Friday, February 7, 2014

கூழாங்கல்லுடன் சில மாதங்கள்

தான் புதிதாக டிசைன் செய்த கைக்கடிகாரத்துக்கு போதுமான முதலீடு கிடைக்காததால் எரிக் மிக்கோவ்ஸ்கி ஏப்ரல் 2012ல் கிக்ஸ்டார்ட்டர் என்ற Crowd Funding இணையதளத்தில் பொதுமக்களிடம் முதலீடு கோரினார்.
 
அந்த கைக்கடிகாரத்தால் என்ன செய்ய இயலும், அதில் என்ன புதுமை போன்றவற்றையெல்லாம் விளக்கி, முதலீடு செய்பவர்களுக்கெல்லாம், தயாரானவுடன் சகாய விலையில் (US$150க்கு பதில் US$99)  மட்டுமே  கைக்கடிகாரத்தை தருவதாகவும் வாக்குறுதியளித்திருந்தார்.

அவர் நிர்ணயித்திருந்த இலக்கு 100,000 அமெரிக்க டாலர்கள் மட்டுமே. ஆனால் இந்தத் தொகை இரண்டே மணிநேரத்தில் கிடைத்தது மட்டுமல்லாமல், சில நாட்களுக்குள்ளாகவே கிட்டத்தட்ட 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வசூலானது.

சில வருடங்களுக்கு முன்பு வரை செல்போன்களின் அளவு சிறியதாகிக் கொண்டே வர,எவ்வளவு சிறியதோ அவ்வளவு விலை அதிகமாகவும் இருந்தது. ஸ்மார்ட் போன்களின் வரவு, நிலைமையை தலைகீழாக்கியது. கிட்டத்தட்ட கம்ப்யூட்டரில் செய்யும் அத்தனை தினப்படி வேலைகளையும் போனிலேயே செய்ய இயலுவதால் திரையின் அளவும், அதன் தொடர்ச்சியாக போனின் அளவும் பெரிதாகிக் கொண்டே போக ஆரம்பித்துவிட்டது.

இந்தப் பெரிய போன்களால் பல அனுகூலங்கள் கிடைத்தாலும் சில அசெளகரியங்களும் சேர்ந்தே வந்தன.உதாரணமாக, காதுக்கும் தோளுக்கும் இடையில் கிடத்தி பேசிக்கொண்டே எதிரில் வரும் லாரிக்கும், கூடவே வரும் பஸ்ஸுக்கும் இடையிலான 6 அங்குல சந்தில் புகுந்து செல்லும் வித்தை தெரியாதவர்கள்,போன் அடித்தால் பைக்கை ஓரங்கட்டிவிட்டுத்தான் யார் கூப்பிடுகிறார்கள் என்று பார்க்க வேண்டும்.ஹெட்செட் மாட்டியிருந்தாலும், யார் என்றே தெரியாமல் அட்டெண்ட் செய்து போன வாரம் பணத்தை திருப்பித் தருவதாய் சொல்லியிருந்த கடன் கொடுத்த பாவியிடம் மாட்டிக் கொள்ள வாய்ப்பு அதிகம்.

அலுவலகக் கூட்டங்களில் உட்கார்ந்திருக்கும் போது காலோ, மெஸ்ஸேஜோ வந்தால், முக்கியமானதா? இல்லை சகதர்மினியின் "ஒண்ணுமில்ல, சும்மாத் தான், என்ன பண்றீங்க?"அழைப்பா என்று தெரிந்து கொள்ளவே போனை கையிலெடுத்துப் பார்க்க வேண்டும்.

இதுவே உஙகள் கைக்கடிகாரத்தில் அழைப்பவர் பெயர் தெரிந்தால், நீஙகள் எதிர்பார்த்திருக்கும் முக்கியமான அழைப்பாக இருக்கும் பட்சத்தில் எழுந்து வெளியில் போய் பேசிவிட்டு வரலாம். ஒவ்வொரு முறையும் போனை எடுத்துப் பார்த்தால் உங்களையும் பக்கத்தில் வாட்ஸாப்பில் கடலை போட்டுக்கொண்டிருப்பவரைப்   போல நினைக்க வாய்ப்புகளுண்டு. அதே போல் மெஸ்ஸேஜ் வந்தாலும் கடிகாரத் திரையில் பார்த்துவிட்டு, அவசரச் செய்திகளுக்கு மட்டும் பதிலளித்து உங்களை சாகத் தூண்டும் இன்ஷூரன்ஸ் விளம்பரங்களை புறக்கணிக்கலாம்.

இத்தகைய ஸ்மார்ட் வாட்ச்களை தயாரித்து சந்தைப்படுத்த  பல நிறுவனங்கள் முயற்சி செய்தாலும் பெரிய அளவில்  வெற்றி கிட்டவில்லை.  சோனி  ஓரிரண்டு மாடல்களை வெளியிட்டது.ஆனால்  பெரிய  அளவு மற்றும் எடை,  அடிக்கடி   போனுடன் தொடர்பு துண்டித்துக் கொள்ளும் பிரச்சினை, 5-6 மணிக்கொரு தடவை வாட்சை ரீசார்ஜ் செய்ய வேண்டிய கட்டாயம் போன்ற இன்னல்களால் மக்களிடம் பெரிய வரவேற்பு இல்லாமல் போயிற்று. அது மட்டுமின்றி மணி பார்ப்பதற்கே திரையைத் தொடவோ அல்லது பட்டனை அழுத்தவோ வேண்டியிருக்கும். சில போன்களைப் போலவே சூரிய ஒளியில் ஒன்றும் கண்ணுக்கு தெரியாது.

எரிக், தான் டிசைன் செய்த கைக்கடிகாரத்தில் மேற்சொன்ன பிரச்னைகள் எதுவும் இருக்காதென்று துண்டெல்லாம் போடாமல் சத்தியம் செய்ததை நம்பித்தான் அறுபத்தியிரண்டாயிரம் பேர் பணத்தைக் கட்டினார்கள்.

எனக்கு இதைப்பற்றி தெரிய வந்தது ஜனவரி 2013ல் தான்.சோனியின் ஸ்மார்ட் வாட்ச் பற்றித் தேடும்போது அகஸ்மாத்தாக கண்ணில்பட்டது. எங்களுக்கு போதுமான பணம் சேர்ந்துவிட்டது, உங்களுக்கு வாட்ச் வேணும்னா, பணமெல்லாம் இப்ப கட்ட வேணாம், பதிவு மட்டும் செஞ்சுக்கங்க. வரிசைக்கிரமப்படி உங்கள் முறை வரும்போது மின்னஞ்சல் அனுப்புவோம், அப்ப பணம் கட்டினா போதும் என்ற அவங்களோட டீல் பிடித்திருந்ததால் பதிவு செய்து வைத்தேன். எனக்கு கடந்த செப்டெம்பரில் மின்னஞ்சல் வருவதற்குள் பல்லாயிரம் பேர் பல மாதங்களாக உபயோகிக்க ஆரம்பித்து இணையமெங்கும் பாசிடிவ் ரிவ்யூக்கள் விரவியிருந்தன. எனவே தைரியமாக பணத்தைக் கட்டிவிட்டேன்.அக்டோபர் முதல் வாரத்தில் வந்தும் சேர்ந்துவிட்டது. மிகவும் சிம்பிளான பேக்கிங், வாட்சும் ஒரு யு.எஸ்.பி சார்ஜிங்;கேபிளும் மட்டுமே.மற்றபடி ஒரு துண்டு காகிதம் கூட கிடையாது.

சார்ஜிங் கேபிள் செருக வாட்சில் கனெக்டர் எதுவும் கிடையாது.வாட்சின் இடது  பக்கத்தில் இருக்கும் இரு காப்பர் புள்ளிகளுக்கு அருகே கேபிளை  கொண்டு போனால் பச்சக் என்று காந்த சக்தியில் ஒட்டிக்கொள்கிறது. மறுமுனையை போன் சார்ஜரிலோ,கம்ப்யூட்டர் யு.எஸ்.பி போர்டிலோ கனெக்ட் செய்து சார்ஜ் செய்து கொள்ளலாம்.

ஆண்ட்ராய்ட் போனில் Pebble என்ற அப்ளிகேஷனை நிறுவிக்கொண்டு, ப்ளூடூத் பேரிங் செய்தவுடன் caller id யையும், SMS ஐயும் அழகு சொட்ட வாட்சிற்கு அனுப்பி வைத்து விடுகிறது.

Pebble notifier போன்ற அப்ளிகஷன்கள் மூலம் பேஸ்புக் , வாட்ஸாப், ஈமெயில்,ஜிமெயில் என்று எல்லாவிதமான நோட்டிபிகேஷன்களையும் கைக்கடிகாரத்துக்கு அனுப்பும் வகையில் நம்  தேவைக்கேற்றபடி  செட்டப்  செய்ய முடிகிறது. நான்  கேலண்டர்  மற்றும்  அலுவலக  மின்னஞ்சல்  தவிர வேறெதற்கும் Configure செய்யவில்லை. ஒவ்வொரு நோட்டிபிகேஷனுக்கும்  வாட்ச் ஒருமுறை அதிர்ந்து நம் கவனத்தை ஈர்க்கிறது.

போன்  திரைகளைப் போலில்லாமல் சூரிய ஒளியில் பளீரென்று தெரிகிறது. இருட்டில் படிக்க பேக்லைட் உண்டு. கையை லேசாக ஆட்டினால் போதும்.உள்ளிருக்கும் ஆக்ஸலரோமீட்டர் பேக்லைட்டை ஒளிரவைத்து விடுகிறது.

நேரம் காட்டும் திரையின் வடிவத்தை மாற்றிக்கொண்டே இருக்கலாம். இதற்காக  தமிழ் உட்பட ஆயிரக்கணக்கான watchface டிசைன்கள் இங்கே  கொட்டிக் கிடக்கின்றன. போனில் டவுன்லோட்  செய்து  மாற்றிக்கொண்டே  இருக்கலாம். தினம் ஒரு வாட்ச் கட்டுவது போன்ற ஒரு பிரமையை கொடுக்கிறது.எட்டு watchface வரை வாட்சிலேயே சேமித்து  வைத்துக் கொள்ளலாம்.

அதிலும் திருப்தியில்லாவிட்டால் canvas for Pebble போன்ற அப்ளிகேஷன் மூலமாக போனிலேயே நீங்களே டிசைன் செய்து கொள்ளலாம்.கூகிள், ஆப்பிள் போலவே Pebble App Storeம் இந்த வாரத்திலிருந்து திறந்து விட்டார்கள்.

ரெகுலரான firmware அப்டேட், பயனார்களின் சந்தேகங்களை நிவர்த்திக்க forum, டெவெலப்பர்களுக்கான  களமமைத்து  கொடுத்தல்  போன்ற  விஷயங்கள்  மூலம்  பிற்காலத்தில் ஒரு நல்ல  பிராண்டாக உருவாகக்கூடிய சாத்தியக்கூறுகளை காட்டுகிறார்கள்.

கடந்த 3 மாதங்களில், வார இறுதிகளில் மட்டும் ஒரு முறை சார்ஜ் செய்தாலே போதுமானதாக இருக்கிறது.

குறைகள் என்று பார்த்தால், பார்வைக்கு ஒரு சீப் பிளாஸ்டிக் வாட்சாக தோற்றமளிப்பதைக் கூறலாம். சாம்சங்கின் கேலக்சி கியர் அல்லது சோனி ஸ்மார்ட் போலவோ கலர் டிஸ்ப்ளே/டச் ஸ்க்ரீனோ இல்லைதான். ஆனால் அதுவே இதற்கு சாதகமான பேட்டரி லைப்  ஐ கொடுக்கிறது.

இப்போது சில நாட்களுக்கு முன் ஸ்டீல் கேசிங்கில்  புதிய  மாடலையும்  வெளியிட்டு விட்டார்கள். ஆனால்  விலைதான் US$250.

எந்த பொருளும் நமக்காக வேலை செய்ய வேண்டும். நம்மை வேலை வாங்கக்கூடாது. அந்த விதத்தில், கூழாங்கல் எனக்கு ஒரு  உபயோகமான பொருளாகவே இருக்கிறது.

முதலில் அவர்களின் இணையதளம் மூலமாக விற்று வந்தவர்கள் தற்போது அமெர்க்காவின் பிரபலமான Best Buy போன்ற கடைகள் மூலமாகவும் விற்பனை செய்கிறார்கள்.

Thursday, November 18, 2010

கங்கிராட்ஸ்... மை டியர்...

18-நவ-2005,காலை 0600 மணி

என் மனைவி (எ.ம.) : ஹரீஷ்.. எந்திரி.. மணியாச்சு..

ஹரீஷ்: 2 மினிட்ஸ்.. ப்ளீஸ்

18-நவ-2006,காலை 0610 மணி

எ.ம: டேய்.. இன்னுமா எந்திரிக்கலை?

ஹரீஷ்: ஒன்லி 2 மினிட்ஸ்மா.. ப்ளீஸ்.....

18-நவ-2007,காலை 0620 மணி

எ.ம:  ஏண்டா? ஒன் பக்கத்துலயே நின்னு எழுப்பிண்டே இருந்தா, யூனிஃபார்ம் அயர்ன் பண்றது, காஃபி.. போர்ன்விடா கலக்கறதுன்னு வேலையெல்லாம் யார் செய்யறது? ஏந்திரிச்சு போடா???

நேத்து கூட லேட்டா.. போனதுக்கு பேரு நோட் பண்ணதா சொன்னியே?

18-நவ-2008,காலை 0630 மணி

எ.ம: ஒழுங்கா குளிச்சியா?  ஒடனே வந்துட்டியே.... ஹால்ல போர்ன்விட்டா வெச்சிருக்கேன். யூனிஃபார்ம் சேர் மேல இருக்கு... கட.. கடன்னு போடு..

ஹரீஷ்:  அம்மா.. பனியன காணுமே???

எ.ம: ரூம்ல ஒன் கப்போர்ட்லதான் இருக்கு, எடுத்து போட்டுக்கோ..

ஹரீஷ்:  நீயே எடுத்து குடுத்துறேன்.. ப்ளீஸ்... நான் போர்ன்விட்டா குடிச்சிண்டிருக்கேன்....

எ.ம: இந்தா... பனியன்.. எங்க உன் பென்சில் பாக்ஸ்ல பேனாவையே காணுமே?

ஹரீஷ்:  நேத்து பெட்ரூம்ல எழுதிண்டுருந்தேன்.. பெட் பக்கத்துல பாரேன் ப்ளீஸ்...

 அய்யோ.. மறந்தே போயிட்டேன்... போன வாரம் ரிசர்வாயருக்கு கூட்டிண்டு போனதுக்கு 5 டாலர் தரணுமாம்.. நான் மட்டுந்தான் பாக்கின்னு மிஸ் திட்டினாங்க...

எ.ம: ஏண்டா... நேத்தே சொல்லிருக்கலாமில்ல.. கையில கேஷே இல்ல... நீ ஸ்கூலுக்கு போனப்பறம்தான் ஏடிஎம் போலான்னு இருந்தேன்.

ஏம்பா?(என்னிடம்) உங்ககிட்ட இருக்கா?

நான்: என் பர்ஸ்ல 50 டாலர்தான் இருக்கு.

எ.ம: சரிடா.. ஒம்போதரைக்கு காசு எடுத்துண்டு ஸ்கூல் வாசலுக்கு வரேன்.. நீ ப்ரேக் டைம்ல வெளில வந்து வாங்கிக்கோ...

18-நவ-2009,காலை 0640 மணி

ஹரீஷ்:  அம்மா... சாக்ஸ் பாரேன்.. ஒண்ணு ஆங்கிள் சாக்ஸ்.. இன்னொன்னு ஃபுல் சைஸா இருக்கு...


எ.ம: கண்ண தெறந்து ஒழுங்கா பாரு.. ஒன் பக்கத்துலியேதான் இன்னொரு சாக்ஸும் இருக்கு..

18-நவ-2010,காலை 0645 மணி

ஹரீஷ்: ஓ.. நோ.. அம்மா டாய்லெட் வரா மாதிரி இருக்கு..

எ.ம: அய்யோ.... கடவுளே.. படுத்தறானே....சரி.. சீக்கிரமா போயிட்டு  டிரஸ்ஸெல்லாம் போட்டுண்டு  வா..

18-நவ-2010,காலை 0655 மணி

ஹரீஷ்:  அம்மா சிக்ஸ் ஃபிஃப்டி ஃபைவ் ஆயிடுத்தும்மா, இனிமே நடந்து போனா லேட்டா ஆயிடும்.. ப்ளீஸ் என்ன சைக்கிள்ள கொண்டு போய் விட்றேன்...

எ.ம: ஒன் சைக்கிளையும் பஞ்சராக்கிண்டு வந்துட்டே... காத்தால சீக்கிரமும் எந்திரிக்காத.. இப்ப என்னை படுத்து...

கொஞ்சம் இரு.. டிரஸ்ஸ மாத்திண்டு வரேன்.. ஏம்பா(என்னிடம்)... நீங்க வீட்ட பூட்டிண்டு போங்க...


18-நவ-2010,மாலை 0630 மணி

நான் அலுவலகத்திலிருந்து திரும்பி வீட்டுக்குள் நுழைந்ததும்..

ஹரீஷ்:  அப்பா... இன்னிக்குத்தான் எனக்கு இந்த ஸ்கூல்ல லாஸ்ட் டே..ஜாலி... இனிமே நெக்ஸ்ட் இயர் செகண்டரிதான் போகணும்....

நான்: (என் மனைவியிடம்..): 
ராஜி.. கங்கிராட்ஸ்... க்ரேட்...

Friday, October 1, 2010

எந்திரன் - விறுவிறுப்பான சண்டைக் காட்சி விடீயோ

Friday, July 16, 2010

"டீலா நோ டீலாவில் கலந்து கொள்ள"

மு.கு. :

ரியாலிட்டி ஷோ என்று சொல்லிவிட்டு "டீலா நோ டீலா" நிகழ்ச்சியில் நடக்கும் செண்டிமென்ட் காட்சிகளால்
க(ல)வரப்பட்டு தோன்றிய கற்பனையே இந்த பதிவு.
*************************************************************************************
போன் மணி அடிக்கிறது..

"ஹலோ, ராமசாமி ஹியர்"

"சன் டிவிலேர்ந்து பேசறோம்,டீலா நோ டீலா நிகழ்ச்சியில கலந்துக்க ஆள் செலக்ட் பண்றோம்"

"அடடே, ரொம்ப சந்தோஷங்க"

"இப்ப கேக்கற கேள்விக்கெல்லாம் நீங்க சொல்ற பதில்லேர்ந்துதான் நாங்க செலக்ட் பண்ணுவோம்."

"கேளுங்க சார்"

"வீட்ல எத்தன பேருங்க இருக்காங்க?"

"இப்போதைக்கு நான் மட்டுந்தாங்க இருக்கேன், மத்தவங்கள்ளாம் வெளியில போயிருக்காங்க."

"அது இல்லைங்க. உங்க குடும்பத்துல மொத்தம் எத்தன பேரு?"

"அஞ்சு பேருங்க, நானு, என் மனைவி, பையன் அப்பறம் எங்க அப்பா, அம்மா."

"அய்யய்யோ, எல்லாருமே இருக்காங்களா...,எல்லாருமே ஒரிஜினல்தானே?"

"என்னங்க கேக்கறீங்க!!!! இதுல கூட டூப்ளிகேட்லாம் இருக்கா என்ன?"

"அதில்லீங்க சொந்த அப்பா, அம்மாவா இல்ல தத்து எடுத்தாங்களா? "

"சேச்சே... அக்மார்க் ஒரிஜினல் அப்பா அம்மாதாங்க."

"உங்க மனைவி? கல்யாணம் ஆயிருச்சா?"

"என்னங்க இது இவ்வளவு அபத்தமா கேக்கறீங்க?"

"இல்லைங்க, லிவிங் டுகெதர் மாதிரி ஏதாவது?"

"அதெல்லாம் இல்லீங்க.முறையா கட்டிகிட்டதுதான்"

"லவ் மேரேஜா? ஓடி கீடி போய் கல்யாணம் பண்ணீங்களா?"

"அதுவும் இல்லீங்க, வீட்ல பாத்து பண்ணி வெச்சதுதாங்க"

"ஹ்ம்ம்... ஒண்ணும் ஒத்து வரலியே.சரி... பையன், உங்க பையன்தானே?"

"யோவ்?"

"அடடே, தப்பா புரிஞ்சுகிட்டீங்களா? ஏழை குழந்தை எதுவும் தத்து எடுத்திருக்கீங்களோன்னு கேட்டேன்."

"சொந்தமா, கல்யாணமாயி எண்ணி ஒம்போது மாசத்துல பெத்த புள்ளதான்."

"ப்ச்... அப்படியா?"

"சம்பாத்தியமெல்லாம் எப்படிங்க? சாப்பாட்டுக்கெல்லாம் எதுவும் கஷ்டமா?"

"கடவுள் புண்ணியத்துல, நாங்க ரெண்டு பேருமே வேலைக்கு போய், போதுமான அளவுக்கு சம்பாதிக்கறோங்க."

"போச்சு, இதுலயும் ஒரு பிரச்னையும் இல்லியா?"

"வீட்ல யாருக்கும், எதுவும் உடம்புல பிரச்னை இருக்கா?"

"நாலு நாளா பையனுக்கு அரை மணிக்கு ஒருவாட்டி கொஞ்சம் தண்ணியா போவுது.
அப்பா கூட நீர் பிரியும்போது கொஞ்சம் எரிச்சலா இருக்குன்னு போன வாரம் சொன்னாரு."

"இதெல்லாம் இல்லீங்க, பெரிசா ஏதாவது? ஹார்ட், கிட்னி , கேன்சர்... இப்படி ஏதாவது?"

"அதெல்லாம் ஒண்ணும் கெடையாதுங்க"

"சரிங்க.. அப்ப நான் வேற ஆளத்தான் பாக்கணும்."

"ஏங்க நான் கலந்துக்க முடியாதா, டிவியில வரலாமேன்னு பாத்தேன்."

"வீட்ல, எதுவும் பெரிசா பிரச்னை வந்தா இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க, வேண்ணா
அப்ப கன்சிடர் பண்ணலாம்."

*********************************************************************************

கடை வீதியில் இரு பெண்கள்

"என்னது, டீலா நோ டீலா நிகழ்ச்சியில கலந்துக்க போறியா?"

"ஆமா,ஏன்?"

"சொல்லவே இல்ல, ஒன் புருஷன் ஒன்னய விட்டு ஓடிப்போனது எனக்கு தெரியாதே"


ஆஸ்பத்திரியில் நோயாளியும் டாக்டரும்

"டாக்டர், இன்னிக்கு மட்டும் என் மாமாவ ஒரு ரெண்டு அவர் வெளியில போயிட்டு வர அனுமதி குடுங்க"

"என்னங்க இது,அவருக்கு கிட்னில பராப்ளம்.இப்பவோ அப்பவோன்னு ஐ.சி.யு ல இருக்காரு.வெளில எதுக்கு போவணும்?

டீலா, நோ டீலா நிகழ்ச்சில கலந்துக்க சன் டிவிலேர்ந்து கூப்டுருக்காங்க டாக்டர்.

வீட்டில் கணவனும் மனைவியும்

"என்னம்மா, போன்ல யாரு? ஏன் பேசாமயே கட் பண்ணிட்ட?

"பின்ன, சன் டிவிலேர்ந்து டீலா நோ டீலா நிகழ்ச்சியில கலந்துக்க கூப்புடறாங்க.நம்ம வீட்ல எல்லாரும் நல்லா இருக்கறது புடிக்கல போல."

Saturday, July 3, 2010

ஆக்டோபஸ் ஜோசியம் பலிக்குமா?

உலகக் கோப்பை ஆரம்பித்து உலகெங்கிலும் மக்கள் கால்பந்து ஜுரத்தால் பாதிக்கப்பட்டு அலைந்து கொண்டிருக்கிறார்கள். சென்ற உலககோப்பை சேம்பியன் இத்தாலி, மற்றொரு ஃபைனலிஸ்ட் ஃப்ரான்ஸ் உட்பட பல ஜாம்பவான் அணிகள் எல்லாம் காலிறுதிக்கு முன்பே வெளியாகிவிட்டன.வழக்கம் போலவே பரபரப்பாக பேசப்பட்டு அதே வழக்கபபடி சொதப்பியது இங்கிலாந்து.

நேற்று நடந்த நெதர்லாந்து - ப்ரேசில் மோதலில் எதிபாராத விதமாக நெதர்லாந்து வெற்றி பெற்று சூதாட்டத்தில் பணம் கட்டிய பலர் வயிற்றில் உதைத்தது.

இன்று, இன்னும் சில நிமிடங்களில் மிக முக்கியமான அடுத்த காலிறுதி ஆட்டம். கட்டுக்கோப்பான ஜெர்மன் அணிக்கும் கட்டவிழ்த்த காளைகளாய் விளையாடும் அர்ஜென்டினாவுக்குமான ஆட்டம்.விட்டால் களமிறங்கி ஆடிவிடுவார் போல பரபரப்பாக இருக்கும் மரடோனா மற்றும் அவர் வாரிசாக கருதப்படும் லியோனல் மெஸ்ஸி ஆகியோரால் அர்ஜென்டினா ஜெயிக்க வேண்டும் என்று மனம் விரும்பினாலும் ஜெர்மனிதான் ஜெயிக்கும் என்று மனசாட்சி சொல்கிறது.


இந்த லட்சணத்தில் ஆக்டோபஸ் ஜோசியம் வேறு. ஜெர்மனியில் இருக்கும் ஒரு அக்வேரியத்தில் பால் என்ற ஆக்டோபஸ் இருக்கிறது. இதுவரை நடந்த அனைத்து ஜெர்மனி மேட்சுகளின் முடிவுகளையும் துல்லியமாக கணித்து சொல்லியிருக்கிறதாம் இந்த ஆக்டோபஸ்.


இரண்டு பிளாஸ்டிக் கிண்ணங்களில் இரு நாட்டு கொடிகளையும் ஆக்டோபஸுக்கான உணவையும் போட்டு பால் இருக்கும் தொட்டிக்குள் இறக்கி விடுவாரகள். அது எந்த கிண்ணத்திலிருக்கும் உணவை முதலில் சாப்பிடுகிறதோ அந்த நாடுதான் போட்டியில் ஜெயிக்குமாம்.செர்பியா ஜெர்மனி போட்டியில் கூட ஜெர்மனி தோற்கும் என்று கணித்ததாக கூறி சிலாகிக்கிறார்கள்.

பால், இன்றைய போட்டியில் ஜெர்மனிதான் ஜெயிக்கும் எண்று சொல்லியிருக்கிறது.

போட்டிக்கு இன்னும் 5 நிமிஷந்தான் இருக்கு. டிவி பாக்க போறேன். வர்ட்டா.....

Wednesday, April 21, 2010

சாலட் 22-ஏப்ரல்-2010


எலுமிச்சை:அங்காடித் தெரு படம் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.ஒரு சில இடங்களில் மிகைப்படுத்தி காண்பித்திருப்பது போன்ற எண்ணம் தோன்றினாலும் வித்தியாசமான கதைக் களனை தேர்ந்தெடுத்தற்காகவே பாராட்டலாம்.

இந்த படத்தின் பாதிப்பினாலோ என்னவோ ஆதியும் ரங்கநாதன் தெரு : ஒரு எச்சரிக்கை என்று ரங்கனாதன் தெரு கூட்ட நெரிசலும் அதனால் ஏற்படக்கூடிய ஆபத்துகளையும் பற்றி பதிவிட்டிருந்தார்.

அதே நேரத்தில் சிங்கப்பூரிலும் ஒரு பரபரப்பான விஷயம் நடந்து கொண்டிருந்தது. அனைவருக்கும் தெரிந்த சிங்கப்பூரின் மிகப் பிரபலமும் பெரியதுமான முஸ்தபா செண்டரின் முதல் தளத்தை 40 மணிநேரத்திற்கு மூடி வைக்க சிங்கப்பூர் குடியுரிமை பாதுகாப்பு படை SCDF) உத்தரவு பிறப்பித்தது.

கூட்ட நெரிசலும் அதனால் விளையக்கூடிய ஆபத்துகளையும் காரணம் கூறி இந்த நீதிமன்ற உத்தரவு செயலாக்கப்ப்பட்டது. கிட்டத்தட்ட 75000 சதுர அடி கொண்ட முதல் தளத்தில் ஒரே நேரத்தில் 431 பேருக்கு மேல் இருந்தால் அது கூட்ட நெரிசலாக கருதப்படுகிறது.

இந்த அளவுக்குப் போகாவிட்டாலும் ரங்கனாதன் தெரு மற்றும் அங்குள்ள கடைகளில் போதுமான Fire Exit போன்ற அடிப்படை பாதுகாப்பு வசதிகளை எந்த அரசுத்துறையாவது கவனிக்கிறதா?ஆபத்துக் காலங்களில் தீயணைப்பு வண்டிகள் இந்த தெருவுக்குள் நுழையவாவது முடியுமா???

*************************************************************************************
திராட்சை:சிங்கப்பூர் தமிழர்களால் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் வெளிவந்துள்ளது. அரசு வரிவிலக்கு இல்லாத காரண்த்தாலோ என்னவோ "Kurushetram - 24 Hours of Anger" என்று ஆங்கிலத்தில் பெயரிடப்பட்ட இந்தப் படம் இந்த மாதம் 8 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளிவந்து வெற்றி!!!கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.


சிங்கையில் பிரபலமான விஷ்ணு, மதியழகன், குணாளன் போன்ற சின்னத்திரை நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இந்தப் படத்தை இந்த வாரக் கடைசியில் (அது வரை ஓடிக் கொண்டிருந்தால்) திரையரங்கில் பார்த்துவிட்டு விமர்சனம் எழுதப் பார்க்கிறேன்.படத்தைப் பற்றிய மேல் விவரங்களும் ட்ரெயிலரும் இங்கே
(மற்ற சிங்கைப் பதிவர்கள் ஆரும் ஒரு வாரத்துக்கு இந்த படத்த பாக்க கூடாது, விமர்சனம் எழுதக் கூடாதுன்னு உத்தரவு போடறேன்.)

*************************************************************************************
அன்னாசி:சன் டிவியில் "சன் குடும்ப விருதுகள்" என்று ஒன்றை ஆரம்பித்து பாடாய் படுத்துகிறார்கள். தொலைக்காட்சித் தொடர்களில் நடிப்பவர்களுக்கு போட்டியாம்!!! இதில் சிறந்த மாமியார், சிறந்த மருமகள், சிற்ந்த மாப்பிள்ளை என்று கேட்டகரிகள் வேறு. என்ன காரணத்தினாலோ ராதிகாவை இந்த குடும்பத்திலிருந்து விலக்கி வைத்திருக்கிறார்கள். (அ)நியாயமாக பார்த்தால் மனைவி, வைப்பாட்டி,மகள், அம்மா, மருமகள், மாமியார்,பாட்டி, பேத்தி,சித்தி, பெரியம்மா, அக்கா, தங்கை, ஓரகத்தியோட ஷட்டகரோட நாத்தனார் என்று எல்லா கேட்டகரியிலும் அவர் வந்திருக்க வேண்டும்.விஜய் டிவியில் ஜோடி நம்பர்-1 நிகழ்ச்சிக்கு ராதிகா நடுவராக வருவதற்கும் இதற்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா? தெரியவில்லை.

(மே-9-2010 பிற்சேர்க்கை: ஆரம்ப நிகழ்ச்சிகளில் ராதிகா இல்லாததால் மேலே இருப்பது போல் எழுதினேன். பின்னர் இறுதியில் விருது நிகழ்ச்சியில் அவருக்கு "வாழ்நாள் சாதனையாளர்" விருது வழங்கி என் முகத்தில் கரி பூசி விட்டார்கள்.)


*************************************************************************************
ஒரு சிறிய விளம்பர இடைவேளைக்குப் பின் சாலட் தொடரும்.




மிகவும் ரசித்த வானொலிக்கான விளாம்பரம்
*************************************************************************************
மாம்பழம்:சிங்கப்பூருக்கு வந்த புதிதில் சில இளைஞ, இளைஞிகள் வழிய வழிய போட்டுக் கொண்டிருக்கும் கால் சட்டைகளை பார்த்து பரிதாப்பட்டதுண்டு. "அய்யோ பாவம். என்ன கஷ்டமோ? புள்ளைங்க பேண்ட் வாங்கக் கூட காசில்லாம அப்பா, தாத்தாவோட பேண்டையெல்லாம் போட்டுட்டு திரியுதுங்க என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அப்புறம்தான் தெரிந்தது அது ஒரு பேஷனாம்.

"Sagging Pants" என்ற இந்த கண்றாவி பேஷனை தடை செய்ததுதான் இப்போது அமெரிக்காவில் பரபரப்பான செய்தி.இந்த தடையைப் பற்றிய விவாதங்களும் விதண்டாவாதங்களும் வழக்கம் போல் இணையம் முழுக்க பரவிக் கிடக்கிறது.

இருந்தாலும் இந்த தடையை அறிவிக்கும் முன் அதில் இருக்கும் சில அனுகூலங்களையும்
கன்ஸிடர் பண்ணியிருக்கலாம்.

ரொம்ப அவசரமா சௌச்சால்யம் போகணும்னா... பெல்ட், ஜிப்புன்னு அவுத்து டயத்த வேஸ்ட் பண்ணாம "அப்படியே" போகலாம்.

ஜாக்கி, ஹில் ஃபிகர்னு காஸ்ட்லியா அண்டர்வேர் வாங்கிட்டு அத பேண்டால மூடி வெச்சு என்ன பிரயோசனம்?
*************************************************************************************
வாழை:அலுவலக ஆணிகளுக்கு இடையே அவ்வப்போது வீட்டுக்கு வரும்போது பையனுடன் சேர்ந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டிய கடமைதான் பதிவுகள் பக்கம் அடிக்கடி வரமுடியாததற்கு ஒரு காரண்மாக சொல்லிக் கொள்ளலாம்."கற்றுக் கொள்ள" என்ற பிரயோகத்திற்கு காரணம் கீழிருப்பது போன்ற சில உரையாடல்கள்தான்.

ஹரீஷ்: அப்பா, எனக்கு ஒரு சந்தேகம்.

நான்: என்னடா?

ஹரீஷ்: "Ramu bought a Pair of Pants for $10" அப்படின்னா ஒரு பேண்ட் வாங்கினானா, இல்ல ரெண்டு பேண்ட் வாங்கினானா?

நான்: சாதரணமாவே பேண்ட் பற்றி சொல்லும்போது இங்கிலீஷ்ல "Pair of pants" னு Pluralல தாண்டா சொல்ற வழக்கம்.

ஹரீஷ்: ஏன் அப்படி சொல்லணும்?

நான்: தெரியலியே, ஒரு வேளை ரெண்டு கால் இருக்கறதுனாலயோ?

ஹரீஷ்: அப்போ, ரெண்டு கை இருக்கற சட்டைக்கு ஏன் "Pair of Shirts" னு சொல்றதில்ல?

நான்: தெரியலியே... கொஞ்சம் பொறுமையா இரு, கத்துண்டு சொல்றேன். என் ப்ளாக் படிக்கறவங்க, ஃபாலோயர்ஸ் எல்லாம் பயங்கர ஜீனியஸ். நிச்சயமா பதில் சொல்லிருவாங்க பாரேன்.

Friday, April 2, 2010

"கார்பல் டனல் சிண்ட்ரோம்"

இந்த பதிவை எழுதிக்கொண்டிருக்கும் நான், படித்துக் கொண்டிருக்கும் நீங்கள் உட்பட நாமெல்லோரும் ஒரு நாளைக்கு சில(பல) மணிநேரங்களை கணிணியுடன் கழிக்கவேண்டியது காலத்தின் கட்டாயமாகிவிட்டது.டாம் கூட ஜெர்ரியை துரத்தி துரத்தி அலுத்திருக்கும், நாம் ஒரு நாளில் மௌஸை துரத்துமளவுக்கு துரத்தியிருந்தால்.

கூப்பிடுபவர்கள் கூடவெல்லாம் கேண்டின் போக கம்பெனி கொடுப்பது, கஷ்டப்பட்டு கொட்டாவியை அடக்கிக்கொண்டு மீட்டிங்குகளில் உட்கார்ந்திருப்பது, அம்மணிகளை தேடிப் போய் கடலை போடுவது என்றெல்லாம் ஓடாய் உழைத்தாலும் சில மணி நேரங்களாவது கணிணித் திரைக்கு முன் சீரியஸாய் முகத்தை வைததுக்கொண்டு பதிவுகளையாவது படித்துக்
கொண்டிருக்காவிட்டால் "இவனுக்கெல்லாம் வாங்கற சம்பளம் எப்படித்தான் செரிக்குதோ?" என்று உலகம் நம்மை ஏசும்.

வீட்டிற்கு வந்தாலும் இதையே தொடர்கிறோம்.அலுவலகத்தில் "நான் ரொம்ப பிஸி" என்று காட்டிக் கொள்வதற்காகவது வீட்டிலும் சில மணிநேரங்கள் அலுவலக வேலை செய்வது போல் நடித்துக்கொண்டே பதிவுகளை மேய்வது, ஆளே இல்லாத கடையில் டீ ஆத்துவது போல் பதிவு எழுதுவது, பின்னூட்டம் வந்திருக்கிறதா என்று செக் பண்ணுவது, ட்விட்டர், ஆர்குட், ஜி-டாக், ஃபேஸ் புக், ஃப்ளிக்கர், பிக்காஸோ என்று ஒரு கண்றாவியையும் விடாது ஓப்பன் பண்ணி பல மணிநேரங்களை தொடைக் கணிணியும் கையுமாக கழிக்கிறோம்.

இப்படி கணிணிகளுடன் நீண்ட நேரம் செலவிடுவதால் நமக்கு நேரக் கூடிய உடல் உபாதைகள் என்னவென்று நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

நடு இரவில் திடீரென்று எழுந்து கையை உதற வேண்டும் போல் தோன்றுகிறதா? உள்ளங்கையில் அரிப்பு, வலி, மரத்துப் போதல போன்றவை அறிகுறிகள் இருந்தால் நீங்கள் "கார்பல் டனல் சிண்ட்ரோம்" (Carpal Tunnel Syndrome) என்ற உபாதையின் ஆரம்ப நிலையில் இருப்பதாக அர்த்தம்.

ரெண்டு நாள் முன்னாடி வீட்டுக்காரம்மா தோசை வார்க்க சொன்னதோ, மனைவியுடன் ஷாப்பிங் போய் வருகையில் 20 கிலோ பையை பணிவுடன் தூக்கிக் கொண்டு வந்ததோதான் இதற்கு காரணம். ரெண்டு நாள்ல சரியா போயிரும்னு மனதை சமாதானப்படுத்திக் கொள்பவர்களுக்கு அடுத்த சில நாட்களில் மேலே சொன்ன அறிகுறிகள் பகலிலும் வர ஆரம்பிக்கும். மேலும் பேனா, பென்சில் போன்றவற்றை சரியாக பிடித்துக்கொள்ள முடியாமல் போகலாம். அடுத்த கட்டத்தில் சூடு, குளிர்ச்சி போன்றவற்றை உணர முடியாமல் போகக் கூடும்.


இந்த கார்ப்பல் டனல் என்பது நம் கைகளில் இருக்கும் மணிக்கட்டு பகுதியில் உள்ள எலும்புகள் மற்றும் சதைகளுக்கு இடையிலிருக்கும் ஒரு மிகச்சிறிய குகை. நம் கை விரல்களுக்கான கட்டளைகளை மூளையிலிருந்து கொண்டு செல்லும் நரம்பு இந்த குகை வழியாகத்தான் செல்கிறது.பல மணி நேரங்களுக்கு கீ போர்ட் மற்றும் மௌஸை இயக்குவது, வீடியோ கேம் விளையாடுவது போன்ற ஒரே மாதிரியான இயக்கங்களை திரும்ப திருமப செய்துகொண்டே இருப்பவர்களுக்கு இந்த குகைப்பகுதியில் இருக்கும் சதை மற்றும் சதைகளை எலும்புகளுடன் இணைக்கும் டெண்டன்களில்(Tendons) வீக்கம் ஏற்படக் கூடும்.

ஏற்கெனவே மிகச்சிறிய அளவில் இருக்கும் குகை, இத்தகைய வீக்கங்களால் மேலும் குறுகி, ஊடே செல்லும் நரம்பில் அழுத்தத்தை ஏற்படுத்திவிடும்.இந்த அழுத்தமே மேலே சொன்ன உபாதைகளுக்கான காரணம்.

தொழிற்சாலைகளில் அசெம்ப்ளி போன்ற துறைகளில் தொடர்ந்து தினமும் ஒரே மாதிரியான வேலைகளை செய்பவர்களுக்கும் இந்த பிரச்னை வருவதற்கான சாத்தியம் அதிகம்.

"அடடே... ஏற்கெனவே எனக்கு அப்பப்போ இந்த மாதிரி அறிகுறிகள் இருக்கே" என்பவர்கள் உடனடியாக தேவன் மாயம், ப்ரூனோ (ருத்ரன் இதுக்கு தோது பட மாட்டார்) போன்ற நல்ல மருத்துவர்களை அணுகுவது உசிதம்.அவர்களோ அல்லது அவர்கள் பரிந்துரைக்கும் சிறப்பு மருத்துவர்களோ மருந்து, மாத்திரை அல்லது அறுவை சிகிச்சை மூலம் குண்ப்படுத்தி விடுவார்கள்.

ஆண்களைவிட பெண்களுக்கே எளிதில் இந்த பிரச்னை வருவதற்கான வாய்ப்பு அதிகம். காரணம் அவர்களுக்கு இயற்கையிலயே இந்த கார்ப்பல் டனல் குகையின் சைஸ் சிறியது. ஆகவே சிறிய அளவு வீக்கத்திற்கு கூட பாதிப்பு அதிகம் வரக் கூடும்.

"ஹையா.. எனக்கெல்லாம் இந்த பிரச்னை இல்லையே" என்பவர்கள் வருமுன் காக்கும் நடவடிக்கைகளாக பின்பற்ற வேண்டியவை...

மடிக் கணிணி என்பது அடிக்கடி பயணிப்பவர்களுக்கு அத்தியாவசிய தேவைக்காக உருவாக்கப்பட்டது. தொடர்ந்து பல மணி நேரங்கள் உபயோகிப்பதாக இருந்தால் எக்ஸ்டெர்னல் மானிட்டர், கீ போர்ட் மற்றும் மௌஸ் உபயோகிப்பது நல்லது.

மணிக்கட்டு பகுதியை முடிந்த அளவு நேராகவே வைத்திருக்க் வேண்டும். மேல் நோக்கியோ அல்லது பக்கவாட்டிலோ வளைக்காமல் இருத்தல் நலம்.

கீ போர்டும் மௌஸும் பக்கம் பக்கமாக ஒரே தளத்தில் இருக்க வேண்டும்.

மேலே படத்தில் குறிப்பிட்டுள்ளபடி கைகளை நேச்சுரல் ஆங்கிளில் வைத்திருக்க வேண்டும்.

தொடர்ந்து ஓரே மாதிரியான வேலையை செய்யாமல் ஷெட்யூல் செய்து கொள்ள வேண்டும். மணிக்கு ஒரு தடவை சின்ன ப்ரேக் அல்லது வேறு வேலைகளை செய்ய வேண்டும்.நம்மில் பலரும் காலையில் நுழைந்தவுடனேயே மேஜையை க்ளீன் செய்வது, இருக்கும் காகிதங்களையெல்லாம் பைல் பண்ணுவது என்று எல்லாவற்றையும் முடித்துவிட்டுதான் ஒரேயடியாக தொடர்ந்து வேலையில் உட்காருவோம். அதற்கு பதிலாக இத்தகைய சிறு வேலைகளை மணிக்கொன்றாக செய்ய வேண்டும்.

தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் சுழற்சி முறையில் ஒருவருக்கொருவர் வேலைகளை மாற்றிக் கொள்ள வேண்டும்.

மேலே சொன்னவற்றையெல்லாம் பின்பற்றுவதன் மூலம் வாயில் நுழைவதற்கே கஷ்டமான பெயர் கொண்ட "கார்ப்பெல் டனல் சிண்ட்ரோம்" உடலுக்குள் நுழையாமல் காத்துக் கொள்ளலாம்.


டிஸ்கி: சமீப காலத்தில் அலுவலகத்தில் தேவையான பயிற்சிகளை அளித்தபின் கூடுதல் பணியாக "Office Ergonomics" ட்ரெயினர் மற்றும் ஆடிட்டராக நியமித்திருக்கிறார்கள். எனவே இது தொடர்பான மேலும் சில இடுகைகள் எதிர்காலத்தில் வரக் கூடும் என எச்சரிக்கிறேன்..

Monday, March 8, 2010

"காமன் வுமேன்" - காமன் மேனின் பார்வையில்

ஆர்.கே.லக்ஷ்மண் அவர்களால் பிரபலமான காமன் மேன், சமீப காலத்தில் "உன்னைப்போல் ஒருவன்" படத்திற்கு பிறகு பரபரப்பாக பேசப்பட்டார்.முக்கியமாக தமிழ்ப் பதிவுலகில்... எனக்கு ஒரு மன வருத்தம்.அது என்ன இந்த காமன் வுமேனை மட்டும் யாரும் கண்டு கொள்ளவே இல்லையே என்று....

எனவே மகளிர் தினத்தை முன்னிட்டு... "காமன் வுமேனின் குணாதியசங்கள்" - ஒரு காமன் மேன் பார்வையில்.

1. ஆன்லைன் ஷாப்பிங், ஃபோன் ஷாப்பிங் என்று பல வசதிகள் இருந்தாலும் ஞாயிற்றுக்கிழமை காலையில் மறக்காமல் காபி பொடியோ, சர்க்கரையோ வாங்க கணவனை கடைக்கு அனுப்புபவர்கள்.

2. தன் குழந்தையின் அழகுக்கும் புத்திசாலிதனத்துக்கும் தன் பரம்பரையும், தவறுகளுக்கும் துர்குணங்களுக்கும் தன் கணவனின் ஜீன்களும் காரணம் என்று சர்வ நிச்ச்யமாக நம்புபவர்கள்.

3. நான்கு மணி நேரம் நாப்பது கடை ஏறி இறங்கி துணிகள் வாங்கிய பிறகு எதிரில் வரும் பெண்ணின் உடையோ அல்லது நாப்பத்தி ஒண்ணாவது கடை பொம்மையின் சேலையோ அழகாக இருப்பதாக சொல்பவர்கள்.

4. மும்பை வெடிகுண்டு சம்பவ செய்தியை படிக்கும் பெண்ணின் தோடு டிசைன் நன்றாக இருப்பதாக ரசிப்பவர்கள்.

5. ஒரு கிலோவுக்கு 200 கிராம் எடையில் அடிக்கும் காய்கறிக்காரனிடம் கொசுறாக கிடைக்கும் கறிவேப்பிலை கொத்தமல்லிக்காக சந்தோஷப்படுபவர்கள்.

6. உலகச் செய்திகளை விட லோக்கல் (அக்கம் பக்கத்து வீட்டு) செய்திகளில் அதிக நாட்டம் கொண்டவர்கள்.

7. சொந்த சோகங்களை தொலைக்காட்சித் தொடர் சோகங்களில் மூழ்கி மறப்பவர்கள்.

8. மருமகளாக இருக்கும் போது தானே சிறந்த மருமகள் என்றும் மாமியாராக இருக்கும் போது தானே சிறந்த மாமியார் என்றும் நினைத்துக் கொள்பவர்கள்.

9. சமையல் செய்ததில் எது மீதமானாலும் மறக்காமல் ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு ஒரு வாரம் கழித்து First in First Out (FIFO) அடிப்படையில் குப்பைத் தொட்டியில் கொட்டுபவர்கள்.

10. தமிழின் மிகச் சிறந்த நாவல்களை எழுதியவர் லஷ்மி என்று கற்பூரம் அணைத்து சத்தியம் செய்பவர்கள்.

11. "எங்கியோ பாத்தா மாதிரி இருக்கே", என்று ஏதாவது பெண்ணை விகல்பமில்லாமல் பார்க்கும் கணவன்மார்களை முறைப்பவர்கள்.

12. ஒழுங்காக பாத்திரம் தேய்க்காத வீடு பெருக்காத வேலைக்காரப் பெண் ஒரு நாள் வேலைக்கு வராவிட்டாலும் புலம்புபவர்கள்.

13. கடினமாக உழைத்து நல்ல பெயரும் பதவி உயர்வும் வாங்கும் கணவனை சரியாக ஐந்து மணிக்கு வீட்டுக்கு வந்துவிடும் பக்கத்து வீட்டுகாரனின் சாமார்த்தியம் வராது என்று இடித்துரைப்பவர்கள்.

20. ப்ளக்கை சொருகி லைட்டை போடும் மகனை வருங்கால எடிசனாகவும், கிளியை நினைத்து காகம் வரையும் போது பின்னாள் பிகாஸோவாகவும், ரெண்டக்க ரெண்டக்க பாட்டுக்கு இடுப்பில் கை வத்துக் கொண்டு தலையை ஆட்டும் பெண்ணை "பத்மா சுப்ரமணியத்துகிட்ட சேத்து விட்டா நல்லா வருவா" என்றும், "பாலும் தெளி தேனும்" சொல்லும்போது எஸ்.பி.பி யாகவோ, எம்.எஸ்.சுப்புலஷ்மியாகவோ நினைத்து புளகாங்கிதமடைவார்கள்.

பி.கு: 20 எழுதிரலாம்னு ஒரு வேகத்துல ஆரம்பிச்சேன். 6 மிஸ்ஸிங். பின்னாடி ஏதாவது தோணினாலோ, பின்னூட்டங்களில் வந்தாலோ இடையில் சேர்க்கப்படலாம்.

பிற்சேர்க்கை:
14.உலகத்திலேயே தனக்கு மட்டும் தான் மோசமான கணவன் வாய்த்ததாக புலம்புவார்கள்.(உபயம்: கோவி.கண்ணண்)

Tuesday, January 12, 2010

"உன் சமையல் அறையில்... நான் உப்பா, சர்க்கரையா?"


ஃபோன் அடிக்கிறது,.. "ம்... சொல்லுப்பா, என்ன விஷயம்."

"ஓண்ணும் விஷயம் இல்ல, சும்மாதான் ஃபோன் பண்ணிணேன், சாப்டாச்சா???"

"ம்.. ஆச்சு.."

"என்ன சாப்பாடு"

"என்னத்த பெரிய சாப்பாடு, வழக்கம் போல கேண்டீன்ல மலாய்க்காரி என்னத்த வடிச்சு கொட்றாளோ திங்க வேண்டியதுதான்."

"சாயங்காலம் எத்தன மணிக்கு வருவீங்க?"

"அத சாயங்காலம் கெளம்பறதுக்கு முன்னாடிதான் சொல்ல முடியும். நாலு மணி ஆனாத்தான் நெறய பேருக்க்கு என் ஞாபகமே வருது"

"சரி, நைட்டுக்கு என்ன சமைக்கட்டும்?"

"உன்னால என்ன முடியுமோ அத செய்."

"பாவம்பா நீங்க, ஒரு வேளைதான் வீட்ல சாப்புடறீங்க. சாம்பார், ரசம் வெச்சு, பீன்ஸ் பொரியல் பண்ணிறட்டுமா?"

"ம்.. ஓகே."

"வெச்சிறட்டுமா, வேற ஒண்ணும் இல்ல."

"ம்.. சரி."
**************************

"சொல்லுப்பா?"

"ஓண்ணும் இல்ல, பீன்ஸ் ஃப்ரிட்ஜ்லருந்து எடுத்து பாத்தேன், ரொம்பக் கொஞ்சமாத்தான் இருக்கு, வேற ஏதாவது பண்ணட்டுமா?"

"ம், பண்ணேன்".

"வெண்டைக்காய் மட்டுந்தான் இருக்கு, ஆனா அது உங்களுக்கு புடிக்காது".

"ம்."

"வெண்டைக்காய் கறி பண்ணி அப்பளம் பொரிச்சிரட்டுமா?"

"ம். சரி."

"வெச்சிர்றேன், வேற ஒண்ணும் இல்ல."

**************************

"ம்... சொல்லு, என்ன விஷயம்?"

"அரைச்சு விட்ட சாம்பாருக்கு, தேங்காய் இல்ல. வெறும் சாம்பார், முருங்கைக்காய் போட்டு பண்ணிரட்டுமா?"

"வத்தக் குழம்பு வேண்ணா வெச்சிறேன்".

"ஆமா, எப்ப பாத்தாலும் வத்தக் குழம்புதான் உங்களுக்கு. உடம்புக்கு கெடுதல். நான் வெறும் சாம்பாரே வைக்கறேன்."

"ம். சரி செய்."

"வெச்சிர்றேன், அப்பறமா பேசலாம்."

**************************

பாஸுக்கு பாஸ் முன்னால் உட்கார்ந்திருக்கும்போது, அடி வயித்துல சும்மா கிர்ருங்க...
வைப்ரேஷன் மோடில் இருந்த போனை எடுத்து கிசுகிசுப்பாக...

"என்ன?"

"ஹலோ... ஹலோ... ஹலோ..."

சத்தமாக, " என்ன வேணும் சீக்கிரமா சொல்லு?"

"இல்ல, பேசாம இட்லி வெச்சு சாம்பார் பண்ணிரட்டுமா?, எனக்கும் டிஃபன் சாப்புடணும் போல இருக்கு."

"பேசிட்டோ, பேசாமயோ என்னத்தயாவது பண்ணு. என்ன ஆள விடு. எதுத்தாப்புல இருக்கற கடங்காரன் பாஷை புரியலன்னாலும் உத்து கேட்டுகிட்டு இருக்கான்."

**************************

வீட்டுக்குள் நுழைந்ததும், "போய் ஒரு குளியல போட்டுட்டு வாங்க, சூப்பரா தோசை சாப்டலாம்."

"தோசையா???? ஏன்?

"மாவு சரியா பொங்கல, இட்லி நல்லா வராது. அதான்"

"தொட்டுக்க என்ன?"

"சாம்பார் பண்ணலாம்னுதான் பாத்தேன். ஆனா ஃப்ரிட்ஜ்ல நேத்து வெங்காய சட்னி கொஞ்சம் இருக்கு, அதுவும் மொளகா பொடியுமா தொட்டு சாப்ட்றலாம்னு விட்டுட்டேன்.“

"ம்... சரி."

**************************

டைனிங் டேபிளில் சாப்பிட உட்கார்ந்த பின், " எங்க சட்னிய காணோம்?"

"உங்க புள்ள, நல்லா இருக்குன்னு அத்தனையும் காலி பண்ணிட்டான், கோச்சுக்காம மொளகாப்பொடிய தொட்டுண்டு சாப்புடுங்க. கடைசில சூப்பரா மோர் கரைச்சு தரேன்,குடிங்க......உடம்புக்கு நல்லது.






**************************



டிவியில் ஏதோ ஒரு சேனலில் பாட்டு பார்த்துவிட்டு, அதே எஃபெக்டோடு கிச்சனுக்கு போய்,
"உன் சமையல் அறையில்... நான் உப்பா, சர்க்கரையா?"

"ம்ம்ம்... குப்பைதொட்டி..."

"கரெக்டுதான், நீ சமைக்கறதையெல்லாம் உள்ள போடற எடத்த அப்பிடித்தான் சொல்லனும்."



டிஸ்கி : இது ஒரு கலப்படம் மிகுந்த கற்பனையான உரையாடல் மட்டுமே.

Friday, December 25, 2009

கிருஸ்துமஸை முன்னிட்டு உலக தமிழ்ப் பதிவுகளில் முதன் முறையாக...

சிங்கப்பூரில் கிருஸ்துமஸ் ஒளி அலங்காரங்கள் மிக பிரபலம். இநத ஒளி அலங்காரங்களை பார்க்க செல்லும்போது சில எதிர்பாராத அருமையான நிகழ்ச்சிகளை பார்க்கும் வாய்ப்பும் கிட்டும்.ஸ்ட்ரீட் பர்ஃபார்மன்ஸஸ் மற்றும் வணிக வளாகங்கள் ஏற்பாடு செய்யும் பல்சுவை நிகழ்ச்சிகள் இதில் அடங்கும்.அப்படி ஒரு வணிக வளாகத்தில் பார்த்த நிகழ்ச்சியின் க்ளிப்பிங்குகள் கீழே.





சாண்டா க்ளாஸ் தாத்தா பரிசுகளை கொடுப்பதற்காக மான்கள் பூட்டிய வண்டியில் செல்வாராம். சிங்கப்பூர் ஆர்ச்சர்ட் ரோட்டில் இந்த வருட கிருஸ்துமஸ் அலங்காரங்களில் இந்த மான்களுக்குத்தான் முக்கியத்துவம். விதவிதமான மான் முக பெண் பொம்மைகள்.



எல்லா வருடங்களையும் போல் ஒளி அலங்காரங்கள் மிகவும் அருமை.கிருஸ்துமஸுக்கு முந்தைய இரவு குடும்பத்துடன் வீதி வலம் சென்றோம். புரட்டாசி சனிக்கிழமையில் திருப்பதிக்கு போன ஃபீலிங். அத்தனை கூட்டம். என்ன ஒன்று, "ஏடு கொண்டல வாடா கோவிந்தா“ தான் மிஸ்ஸிங்.



இந்த வருடம் கூடுதல் சிறப்பு, மெரீனா பே பகுதிகளிலும் "Glitzy Christmas By the Bay" என்ற தீமில் ஓளி அலங்காரங்கள்.



விதம் விதமான கிருஸ்துமஸ் மரங்கள்.

border=0>

அனைவருக்கும் கிருஸ்துமஸ் வாழ்த்துகள்

Friday, December 11, 2009

நான் AND ஜெர்ரி

(மு.கு. இந்த பதிவு ஒரு திட்டமிட்டு செய்யப்பட்ட கொலையை விவரிப்பதால் 18 வயசுக்கு குறைவானவர்கள் பெற்றோர் துணையுடன் படிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.)

"என்னங்க.. என்னங்க.." என்று தன் எட்டு கட்டை ஸ்தாயியில் விளித்துக் கொண்டே வந்தாள் என் பத்தினி.

நான் வழக்கம் போல், பக்கத்தில் வரவிட்டு காது செவிப்பறை கிழியும் அபாயத்திற்கு சற்று முந்தைய என்னங்கவிற்கு...

"கூப்டியா?, சொல்லு என்ன விஷயம்", என்றேன்.

"வடை வேணும்னா, கேக்க கூடாதா? நானே தந்துட்டு போறேன். அதுக்காக இப்படித்தான் பிச்சு பிச்சு தின்னுப்புட்டு, கிச்சன் பூரா இறைச்சு வெக்கிறதா..."

"எது?, காலைல உங்களுக்கு புடிக்குமேன்னு செஞ்சேன்னு சொல்லி ஆசையா குடுத்தியே அதுவா?" ("காலைல சூடா இருக்கும்போதே, நீ திட்டுவியேன்னுதான் தொண்டை அடச்சாலும் பரவால்லேன்னு நாலு தின்னேன். அதையா திரும்பவும் சாப்ட்டியான்னு கேக்கறே?")

"ஆமா.. சாப்டீங்களா இல்ல கடிச்சு துப்பினீங்களா? யார் இதெல்லாம் க்ளீன் பண்றது?"

"என்னப்பா சொல்ற, நான் கம்ப்யூட்டர வுட்டு ஏந்திரிக்கவே இல்லியே..."

"அப்ப அந்த பய வேலையா இருக்குமோ? அவன் காலையிலியே ஒண்ணு போதும்னுட்டானே...(ஹ்ம்ம்ம்... அவனுக்கு விவரம் ஜாஸ்தி) என்று புத்திர சிகாமணியை திட்டி கொண்டே வேலையை பார்க்க போய் விட்டாள்."

அடுத்த நாள்... நான் குளியலறையிலிருந்து, "ராஜீஈஈஈஈ......."

"என்னங்க வழுக்கி விழுந்துட்டீங்களா?" என்று ஆவலாய் பார்க்க ஒடி வந்தாள்.

"நேத்துதான் புது சோப்பு எடுத்து போட்டேன் அதுக்குள்ள காணுமே, எங்க?"

"எனக்கென்ன தெரியும்.. நீங்கதான் ஒரு வேளை, புதுசா சேந்த லேடி மேனேஜர் முன்னாடி பளிச்சுனு தெரியணும்கறத்துக்காக முழு சோப்பையும் ஒரே நாள்ள தேச்சு காலி பண்ணீட்டீங்களோ என்னமோ.." என்றாள்.

என் முறைக்கும் பாவனையை (பின்ன நெசமாவா முறைக்க முடியும்) கண்டு, "சரி.. சரி.. புது சோப்பு தரேன் குளிச்சிட்டு வந்து உங்க மோப்ப சக்தியெல்லாம் வெச்சு துப்பறியுங்க" என்று சோப்பை கொடுத்துவிட்டு சென்றாள்.

குளித்துவிட்டு வந்து அலமாரியில் பார்த்தால் தேங்காய் எண்ணெய் பாட்டில்(ப்ளாஸ்டிக்) கவிழ்ந்து அத்தனை எண்ணையும் கொட்டி கிடந்தது.பாட்டிலை எடுத்து பார்த்தால் மூடி டைட்டாகதான் இருந்தது, ஆனால் அடியில் சூடு பட்டது போல ஒட்டை.

"ஆஹா... நம்மளை மீறிய ஒரு அமானுஷ்ய சக்தி வீட்டுக்குள்ள இருக்குடா" என்று லேசாக புரியத் துவங்கியது.

சாயங்காலம் என் மனைவி "குழி பணியாரம் செய்யலாம்ணு இருக்கேன், மேல அட்டத்துல இருக்கற சட்டிய கொஞ்சம் எடுத்துக்கொடுங்க" என்றாள்.

முந்தின தடவை பணியாரம் என்று செய்த வஸ்து ஞாபகத்தில் வந்து பயமுறுத்தினாலும் வேறு வழியில்லாமல் ஸ்டூலை போட்டு எக்கி எடுக்கும்போது......

4x2 இன்ச் சைஸில் பந்து போன்று ஏதோ ஒன்று என் தோளுக்கு மேல் பறந்தது போல் தோன்றியது.

அடுத்த வினாடி, "வீஈஈஈஈஈல்".....சூப்பர் சிங்கர் வெஸ்டெர்ன் மியூசிக் சுற்றில் ராகினி ஸ்ரீ உச்ச குரலில் கத்தினாரே அது போன்ற ஒரு சத்தம் என் மனைவியிடமிருந்து... (சம்பவம் பழசு, உவமை மட்டும்தான் புதுசு...)

நானும் திகிலடைந்து சட்டி வேறு, நான் வேறாக விழுந்தேன்.

"எலிங்க... பெரிய எலி..." என்று வீஈஈலுக்கு விளக்கமளித்தாள்.

விழுந்தவாக்கில் விட்டத்தை பார்த்து யோசித்ததில் வடை, சோப்பு, தேங்காய் எண்ணெய் மற்றும் அந்த அமானுஷ்யம் என்று அனைத்திற்கும் விடை கிடைத்தது.

மேலே ஏறி திரும்பவும் பார்த்ததில்.. காணாம போன சோப்பு, ஒரு பாதி வெங்காய துண்டு (அய்... நான் போன வாரம் தோச கல்லு துடைக்க வெச்சிருந்தத காணோம்னு தேடினேன்-மனைவி), தேங்காய் பத்தை, என் பழைய அண்டர்வேர் என்று ஒரு பெரிய கொள்முதல் கிடங்கே இருந்தது.கையோடு அட்டம் முழுவதையும் சுத்தம் செய்து வைத்தோம்.

சரிதான் ஒடிப்போயிடுச்சே, இனிமே வராதுன்னு நெனைச்சா நாளொரு பொருள் காணாமல் போவதும் பொழுதொரு சாமானை வீணடிப்பதுமாக எலியாரின் திருவிளையாடல் தொடர்ந்து கொண்டிருந்தது.

உச்ச கட்டமாக, ஆசையோடு நான் 5ம் பிறந்தநாளுக்கு (கல்யாணத்துக்கு பிறகு) வாங்கி கொடுத்த காட்டன் நைட்டியை அவர் குதறி வைக்கவும், என் பாரியாள் காளியாக மாறி ஒரு எலி பிரச்னையை சால்வ் பண்ணத் தெரியல நீயெல்லாம் ஒரு...ஒரு.... இஞ்சினியரா என்ற அளவுக்கு திட்டி தீர்த்துவிட்டாள்.

என் இஞ்சினியரிங் சிலபஸ்சில் இது இல்லாத காரணத்தாலும், முன் அனுபவம் இல்லாத குறையாலும் என் அலுவலக/வெளி நண்பர்களிடம் யாரவது எலி பி(அ)டிக்கும் நிபுணர்கள் உண்டா என்று விசாரித்தேன்.அவர்கள் யோசனைப்படி முதலாவதாக...

பொறியில் வடை வைத்து பார்த்ததில் சீந்தவேயில்லை. சரி நம்ம வீட்டு வடை டேஸ்டு அதுக்கு ஏற்கெனவே தெரிஞ்சதுனால சாப்புடலன்னு நெனைச்சு, பக்கத்துல இருக்கற டீக்கடைலேருந்து ஒரு மசால் வடை வாங்கி பாதியை பையனுக்கு கொடுத்துவிட்டு (அப்பா.. நல்லா இருக்குப்பா...) மீதியை பொறியிலும் வைத்தேன்.அதுக்கும் அது ஏமாறவில்லை.

இரண்டவதாக, எலி பாஷாணத்தை பல விதங்களிலும் ட்ரை பண்ணியதிலும் தோல்விக்காயை(வெற்றிக்கனிக்கு எதிர்ப்பதம்)த்தான் சந்தித்தேன்.

மூன்றாவதாக சொன்ன பூனை வளர்ப்புக்கு என் மனம் ஒப்பவில்லை.

எலியாரின் அழிச்சாட்டியம் ஷூ,சாக்ஸ், பாய், போர்வை,கம்ப்யூட்டர் வயர் என்று வளர்ந்துகொண்டே போக,அவரை என் பரம வைரி லிஸ்டில் சீனியர் மோஸ்ட் பொசிஷனுக்கு பதவி உயர்வு கொடுத்துவிட்டேன்.

அடுத்த சில நாட்களில் பையனுக்கு பள்ளி விடுமுறை வரவும் பத்து நாள் பேச்சிலர் (அய்யா... ஜாலி...) வாழ்க்கை. ஒரு நாள் இரவு எட்டு மணி போல பரோட்டா பொட்டலமும், பீர் பாட்டிலுமாக வீட்டுக்குள் நுழைந்து விளக்கை போட்டதும், எலியார், ஹாலிலிருந்து உள் அறைக்கு ஒடியதை பார்த்தேன்.உடனடியாக மனதிற்குள் ஒரு மாஸ்டர் ப்ளான் உருவானது.

ரூமுக்குள் நுழைந்து ஜன்னல் கதவு எல்லாவற்றையும் மூடி விட்டேன்.ரூமில் இருக்கும் அத்தனை பொருளையும் ஜாக்கிரதையாக திரட்டி கதவுக்கு வெளியே வைத்தேன்.

அந்த அறையில் அலமாரிக்கு மேல் அந்த கால மர்ஃபி வால்வ் ரேடியோ ஒன்று உண்டு. என் தநதை (ஆண்டெனாவெல்லாம் செட் பண்ணிணா பிபிசி டைரெக்டா ரிசீவ் பண்ணும் - என் அப்பா) வழி சொத்து அது.விஜய் மல்லையா போன்றவர்கள் பிற்காலத்தில் ஏலத்தில் கேட்க வாய்ப்பு இருப்பதாக எண்ணி பத்திரமாக வைத்திருந்தேன்.

ஒரு ஆளாக இந்த ரேடியோவை இறக்க முடியாது என்பதால் அதுவும், கொஞ்சூண்டு தெர்மோகோலும்தான் அறைக்குள் மீதி இருந்தது. நம்ம ஹீரோ நிச்சயமா ரேடியொவுக்குள்ளதான் ஒளிந்திருக்க வாய்ப்பிருந்தது.

வெளியே வந்து கதவை இருக்க மூடி தாள் போட்டு, அடியில் இருந்த கொஞ்சம் இடைவெளியையும் அட்டை, செங்கல் என்று பலவற்றையும் கொண்டு மூடிவிட்டேன்.

மூன்று நாளுக்கு கதவை திறக்கவேயில்லை. நாலாம் நாள்
மெ....................து........................வா.......................க
கதவை திறந்தால் அறை முழுவதும் தெர்மோகோல் குப்பை. சிறிது நேரம் அமைதியாக வெய்ட் பண்ணி ஏதாவது அசைவு தெரிகிறதா என்று பார்த்தேன். ஒன்றும் இல்லை. அடி மேல் அடி வைத்து உள்ளே நுழைந்து பார்த்தால் ஒரு மூலையில் நம் எதிரி ஒருக்களித்து படுத்திருந்தார்.

கல்யாணத்தில் காசி யாத்திரைக்கு கொடுத்த குடையை வைத்து தூஊஊஊஊஊரத்தில் நின்று கொண்டு தரையில் நாலு தடவை டொக்கினேன்.எலியாரின் வால் மட்டும் லேசாக ஆடியது. அப்படியே ஜகா வாங்கி திரும்பவும் கதவை மூடி... அட்டை, செங்கல்,இத்யாதி சடங்குகளையும் பொறுப்பாய் செய்தேன்.

அடுத்த நாளும் குடை.. டொக்.டொக்..டொக்...

ஆனால் நம்ம ஹீரோவிடம் சலனம் துளியும் இல்லை. ஒரு பெரிய ப்ளாஸ்டிக் பைக்குள் குடைக்கம்பியால் அவரை உள்ளே தள்ளி முடிச்சு போட்டு அரை கிலோமீட்டர் தள்ளி கொண்டு போய் எறிந்துவிட்டு ஒரு குரூர புன்னகையுடன் வீடு திரும்பினேன்.

வெற்றிக்களிப்பை சகதர்மினிக்கு ஃபோன் போட்டு பகிர்ந்து கொண்டு அவருடைய ஏகோபித்த பாராட்டையும் பெற்றேன்.

ஆனாலும் ஒவ்வொரு முறை "மூஷிக வாஹன மோதக ஹஸ்த" என்று பிள்ளையாருக்கு ஸ்லோகம் சொல்லும்போதும் லேசாக குற்ற உணர்ச்சி எட்டி பார்ப்பது என்னவோ உண்மை.

நீதி 1: எலிகளுக்கு தெர்மோகோல் உகந்த உணவு இல்லை.

நீதி 2: எலிகள் உணவு, தண்ணீர் இல்லாமல் 3 நாள் வரை உயிரோடு இருக்கும்.