Friday, April 10, 2009

அசாருத்தீனின் விளையாட்டுகள்

கிரிக்கெட் உலகில் ஒரு இளம் புயலாக நுழைந்தவர்.1984 ஆம் ஆண்டு, தன்னுடைய 21 ஆம் வயதில்,முதல் 3 டெஸ்ட் மேட்ச்களிலும் சதமடித்து,திரையை கிழித்துக் கொண்டு வந்து பஞ்ச் டயலாகுடன் என்ட்ரி கொடுக்கும் தமிழ் கதாநாயகன் போலத்தான் இவருடைய பிரவேசமும்.

ஃபீல்டிங் என்றாலே பந்தின் பின்னால் துரத்திக் கொண்டு ஒடுவது, கேட்ச் என்பது அதிர்ஷ்டம் இருந்தால் பிடிக்கக் கூடிய ஒன்று என்று இந்திய கிரிக்கெட் அணி இருந்த காலம் அது. தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே போன்ற அணிகளோடு ஒப்பிட்டால் கேவலம் என்று சொல்லக்கூடிய அளவில்தான் இந்திய ஃபீல்டிங்கின் தரம் இருந்த காலகட்டத்தில், இவர் என்னால் அவர்களையும் மிஞ்ச முடியும் என்று நிரூபித்தார்.அவர் இருக்கும் பக்கத்தில் சுற்று பட்ட 30 அடியில் பந்து இவரை தாண்டி போகவே முடியாது.ஒவ்வொரு ஒரு நாள் பந்தயத்திலும் குறைந்தது 30-35 ரன்கள் இவரால் எதிரணிக்கு குறைந்து விடும். "அவருடைய கைகள் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா அளவுக்கு பாதுகாப்பானது" என்பது இவருக்கு சூட்டப்பட்ட தகுதியான புகழாரம்.

அவர்தான் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் அசாருத்தீன்.

உலக அரங்கில் நுழைந்த ஐந்து வருடங்களில் தலைமை பொறுப்பு இவரை தேடி வந்தது. கேப்டனாகவும் மிக நன்றாக பரிணமித்தார். இவருடைய தலைமையில் இந்திய அணி பெற்றது 103 ஒரு நாள் மற்றும் 14 டெஸ்ட் வெற்றிகள்.புள்ளி விவரங்களின் அடிப்படையில் இவருக்கு முந்தைய கேப்டன்களை விட சிறந்தவராக எல்லோரும் கூறினர்.

எல்லாமே நல்லாத்தானே போயிக்கிட்ருக்கு... இப்ப என்ன ஆச்சு.... என்ற வடிவேலுவின் வசனம் இனிமேல்தான்.

புள்ளிவிவரங்கள் அடிப்படையில் என்று மேலே கூறியதற்கு காரணம் உண்டு.புள்ளி விவரங்களால் மட்டும் சிறந்த வீரர் அல்லது கேப்டன் என்று முடிவு செய்வது தவறு என்பதையும் நிரூபித்தவர் இவர்தான்.

இவருடைய தலைமையில் அந்நிய மண்ணில் நடை பெற்ற டெஸ்ட் போட்டிகளில் நம் அணி பெற்றது ஒரே ஒரு வெற்றிதான் (1993 - கொழும்பு - இலங்கைக்கு எதிராக)

மூன்று முறை உலகக் கோப்பை அணி கேப்டனாக இருந்தும் ஒரு முறை கூட செமி ஃபைனல் தாண்டவில்லை.

மிக அதிகமான அளவில் விளையாட்டரசியல் செய்து சித்து, டெண்டுல்கர், கபில்தேவ் போன்றவர்களின் திறமையையும் கரியரையும் வீணடிக்க மும்முரமாக முயற்சித்தவர்.

மிக மோசமான ஃபார்மோ அல்லது வேறு காரணங்களாலோ(விவாகரத்து, சங்கீதா பிஜ்லானி இதர பல) பல போட்டிகளில் கேவலமாக விளையாடி, டீமை விட்டு தூக்க வேண்டும் என்ற பேச்சு வரும்போதெல்லாம் ஒரு செஞ்சுரி அடித்து தன்னுடைய இடத்தையும் பதவியையும் காப்பாற்றி கொண்டவர்.இடையில் சிறிது காலம் (1997-98) கேப்டன் பதவியை இழந்தார். ஆனால் அவருடைய பலவித சாதுர்யங்கள் மற்றும் கேப்டன் பதவியில் இருக்கும் போது மோசமாக விளையாடிய டெண்டுல்கரின் காரணமாகவும் தலைமைப்பதவியை திரும்ப பெற்றார்.

இந்த கால கட்டங்களில் எல்லாம் இவரும், அணியில் இருக்கும் சில வீரர்களும் விசித்திரமான முறையில் அவுட்டாவதும், அடித்து ஆட வேண்டிய இடத்தில் தடுத்து ஆடியும்,
வள்ளல்களாக மாறி ரன்களை வாரி வழங்குவதும் எல்லாம் ஏன் என்பது புரியாமல் தலையை சொறிந்து சொறிந்து சொட்டையான ரசிகர்களில் நானும் ஒருவன்.

2000 மாவது ஆண்டு தென்னாப்பிரிக்க முன்னாள் கேப்டன் ஹன்ஸி க்ரோஞ்சே கிரிக்கெட் சூதாட்டத்திற்காக பிடிபட்ட பொழுதுதான் எல்லாமே வெளிச்சத்துக்கு வந்தது. சூதாட்ட தரகர்களுடன் தன்னை அறிமுகப்படுத்தியதே அசாருத்தீன்தான் என்று க்ரோஞ்சே கூறினார். பின்னர் நடந்த விசாரணையில் அசாருத்தீனுடன் சேர்ந்து அஜய் ஜடேஜா, அஜய் ஷர்மா மற்றும் பலருக்கும் தொடர்பிருப்பதும் வெளிவர என் போன்ற ரசிகர்களின் சொட்டை வளர்ச்சி முடிவுக்கு வந்தது.

பைத்தியக்கார கிரிக்கெட் ரசிகர்களெல்லாம் நகத்தை கடித்துக் கொண்டு பார்த்த பல போட்டிகள், ஏற்கெனவே சூதாட்டக்காரர்களாலும் இது பொன்ற கறுப்பு ஆடுகளாலும் இப்படித்தான் ஆட வேண்டும் முடிவு செய்யப்பட்டு விளையாடப்பட்டவை.

இப்படியெல்லாம் விளையாட்டில் அரசியல் செய்து கொண்டிருந்த அசாருத்தீன் இப்போது அரசியல் விளையாட்டில் இறங்கியிருக்கிறார்.தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் அரசியல்வாதிகளைப் போலவே சிறுபான்மை சாயம் பூசி தப்ப நினைத்த போதே அவர் அரசியலுக்கு தயாராகி விட்டது பலருக்கும் புரிந்திருக்கும்.

உத்தரபிரதேச மாநிலம் மொரதாபாத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் இவர் இந்த விளையாட்டையாவது நேர்மையான முறையில் விளையாடி வெற்றி பெறுவாரா?
அப்படி வெற்றி பெற்றால், நம்பிய தொகுதி மக்களை ஏமாற்றாமல் தன் கடமைகளை செய்வாரா?

8 comments:

Rajaraman said...

தமிழ் கண்மணிகளுக்கு என் உளம்கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த இனிய தமிழ் புத்தாண்டு நன்னாளில் இல்லல் நீக்கி, மகிழ்ச்சி பெருக்கி, வாழ்வில் வளம் சேர்க்க எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்போம்.

Mahesh said...

நல்லா அலசிக் காயப்போட்டுட்டீங்க !!

அறிவிலி said...

//Rajaraman said...
தமிழ் கண்மணிகளுக்கு என் உளம்கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த இனிய தமிழ் புத்தாண்டு நன்னாளில் இல்லல் நீக்கி, மகிழ்ச்சி பெருக்கி, வாழ்வில் வளம் சேர்க்க எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்போம்.//

நன்றி.. திரு ராஜாராமன். உங்களுக்கும் வாழ்த்துகள்.

அறிவிலி said...

//நன்றி.. மகேஷ்.

Prabhu said...

அந்த ஆள் கிரிக்கெட்ல பண்ணதால அரசியலயும் பண்ண வாய்ப்பு இர்க்குன்னு நினைக்குறீங்களா?

அறிவிலி said...

//pappu said...
அந்த ஆள் கிரிக்கெட்ல பண்ணதால அரசியலயும் பண்ண வாய்ப்பு இர்க்குன்னு நினைக்குறீங்களா?//

விளையாட்லயே இவ்வ்வளவு அரசியல் செய்தவர், அரசியலில் நிச்சயம் நன்றாக விளையாடுவார். மக்களுக்கு நல்லதா என்பதுதான் கேள்வி.

Tech Shankar said...

பொறுத்திருந்து பார்ப்போம்.
//இந்த விளையாட்டையாவது நேர்மையான முறையில் விளையாடி வெற்றி பெறுவாரா?

அறிவிலி said...

//தமிழ்நெஞ்சம் said...
பொறுத்திருந்து பார்ப்போம்.
//இந்த விளையாட்டையாவது நேர்மையான முறையில் விளையாடி வெற்றி பெறுவாரா?//

வருகைக்கு நன்றி.. தமிழ் நெஞ்சம்.

Post a Comment

எச்சரிக்கை - பின்னூட்டம் போடாமல் செல்பவர்களுக்கு என்னுடைய பதிவுகளின் தொகுப்பு அனுப்பி வைக்கப்படும்.

ஆபத்துகளை வருமுன் தடுப்பதே நல்லது.