ஒரு வழியாக திருமணம் ரிசப்ஷன் எல்லாம் முடிந்து மலைக்கோட்டை எக்ஸ்ப்ரஸ் ஏறிவிட்டேன். ட்ரெயின் ஏறுவதற்கு முன் போன் செய்தபோது இன்னும் வலி வரவில்லை வீட்டில்தான் இருக்கிறேன் என்று கூறியிருந்தாள். காலையில் திருச்சி போய் மாமனார் வீட்டுக்குள் நுழைந்தால் வீட்டில் மனைவி, மாமனார், மாமியார் யாரும் இல்லை. எல்லோரும் ஆஸ்பத்திரிக்கு போய் விட்டதாக மச்சினன் கூறினான்.
பரபரப்பாக கிளம்பி மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு போனால், ஆஸ்பத்திரி உடையில் வார்டுக்கு வெளியில் வந்து பலகீனமாக ஒரு புன்னகை பூத்தாள். ஊசி போட்டும் வலியெடுக்கவில்லை. அடுத்த இரு மணி நேரங்களில் பனிக்குடம் உடைந்து பல மணி நேரம் ஆகிவிட்டதாலும் வலியெடுக்கும் அறிகுறிகள் தெரியாததாலும் சிசேரியனுக்கு கையெழுத்து வாங்கிக் கொண்டு போனார்கள். மாமியாரின் முகத்தில் கவலை ரேகைகளும், மாமாவின் கண்கள் தளும்பவும் அதுவரை தைரியமாக இருந்த நானும் கொஞ்சம் கலங்கித்தான் போனேன்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் பூத்துவாலையில் சுற்றி "தோ பாருங்க ரோஸ் பேபி", என்றவாறே நர்ஸ் உள்ளங்கையை விட சற்றே பெரிய அளவிலான ஒரு பூவை கொண்டு வந்து காண்பித்தார். தொட்டுப் பார்க்க கூட பயந்து, என்ன செய்வதென்று தெரியாமல் பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தேன். மாமானார்தான் இடுப்புக்கு கீழ் மறைத்துக் கொண்டிருந்த துவாலையை படக்கென்று விலக்கி "ஹை.. பேரப்பய" என்றார். "இன்னிக்கு பொறந்த பன்னெண்டு குழந்தைகளில் இது மட்டுந்தான் ஆம்பள புள்ள" என்ற உபரி தகவலை அளித்துவிட்டு நான் கொடுத்த நூறு ரூபாயை வாங்கிக் கொண்டு குழந்தையுடன் உள்ளே போய் விட்டார்.
"இன்பெக்ஷன் அவாய்ட் பண்றதுக்காக சிசேரியன் குழந்தைகளை 24 ஹவர்ஸ் ஸ்பெஷல் கேர் யூனிட்ல வெச்சிருப்போம், அப்பப்போ மதர் ஃபீட் பண்ண மட்டும் கூட்டிட்டு வருவாங்க, நத்திங் டு வொர்ரி" என்று பிரசவம் பார்த்த லதா டாக்டர் சொல்லி விட்டு கிளம்பும்போதுதான் "ஹவ் ஈஸ் தி மதர்?" என்று கேட்டேன். "நோ ப்ராப்ளம்ஸ், இன்னும் கொஞ்ச நேரத்துல ரூமுக்கு மாத்திருவாங்க, அப்பறமாபோய் பாருங்க" என்றார்.
மதியத்துக்கு மேல் ஸ்பெஷல் கேர் யூனிட்டிற்கு போய் கண்ணாடி ஜன்னல் வழியாக பார்த்தால், அன்று பிறந்த மேலும் ஐந்து பெண் குழந்தைகள் சூழ ஜாலியாக ஏசி ரூமில் தூங்கிக் கொண்டிருந்தான்.

அக். 24, 2009 : " அப்பா, இன்னிக்கு எனக்கு லெவென்த் பர்த் டே. புது சைக்கிள் வாங்கித் தர்றியா?"
எட்டு மாத குழந்தையாக தவழ்ந்து கொண்டே மாடிப் படியில் சறுக்கி விழுந்து தாடை பிளந்து தையல் போட்டது,
காது குத்தி தோடு போட்ட அன்று இரவே தோடு தலைகாணி நூலில் சிக்கிக்கொண்டு ரத்தம் வந்து கதறி அழுதது,
ப்ளே ஸ்கூலில் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஷர்மிலியால் கன்னத்தில் ரத்தம் வருமளவுக்கு கடிபட்டது,
எல்.கே.ஜியில் பெஞ்ச் முனையில் இடித்துக்கொண்டு கண்ணை சுற்றி கருவளையமாக ரத்தம் கட்டிக் கொண்டு எம்.ஜி.ஆர் படத்து வில்லன் போல நின்றது,
யூ.கே.ஜியில் இரும்பு கேட்டில் ஏறி விளையாடி கால் இடையில் சிக்கி கொண்டு, கால் முழுவதும் வீங்கி ஆஸ்பத்திரி போய் எக்ஸ்.ரே எடுத்தது,
ஒன்றாம் வகுப்பில் புருஷோத்தமனுடன் புல்லு சண்டை போட்டு கை உடைந்து ஐம்பது நாள் தொட்டில் கட்டிய கையுடன் அலைந்தது,
சிங்கப்பூர் வந்த பிறகும் கூட மூன்றாவது படிக்கும்போது ஒரு நாள் சீன நண்பனிடம் பேச்சு சண்டை முற்றி, நசுக்கிய பெப்ஸி கேனால் முதுகில் ரத்தக்கோடுடன் வந்தது
இப்படியெல்லாம் எத்தனையோ பாத்துட்டோம்....ஹ்ம்ம்ம்ம்ம்....
"ஹேப்பி பர்த் டே டா செல்லம், சாயங்காலமா போயி சைக்கிள் வாங்கிறலாம்.... "