Showing posts with label புனைவு. Show all posts
Showing posts with label புனைவு. Show all posts

Tuesday, September 22, 2009

AAA வுக்கு LLL விரித்த வலை - ஈயமில்லாத கதை

அனானிமாபுரம்னு ஒரு ஊர்ல ஏ.பி.சி அப்படின்னு ஒரு கம்பெனி இருந்துச்சாம். அந்த கம்பெனில மிஸ்டர்.AAA தான் மேனேஜர்.மேனேஜரா இல்லாத பல பதிவர்கள் சொல்றா மாதிரி அவுர டேமேஜர்னு கூட சொல்லலாம்.

வேலைல பெரிய கில்லியா இருந்தாலும் அவுரு ஒரே ஒரு மேட்டர்ல பயங்கர வீக். ஆபீஸ்ல வேல பாக்கற பொண்ணுங்க கிட்ட எல்லாம் பயங்கரமா ஜொள்ளு வுடுவாராம்.BBB, DDD, KKK அப்படின்னு 3 பொண்ணுங்க அந்த ஆபீஸ்ல வேல பாத்துக்கிட்டிருந்தாங்க. பாவம் குடும்ப சூழ்நிலை காரணமா இந்த ஆளோட கொடுமையெல்லாம் சகிச்சுகிட்டு எப்படியோ சமாளிச்சு காலத்த ஓட்டிகிட்டு இருந்தாங்களாம்.

அப்போ அதே ஏ.பி.சி கம்பெனிக்கு புதுசா ஒரு ஸ்டெனோ வேகன்ஸி வரவும் இண்டர்வியூ நடத்தி புதுசா அப்பத்தான் காலஜு முடிச்ச மிஸ்.LLL அப்படின்னு ஒரு பொண்ண செலக்ட் பண்ணிணாரு நம்ம AAA. LLL ஒரு தைரியமான பொண்ணு.

வேலைல சேந்த மொத நாளே BBB,DDD,KKK மூணு பேரும் LLL கிட்ட AAA வோட கேரக்டரை பத்தி சொல்லவும்,இந்த டேமேஜர எப்படியும் மாட்டிவுடனும்னு LLL மனசுக்குள்ள முடிவு செஞ்சா.

நம்ம ஹீரோ AAA(வில்லன்???) வழக்கம்போல LLL கிட்டயும் தன்னோட வேலைய காமிச்சாரு.அப்போதான் LLL ஒரு மாஸ்டர் ப்ளான் போட்டா. தனக்கும் AAA கிட்ட விருப்பம் இருக்கறா மாதிரி நடிச்சா. ரெண்டு பேரும் பக்கத்துல இருக்கற பேரில்லாவூருக்கு வீக் எண்ட்ல பிக்னிக் போலாம்னு முடிவு செஞ்சாங்க. ஆனா LLL ஒரு கண்டிஷன் போட்டா. தன் கூடவே TTT ங்கற இன்னொரு பெண்ணும் வரதுக்கு சம்மதிக்கணும்னு சொன்னா. எதையோ திங்க அதையே கூலியா குடுத்தா மாதிரி இருக்கேன்னு AAA வும் சந்தோஷமா ஒத்துகிட்டான்.

அந்த TTT யாரு? LLL எப்படி AAA வை சிக்க வெச்சா அப்படின்ன்னு ----- இனிமேதான் யோசிக்கணும்




மேலும் தொடரக்கூடும்....

டிஸ்கி: ககக, திதிதி போன்ற நடிகர்களும், டுடுடு, பிபிபி போன்ற டைரக்டர்களும் என்னை சினிமாவுக்கு கதை எழுத கூப்பிடுவதால் ஈயமில்லாத கதை எழுத பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறேன்.இதிலும் ஈயங்களும் இசங்களும் இருப்பதாக கண்டுபிடித்து கூறினால் வருங்காலத்தில் திருத்திக் கொள்கிறேன்.

Monday, May 11, 2009

நாற்பதிலும் வெற்றி

"நான் ரிசிக்னேஷன் நோட்டீஸ் குடுத்துட்டேங்க" என்றார் நண்பர் ஃபோனில்.

"ஐயய்யோ! என்னங்க ஆச்சு" இது நான்.

"அந்த பிகாரி சூபர்வைசர்ட்ட மனுசனெல்லாம் வேலை செய்ய முடியாதுங்க"

"ஏங்க, என்ன பிரச்சினைன்னு கொஞ்சம் சொல்லுங்களேன்."

"சாயந்திரம் ஃப்ரீயா இருந்தா வாங்களேன், நம்ம வீடு பக்கத்துல இருக்கற பார்க்குல உக்காந்து பேசுவோம்."

ஆஸ்திரேலியாவில் படித்து கொண்டிருக்கும் அவருடைய மூத்த பெண்ணும், சிங்கப்பூரில்
உயர்நிலை பள்ளியில் படிக்கும் அடுத்த இரண்டு குழந்தைகளும் என் நினைவில் பளிச்... பளிச்.. என்று வந்து கொண்டே இருந்தார்கள்.

நான் சிங்கப்பூரில் வேலைக்கு சேர்ந்த புதிதில் எனக்கு பல உதவிகளும், உபயோகமான டிப்ஸ்களும் கொடுத்து உதவியவர். நான் மேனஜ்மென்ட் ஸ்டாஃபாக ஒரு டிபார்ட்மெண்ட்டிலும், அவர் வேறு ஒரு செக்ஷனில் சீனியர் தொழிலாளியாக இருந்தாலும், பெரும்பாலும் லஞ்ச் நேரத்தில் ஒன்றாகவே சாப்பிடுவோம்.

கடமை கண்ணயிரம்


எங்கள் கம்பெனியில் 22 வருடம் பழம் தின்று கொட்டை போட்டவர்.ஒரு சின்ன கட்டிடத்தில் 10 தொழிலாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட கம்பெனி எப்படி இப்போது 650 தொழிலாளர்களுடன் கூடிய பெரிய தொழிலகமாக மாறியது என்பதெல்லாம் எனக்கு அவர் சொல்லித்தான் தெரியும்.பல மேனேஜர்கள் எப்படியெல்லாம் தில்லாலங்கடி வேலை செய்து இந்த நிலைக்கு வந்தார்கள் என்ற சுவாரசியமான டாபிக்குக்காகவே அவரை தேடிப் போய் பக்கத்தில் சாப்பிட உட்காருவேன்

உணவு இடைவேளை


தேனியை போல சுறுசுறுப்பு என்று சொல்வார்கள். ஆனால் அதை நான் நேரில் பார்த்தது இவர் மூலமாகத்தான். தன்னால்தான் செக்ஷனில் எல்லாம் நடக்கிறது அல்லது நடக்க வேண்டும் என்று நினைப்பதில் ஒரு கர்வம் உண்டு. அதற்காக மிக கடுமையாக உழைப்பவர்.

என்னாலதான் எல்லாமே நடக்குது


ரிசெஷனில் ரி... என்று ஆரம்பிப்பதற்கு முன்பெல்லாம் சுபிட்சமாக கம்பெனிக்கு ஆர்டர் இருந்த காலத்தில் தினம் 12 மணி நேரம் வேலை செய்வார். ஒவ்வொரு நாளும் 4 மணி நேரம் ஒவர் டைம். அந்த காசும் அவருடைய குடும்ப சூழ்நிலைக்கு மிகவும் அவசியம் என்பது எனக்கு தெரியும்.

சிறிது நாட்களுக்கு முன் அவருடைய செக்ஷனுக்கு புதிதாக ஒரு சூப்பர்வைசரை போட்டார்கள். வந்தவர் லீன், 6 சிக்மா, 5S, கெய்சன் என்று இவருக்கு புரியாத மொழிகளில் பேச இவர் தன்னுடைய அனுபவ அறிவினை அவரிடம் வெளிப்படுத்த இரண்டு கியர்களும் சேர்ந்து ஓடாமல் மிஸ் மேட்ச் ஆகி உராய்வு அதிகமாகிவிட்டது.

எல்லா மனிதர்களும் ஒரே மாதிரி இருக்க மாட்டார்கள், விட்டுக் கொடுத்து போங்கள் என்று பல முறை எடுத்து சொன்னாலும் முழு மனதுடன் ஒப்பு கொள்ளமாட்டார். "ஹூஸ்டன்ல ப்ராடக்ட் சென்டர் மேனேஜரா இருக்காரு பாருங்க சீனிவாசன், அவரெல்லாம் இங்க இருக்கும்போது நாளைக்கு 3 தடவ மைக்.. மைக்னு எங்கிட்டதான் ஓடி வருவாரு. போம்போது கூட வீட்டுக்கு ஃபேமிலியொட கூப்டு டின்னர் குடுத்தாரு. இப்ப படிச்சுட்டு வர சூப்பர்வைசருக்கெல்லாம் என்னங்க தெரியும்" என்று சொல்லுவார்.

(நம் நண்பர் பெயர் மகேந்திரன். சீனர்கள் வாயில் நுழையாததால் மகி ஆகி பிறகு நாள்பட மைக் ஆக மருவி விட்டது)

விஷயம் இவ்வளவு சீரியஸாகும் என்று எனக்கு இத்தனை நாள் உறைக்கவில்லை.

சாயந்திரம் பார்க்கில் சந்திக்கையில் அவரிடம் ஒன்றும் பெரிதாக கவலை அறிகுறிகள் தெரியவில்லை.

"என்னங்க மைக் இப்பிடி பண்ணிட்டீங்களே?"

"அவரு என்னங்க எனக்கு அப்ரைசல்ல 'டி' க்ரேட் போட்ருக்காரு, இத்தன வருஷத்துல ஒரு தடவ கூட வாங்கினதில்ல. எல்லாரும் 'சி' போட்றதுன்னா கூட எங்கிட்ட கேட்டுத்தான் போடுவாங்க" என்று ஆரம்பித்தார்.

"என்ன க்ரேடு வாங்கி இனிமே என்ன பண்ண போறீங்க?,கம்பெனி பாலிசி படி இனிமே ப்ரமோஷன் வாங்க உங்களுக்கு க்வாலிஃபிகஷன் இல்ல.இது உங்களுக்கே நல்லா தெரியும்.சம்பளமும் ஸ்டேக்னேஷன் ஆயிப் போச்சி.வெறும் இன்சென்டிவ் பெர்சென்டேஜ் தான் மாறும்."

"ஒரு பைசா வேணாங்க, நம்ம செய்யற வேலைக்கு ஒரு மரியாதை வேணாம்? காசு என்னங்க காசு, உழைச்சா எங்க போனாலும் காசு" என்றார்.

"உங்க குடும்பத்துக்கு இந்த சம்பளமும், ஒவர் டைம் காசும் வேணுமே. படிப்பு செலவுக்கு மட்டுமே மாசம் 1500 டாலர் ஆவும். இந்த வயசுல வேற வேலை கிடைக்கும். ஆனா இந்த சம்பளமும், ஒவர் டைமும் கிடைக்காதே? உங்களுக்குன்னு ஸ்பெஷலைசேஷன் ஒன்னும் கிடையாது. என்ன பண்ணப் போறீங்க?"

"விடுங்க, சேவிங்க்ஸ வெச்சு கொஞ்ச நாள் ஓட்டலாம், அதுக்குள்ள் ஒரு வழி கிடைக்கும்."

"இருந்தாலும் நோட்டீஸ் குடுக்கறதுக்கு முன்னாடி என் கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்.பர்ஸனல் மேனேஜர்ட்ட அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி செக்ஷன் ட்ரான்ஸ்ஃபர் கேட்ருக்கலாம் இல்ல."

"அடடா, இது எனக்கு தோணாம போயிருச்சே, அப்ப இருந்த கோவத்துல விட்டு எறிஞ்சுட்டு போவணும்னு தோணிச்சு. கையோட லெட்டர எழுதி குடுத்துட்டேன். "

"சரி, பர்ஸனல்ல என்ன சொன்னாங்க?"

"க்ரேடிங்கல திருப்தியில்லன்னு எழுதியிருக்கறதால அடுத்த வாரம் என்கொயரி நடக்குமாம். ஒரு மாசம் நோட்டீஸ் பீரியட். ஒரு மாசத்துல வேணும்னா மீதி இருக்ககற லீவெல்லாம் எடுத்துக்க சொலலிட்டாங்க."

எதுக்கும் பர்ஸனல்ல கூப்டு கேட்டா, வேற டிப்பார்ட்மென்ட்ல வேலை செய்ய தயார்னு சொல்லுங்க" என்றேன்.

எனக்கு ஆனால் மனதிற்குள் நம்பிக்கையில்லை. எப்படா இந்த மாதிரி சீனியாரிட்டியில் அதிக சம்பளம் வாங்கும் ஆட்களை வெளியில் அனுப்பி காஸ்ட் சேவிங்க் கணக்கு காட்டலாம் என்று சந்தர்ப்பம் பார்த்து காத்திருப்பவர்களிடம் வலுவில் போய் மாட்டிக் கொண்டிருக்கிறார். அது போலவே கண்துடைப்பு விசாரணை நடத்தி ராஜினாமாவை ஏற்றுக் கொண்டு வெளியில் அனுப்பி விட்டார்கள்.

எங்களுக்குள்ளும் பெரிதாக தொடர்பில்லாமல் போனது. ஓரு முறை விசாரித்தபோது, நண்பருடைய சாப்பாட்டு கடையை பார்த்துக் கொண்டிருப்பதாக சொன்னார். எல்லாம் நடந்து ஆறு மாதங்களாகி விட்டன.

சென்ற வார கடைசியில் திடீரென்று நினைவு வந்து போனில் பேசினேன். மிகவும் உற்சாகமாகவே பேசினார். கடை முகவரி கொடுத்து வர சொன்னார்.

நேரில் போனதும்தான் தெரிந்தது. அந்த கடையை அவரே வாங்கி நடத்துகிறார்.நண்பருக்கு உடல் நலம் சரியில்லாததால் கடையை இவரிடம் விற்று விட்டார். கடை மட்டுமில்லாமல் அருகிலிருக்கும் பள்ளியிலும் கேண்டீன் காண்ட்ராக்ட் எடுத்திருக்கிறார். 10 பேர் அவரிடம் வேலை செய்கிறார்களாம். இதை தவிர விசேஷங்களுக்கு கேட்டரிங்க் செய்வதாக கார்டும் கொடுத்தார்.

"ஆனா, என்னங்க? ஒரு நாளைக்கு 16 மணி நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கு.அங்க ஓவர் டைமோட சேத்து 3000 வெள்ளி கிடைக்கும். இங்க எல்லம் போக மாசம் 4000 வெள்ளி கிடைக்குது. கணக்கு சரியா போச்சு இல்லீங்களா?நிம்மதியா இருக்குங்க. எனக்கு நானே ராஜா."

"அப்பறம் அந்த சூப்பர்வைசர் வீடு இங்கதான் பக்கத்துல. தினமும் டின்னர் நம்ம கடைலதான்" என்றார்.

பி.கு: தலைப்புக்கு காரணம் நண்பருக்கு சென்ற வாரம்தான் பிறந்த நாள். 40 வயது முடிந்திருக்கிறது.வேறு ஏதாவ்து அரசியல் காரணங்களுக்காக இந்த பக்கம் வந்தவர்களிடம் நான் வேண்டுவது "கேப்டனுக்கு பிடிக்காத வார்த்தை".

Thursday, April 30, 2009

மே தினம் - ஹைய்யா...லீவு

"ஏங்க.. நாளைலேருந்து 3 நாள் லீவு தானே, எங்கியாவது வெளில போயிட்டு வரலாங்க" என்றாள் முத்துவின் மனைவி.

"ம்ம்ம்... போலாமே, ஒரு நாள் தீம் பார்க் போவோம், அடுத்த நாள் உங்க அம்மா வீட்டுக்கு போயிட்டு சண்டே மத்யானம் திரும்பி வந்துரலாம்." என்றான் முத்து.

பையன் "ஐய்யா! ஜாலி.. தீம் பார்க் சூப்பரா இருக்கும்" என்று குதித்தான்.

ஐம்பது கிலோமீட்டர் தூரம்தான் என்றாலும் ஆறு மாதங்களாக போகவில்லையாதலால் மனைவி முகத்திலும் அம்மா வீட்டுக்கு போகும் சந்தோஷம் தெரிந்தது.

பேக்டரி போகும் வழியில் பையனை சைக்கிளில் கூட்டிக் கொண்டு போய் பள்ளியில் விட்டான். வழியெல்லாம் தீம் பார்க் பிரலாபம்தான்.

"அங்க பெரிய சறுக்கு மரம் தண்ணி ஒடிக்கிட்டே இருக்கும், சூப்பரா இருக்குமாம்"

"படகு மாதிரி ஒரு பெரிய ஊஞ்சல், பெரிய்ய்ய்ய்ய்ய ராட்டினம், ரோலர் கோஸ்டர் எல்லாம் இருக்கும்" என்று அலப்பி கோண்டே வந்தான்.

பேக்டரி வாசலிலயே சக தொழிலாளர்கள் எல்லாரும் கூடியிருந்தனர். தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பரசுராமன் சார் சிறப்பு உரை ஆற்றப் போவதாக தொழிலாளர் சங்க செயலாளர் ஒலி பெருக்கியில் அறிவித்தார். பரசுராமன், எங்களுடையதைப்போல் இன்னும் நாலு பேக்டரிக்கு சொந்தக்கார கோடீஸ்வரர்.

"தொழிலாள தோழர்கள் அனைவருக்கும் என் காலை வணக்கம். இந்த தொழிலகத்திற்காக ஒரு சிறிய விதையை நட்டது மட்டுமே என்னுடைய பங்கு. வியர்வை என்னும் நீருற்றி, அயராத உழைப்பு என்னும் உரமிட்டு அதை ஒரு மரமாக வளர வைத்தது நீங்கள்தான்.

உங்களைப் போன்ற தொழிலாளர்கள்தான் இந்த நாட்டின், ஏன் உலக நாடுகள் அனைத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் முதுகெலும்பாய் இருப்பதால்தான் மே 1 ஆம் தேதியை உலகம் முழுவதும் தொழிலாளர் தினமாக கொண்டாடுகிறார்கள்.

உங்கள் அனைவருக்கும் தொழிலாளார் தின வாழ்த்துகளை கூறி விடைபெறுகிறேன்."

"பெரிய மனுசன், பெரிய மனுசன்தான்யா எவ்வளவு காசு பணம் சேந்தாலும் நம்மளயெல்லாமும் மதிச்சு பேசறாரே" என்று மனதுக்ககுள் பாராட்டியவாரே முத்து வேலையை ஆரம்பிக்க உள்ளே சென்றான்.

நான்கு மணிக்கு சற்று முன் சூப்பர்வைசர் ரமேஷ் அவனுடைய செக்ஷனில் இருக்கும் அனைவரையும் அழைத்தார்.

"அஸெம்ப்ளில நடந்த தப்பால பம்ப் எல்லாம் ஃபைனல் இன்ஸ்பெக்ஷன்ல ஃபெயில் ஆயிடுச்சி. இது அடுத்த வாரத்துல அனுப்ப வேண்டிய எக்ஸ்போர்ட் ஆர்டர். அதனால் நீங்க எல்லாரும் இந்த 3 நாளும் ஹாலிடே ஒவர் டைம் வந்து அந்த ஆர்டருக்கு வேண்டிய பார்ட்ஸ் எல்லாம் முடிச்சு குடுத்துருங்க" என்றார்.மறுத்து பேசுவதில் பயனில்லை என்றது அனுபவ அறிவு.

அவுட் டைம் சைரன் அடிக்கவும் யூனிபார்ம் மாற்றிக் கொணடு, மனைவியையும் மகனையும் எப்படி சாமாதானப்படுத்துவது என்ற யோசனையுடன் சைக்கிள் ஸ்டாண்ட் நோக்கி நடந்து கொண்டிருந்தான்.

முதலாளி பரசுராமன் அவர் டிரைவருடன் பேசிக்கொண்டே வரவும் வழிவிட்டு அவர்கள் பின்னால் நடந்தான்.

"நீ நைட்டு 8 மணிக்கெல்லாம் வந்துரு. நாளையும், சனிக்கிழமையும் ஊட்டில இருப்போம்.
சண்டே காலைல ப்ளாக் தண்டர் போயிட்டு திரும்பி வந்துரலாம்" என்று கொண்டே போனார்.

"பெரிய மனுசன், பெரிய மனுசன்தான்யா" என்று நினைத்து கொண்டே,முத்து பையனுக்கு Pokemon பொம்மையும், மனைவிக்கு மல்லிகைப் பூவும் வாங்க கடைத்தெரு வழியாக சைக்கிளை மிதித்தான்.

Tuesday, April 28, 2009

உண்ணாவிரத கார்ட்டூன்ஸ்









வாக்களிப்பது ஜனநாயக கடமை ஆகவே தமிலிஷ்லயும், தமிழ்மணத்துலயும் ஒட்ட போட்டுட்டு போங்க.