சிங்கை --> சென்னை
பாதிக்கு பாதி விலைக்கு டிக்கட் தருகிறார்கள் புலி மார்க் விமானத்தில் என்று 3 மாதம் முன்பே வாங்கியாகிவிட்டது. ஆனால் தவிச்ச வாய்க்கு தண்ணி தர மாட்டார்கள், லக்கேஜும் ஒருவருக்கு பதினைந்து கிலோதான்.
எத்தனையோ முறை வீட்டிலேயே எடை போட்டு பார்த்து சென்றாலும் செக் இன் சமயத்தில் சப்பை மூக்கு காரிகள் பார்க்கும்போது அரை கிலோ ஒரு கிலோ அதிமாகவே காட்டுகிறது.
பெண்களுக்கு ஒரு கைப்பை இலவசமாக எடுத்து செல்லலாம்.அதிகப்படி லக்கேஜையெல்லாம் ஒரு மத்தள சைஸ் பையில் போட்டு தன் தோளில் மாட்டிக் கொண்டு "ம்ம்... இப்ப எடை போடுங்க.. பார்க்கலாம்" என்றாள் என் மனைவி. சப்பை மூக்கி மேலும் கீழுமாக "பட்ஜெட் ஏர்லைன்ஸுக்கு ஏத்த ஆளுதான்" என்பது போல் ஒரு பார்வை பார்த்துவிட்டு போர்டிங் பாஸை போட்டு கொடுத்து விட்டாள்.
இரவு 8 மணிக்கு கிளம்ப வேண்டிய விமானம் 8:15 ஆகியும் கிளம்பும் அறிகுறியே காணவில்லை. புதிதாக யாரும் ஏறுகிற மாதிரியும் தெரியவில்லை. 08:30 க்கு பைலட்டிடமிருந்து ஒரு அறிவிப்பு. "செக் இன் செய்த பயணிகள் சிலர் இன்னமும் விமானத்திற்கு வந்து சேரவில்லை,எனவே தாமதத்திற்கு மன்னிக்கவும்" என்று.
9 மணி சுமாருக்கு 5 பேர் கொண்ட ஒரு குடும்பம் கை நிறைய மெக்-டொனால்ட்ஸ் பைகளுடன் வந்து சேர்ந்தனர். "ஒம்பது மணிக்கி ப்ளைட்டின்னு நெனச்சி சாப்பாட்டு கடையில ஒக்காந்திட்டம்" என்று பல் குத்திக்கொண்டே விளக்கம் வேறு.
09.30 மணிக்கு போய் சேர்ந்துவிட்டால், ஓண்ணரை மணி நேர இடை வெளியில் மலைக்கோட்டை எக்ஸ்ப்ரெஸ்ஸை தாம்பரத்தில் பிடித்துவிடலாம் என்று முன்பதிவு செய்து வைத்திருந்த என் திட்டம் பனால்!!! என்று சிம்பாலிக்காக சிக்கன் ஏப்பம் விட்டு காண்பித்தார் மெக்-டொனால்ட் குடும்ப பெரிசு ஒருத்தர்.
சென்னையில் இறங்கி வெளியே வந்தால் முகமூடி அணிந்து கொண்டு ஏகப்பட்ட பேர் நிற்கவும், "போச்சுறா, இப்பல்லாம் விமான நிலையத்தையே ஹைஜாக் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க போல" எனறு பயத்துடன் சொன்னேன். பையன்தான் " இல்லப்பா, ஸ்வைன் ஃப்ளூவுக்காக செக் பண்றாங்க" என்று தைரியமூட்டினான். இந்த பார்மாலிட்டியெல்லாம் முடித்து வெளியில் வர பதினோரு மணியே ஆகிவிட்டது.
ஏற்கெனவே சொல்லி வைத்திருந்த டாக்ஸி ட்ரைவர் காத்து கொண்டிருந்ததார்.
"தாம்பரத்துல ஆம்னி பஸ்லாம் நி்க்கற எடத்துக்கு போங்க, ஏதாவது பஸ்ஸ புடிச்சு போயிர்றோம்" என்றேன்.
போகிற வழியில் RR travels - A/C Volvo வை ஒவர் டேக்கி நிறுத்தி, ட்ரைவர் போய் இடம் இருக்கிறதா என்று கேட்டு ஓடி வந்து "சீட்டு இருக்கு சார், வாங்க" என்றார்.
"சின்ன லக்கேஜையெல்லாமும் பின்னாடியே போட்ருங்க சார், பஸ்ல ஒக்காற மட்டும்தான் எடம் இருக்கு" என்று பஸ் ட்ரைவர் சொல்லவும் சந்தேகம் வந்து விசாரித்தபோதுதான் தெரிந்தது ட்ரைவர் கேபினில்தான் உட்கார்ந்து வர வேண்டும் என்பது. (அதுக்கும் ஆளுக்கு 400 ரூபாயாம் - எப்படியெல்லாம் ஏமாத்துறாய்ங்கப்பா..)
திரும்பவும் அத்தனை லக்கேஜையும் கீழிறக்கி,வேறு பஸ்ஸை பிடித்து வந்தது ஒரு பெரிய கதை.
சென்ற முறை திண்டிவனம் வரை மட்டுமே இருந்த 4 வழி சாலை இப்போது திருச்சி வரையிலும் போட்டாகிவிட்டது. நல்ல தரத்துடன் அற்புதமாகவே இருக்கிறது. இடை இடையே பாலங்களுக்கான வேலை நடைபெறுவதால் தடங்கல்கள் இருந்தாலும், பயணம் சுகமாகவே இருக்கிறது. பாலங்களும் முடிந்து விட்டால் உலகத்தரமான சாலைகளாக இருக்கும் என்பது திண்ணம்.

அந்த ஐந்து பேரால் எனக்கு 2000 ரூபாய், 5 மணி நேரம் மற்றும் ஒரு நாள் தூக்கமும் வீண். மற்ற 150 பயணிகளும் என்னவெல்லாம் கஷ்டப்பட்டார்களோ பாவம்.
பி.கு:- பயணத்தின்போதே எழுத வண்டும் என்று நினத்தேன். மடிக்கணிணி மக்கர் செய்துவிட முடியாமல் போய்விட்டது. சிங்கப்பூர் திரும்பி 4 நாட்கள் ஆகிவிட்டது. ஆனால் அலுவலகத்தில் சுவர் முழுக்க ஆணி அடித்து வைத்திருந்தார்கள். பிடுங்கி போட்டுவிட்டு மூச்சு விட இப்பொழுதுதான் நேரம் கிடைத்தது. தில்லி, ஆக்ரா, சிம்லா, மனாலி பயண அனுபவங்களும், புகைப்படங்களும் வரும் இடுகைகளில் தொடரக்கூடும்.



















