமாச்சுன்னு" வெரட்டி உட்டாரு.

அடுத்த சில நாட்களுக்கு,ஒவ்வொரு தடவையும் டவுசர தூக்கி விடும்போது, அவரோட அந்த பார்வை என் ஞாபகத்துக்கு வந்து டார்ச்சர் குடுத்துகிட்டுருந்துது.

ஒரு நாள் திடீர்னு எங்க வீட்லயே அந்த பாக்கெட் பீரோல துணிமணிகளுக்கு அடியில இருக்கறத அகஸ்மாத்தா பார்த்துட்டேன். உடனே துள்ளி குதிச்சு, "அம்மா அந்த பாக்கெட்டோட ஒரு ஃப்ரீ பெல்ட் வந்திருக்கணுமே, நான் கடையில பார்த்தேனே" அப்படின்னு கேட்டேன்.அப்போ எங்க அம்மாவும், பக்கத்துல இருந்த அக்காவும் என்னைய பார்த்த பார்வை!!!ஐயய்யோ!!! திரும்பவும்.. அதே சா.மி.சா பார்வை. வழக்கம் போல "ஒழுங்கா கழுவ கூட தெரியாத நாயி ஒனக்கெல்லாம் பெல்ட் ஒரு கேடா, புக்க எடுத்து வெச்சு படிடா"ன்னு தொரத்திட்டாங்க.

அப்பறம் ரொம்ப நாள் கழிச்சு விகடன், குமுதத்தில வர்ர விளம்பரத்தையெல்லாம் தீர அனலைஸ் பண்ணித்தான் அந்த(சா.மி.சா) பார்வைக்கான அர்த்தம் என்னன்னு புரிஞ்சுது. இப்ப வரைக்கும் நம்ம பசங்க இதே மாதிரி கேள்வி கேட்டா எப்படி புரிய வைக்கறதுங்கறது பெரிய கேள்விக்குறிதான்.